மும்பை: நாட்டில் உலகமாக்கல் என்னும் பொருளாதார தாராளமயமாக்கலுக்கு பின்பே வேலைவாய்ப்புகள் அதிக அளவில் உருவாக்கப்பட்டுள்ளதாக தேசிய மாதிரி ஆய்வு மையம் (NSSO) வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 22 ஆண்டுகளில் அதாவது 1991ஆம் ஆண்டுக்கு பின்பே சுமார் 6.2 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதிலும் சுமார் 92 சதவிகித வேலைவாய்ப்புகள் முறைசாரா வேலைவாய்ப்புகள் என்றும் தேசிய மாதிரி ஆய்வு மைய ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் வேலைவாய்ப்பின்மை கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துவிட்டதாக ஒரு சிலரும், அப்படி எல்லாம் இல்லை என்று மறுத்தும் சில அமைப்புகள் புள்ளி விவரங்களை தினந்தோறும் வெளியிட்டு வருகின்றன.
அந்த வகையில் தேசிய மாதிரி ஆய்வு மையம் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் நம் நாட்டின் வேலைவாய்ப்பு சதவிகிதம் பொருளாதார தாராளமயமாக்கலுக்கு பின்புதான் அதிகரித்திருப்பதாக புள்ளி விவரங்களை தெரிவித்துள்ளது.
வேலைவாய்ப்பு விகிதம்
நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் பெரும்பகுதி விவசாய உற்பத்தியை நம்பியே உள்ளது. கடந்த 1990ஆம் ஆண்டுக்கு முன்னர், நம் நாடு விவசாய உற்பத்தியிலும் பொருளாதார வளர்ச்சியிலும் மிகவும் பின் தங்கி இருந்தது. இதனால் நாட்டின் வேலை வாய்ப்பு விகிதமும் குறைந்து காணப்பட்டது.
விவசாய உற்பத்தி
வேலை வாய்ப்பு பெருக வேண்டுமானால், அதற்கு மூல காரணமான விவசாய உற்பத்தியும் அதிகரிக்க வேண்டும். அதோடு பொருளாதார வளர்ச்சியும் அதிகரிக்கும். இவை அனைத்தும் ஒரே சீராக நடைபெற வேண்டுமானால், நாமும் உலகமயமாக்கல் என்னும் பொருளாதார தாராளமயமாக்கலுக்கு ஒப்புக்கொண்டால் முடியும் என்பதை பொருளாதார நிபுணர்கள் உணர்த்தினார்கள்.
பொருளாதார தாராளமயமாக்கள்
பொருளாதார தாரளமயமாக்கல் நாட்டின் விவசாய உற்பத்தியை முறைப்படுத்தி விளைச்சலை பெருக்கி பொருளாதாரத்தை வளப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் தொழில் துறைக்கும் அதிகப்படியான முறைப்படுத்தப்பட்ட மற்றும் முறைசாரா பணியாளர்களை கொண்டு சேர்க்கும் என்றும் அறியப்பட்டது.
குறைந்த பட்ச ஊதியம்
மேலும் தாராளமயமாக்கலுக்கு பின்பே தொழிலாளர்களுக்கான முறையான வேலை நேரம், வேலை செய்யும் இடம் மற்றும் பாதுகாப்பு, அவர்களுக்கான தொழிற்சங்கங்கள், பணியாளர்களுக்கான உரிமைகள், பணியாளர்களின் குறைந்த பட்ச ஊதியம் போன்ற அனைத்தும் முறைப்படுத்தி ஒழுங்குபடுத்தப்பட்டன.
அமைப்பு சாரா வேலைகள்
பொருளாதார தாராளமயமாக்கலுக்கு பின்பே, வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள உழைக்கும் வர்க்கத்தினரின் வாழ்க்தைத் தரம் உயர்ந்துள்ளதாகவும், அவர்களின் வேலையின் தரம் முறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் கடந்த 2011-12ஆம் ஆண்டு வரையிலும் ஒழுங்குபடுத்தப்பட்ட துறைகளில் உள்ள பணிகளில் சுமார் 51 சதவிகிதம் அமைப்புசாரா வேலைகளாகவே இருந்தன.
கடந்த 1999-2000ஆம் ஆண்டுகளில் அமைப்புசாரா துறைகளில் உள்ள பணியாளர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 34.12 கோடியாக இருந்தது. தராளமயமாக்கல் கொண்டுவரப்பட்டதால் வேலை வாய்ப்புகள் அதிகரித்து, அடுத்து வந்த 13 ஆண்டுகளில் சுமார் 13 சதவிகிதம் அதிகரித்து 38.60 கோடியாக கூடியது.
சமூக பாதுகாப்பு
அமைப்புசாரா பணியாளர்களின் எண்ணிக்கையானது 1999-2000ஆம் ஆண்டுகளில் 2.04 கோடியாக இருந்தது. அதுவே 13 ஆண்டுகளில் 81.5 சதவிகிதம் அதிகரித்து 3.71 கோடியாக உயர்ந்தது. மேலும் முறைப்படுத்தப்பட்ட சாதாரண தொழிலாளர்களின் எண்ணிக்கையானது 1999-2000ஆம் ஆண்டில் 6 சதவிகிதத்தில் இருந்து 13 ஆண்டுகளில் சுமார் 9 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
1999-2000 முதல் 2011-12ஆம் ஆண்டுகளில் முறைப்படுத்தப்பட்ட துறைகளில் உருவாக்கப்பட்ட அமைப்பு சாரா பணிகளில் வேலை செய்யும் பணியாளர்களின் ஊதியம் என்பது மிகக்குறைவாகவும் சமூக பாதுகாப்பற்றதாகவும் இருந்ததாக ஆய்வு தெரிவிக்கிறது.