டெல்லி: பயணிகளை தக்க வைக்கவும் புதுப் பயணிகளை கவர்வதற்கும் போட்டி நிறுவனங்களை சமாளிப்பதற்காகவும் ஏர் இந்தியா நிறுவனம், பயணம் செய்வதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பு எடுக்கும் டிக்கெட்டுகளுக்கு 40 சதவிகித தள்ளுபடி சலுகை அளித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது விமான பயணிகளிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
விமான சேவையில் குளறுபடி, போதிய பயணிகள் இல்லாததால் விமான சேவை நிறுத்தம், விமானங்களில் ஏற்படும் திடீர் கோளாறுகளால் சேவை ரத்து செய்தல் என பல்வேறு காரணங்களால் பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ஏற்பட்ட நட்டத்தின் காரணமாகவே இந்த முடிவுக்கு வந்துள்ளதாகவே தெரிகிறது.
பொதுவாக விமானத்தில் பயணம் செய்யவேண்டுமென்றால் முன்பே திட்டமிட்டோ அல்லது பயணம் செய்வதற்கு ஒரு நாளைக்கு முன்பாகவோ டிக்கெட் முன்பதிவு செய்வது வழக்கம். அப்போது தான் டிக்கெட்டின் விலை குறைவாக இருக்கக்கூடும். மாறாக பயணம் செய்யும் நாளிலோ அல்லது விமானம் புறப்படுவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்போ டிக்கெட் எடுத்தால் விலை தாறுமாறாக இருக்கும்.
இந்த விசயத்தில் அனைத்து விமான நிறுவனங்களும் போட்டி போட்டு விலையை ஏற்றுவது வாடிக்கை. விமானம் புறப்படுவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பு எடுக்கும் டிக்கெட்டின் விலையில் ஒரு பழைய விமானத்தை நாம் வாங்கி விடலாம். அத்தோடு ஏதாவது காரணத்தினால் பயணம் செய்ய முடியாமல் போனாலும் கூட அந்த டிக்கெட்டை ரத்து செய்தாலும் பணம் முழுசாக நமக்கு கிடைக்காது.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் விமான சேவையை நிறுத்தியதைத் தொடர்ந்து மற்ற விமான நிறுவனங்கள் இதை சாக்காக வைத்து டிக்கெட் விலையை தாறுமாறாக ஏற்றி வந்தன. விமான நிறுவனங்களின் இந்த அடாவடியால் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் மாற்று ஏற்பாடாக ரயில் பயணத்திற்கு மாறத் தொடங்கிவிட்டனர். இதனால் விமான பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருமானமும் குறைந்து விட்டது.
பயணிகளின் எண்ணிக்கை குறைந்ததை அடுத்து விட்ட இடத்தை பிடிக்க அனைத்து விமான நிறுவனங்களும் யோசிக்கத் தொடங்கிவிட்டன. அதற்கு முன்னோட்டமாக ஏர் இந்தியா விமான நிறுவனம் டிக்கெட் சலுகையை அறிவித்துள்ளது.
விமானம் புறப்படுவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன் டிக்கெட் பதிவு செய்தால் அதற்கு சிறப்பு சலுகையாக 40 சதவிகிதம் தள்ளுபடி சலுகை அறிவித்துள்ளது. அதாவது கடைசி நிமிட தள்ளுபடி என்ற பெயரில் ஏர் இந்தியா நிறுவனம் இந்த புதிய சலுகையை நேற்று அறிமுகம் செய்துள்ளது.
முன்னதாக கடைசி நேர டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு 50 சதவிகித தள்ளுபடி சலுகை வழங்கப்படும் என்று ஏர் இந்தியா விமான உயர் அதிகாரி தெரிவித்தார். ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைமையகத்தில் கடந்த வியாழனன்று நடைபெற்ற வர்த்தக மறுஆய்வு கூட்டத்தில் இந்த சிறப்பு சலுகை முடிவு எடுக்கப்பட்டது என்று அதன் உயரதிகாரிகள் கூறினர்.
பொதுவாக அவரச பயணம் மேற்கொள்ள நினைப்போர் கடைசி நேரத்தில் விமான டிக்கெட் பதிவு செய்யும்போது சாதாரண டிக்கெட்டை விட 40 சதவிகிதம் வரையிலும் கூடுதலாகவே இருக்கும். டிக்கெட்டை ரத்து செய்தாலும் பணம் கிடைக்காது. ஆனால் தற்போது ஏர் இந்தியா அறிவித்துள்ள சலுகை மீண்டும் பயணிகளை ஏர் இந்தியாவின் பக்கம் கொண்டு வரும் என்று ஏர் இந்தியா உயர் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
ஏர் இந்தியா விமான நிறுவனம் அறிவித்துள்ள சலுகையால் அவசர பயணம் மேற்கொள்ள நினைக்கும் அனைத்து பயணிகளுக்கும் உதவிகரமாக இருக்கும் மேலும் இந்த சலுகையால் பயணிகளின் எண்ணிக்கையும் கூடும் என்று ஏர் இந்தியா நிறுவனம் நம்புகிறது.
இதற்கான டிக்கெட்டுகளை ஏர் இந்தியாவின் புக்கிங் கவுண்டர்களிலும், ஏர் இந்தியா மொபைல் ஆப்ஸ், ஏர் இந்தியா இணையதளம் மற்றும் ட்ராவல் ஏஜெண்டுகள் மூலமாகவும் பெற்றுக்கொள்ளலாம்.