வாஷிங்டன்: சீனா உறுதி அளித்தபடி நடந்துகொள்ளாததால் அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கண்டிப்பாக 25 சதவிகித வரி உயர்வு நிச்சயம் அமல்படுத்தப்படும் என்றும் வர்ததக ஒப்பந்தத்தில் கையெழுத்திட அவசரம் ஒன்றும் கிடையாது என்றும் சொல்லி அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சீனாவுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார்.
பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கும்போதே இந்த வரி உயர்வு அமல்படுத்தப்பட்டதால், நேற்று இரவு வரை நீடித்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாகவே பார்க்கப்படுகிறது. இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தகப் போர் மேலும் தீவிரமடையும் என்றும் அதனால் மற்ற நாடுகளிலும் வர்தகம் பாதிக்கும் என்றும் சந்தை நிபுணர்கள் கருதுகின்றனர்.
பாரக் ஒபாமா இருந்த வரையிலும் அனைத்து நாடுகளுடனும் கூடிய வரையிலும் நட்புடனே இருந்துவந்தார். குறிப்பாக இந்தியா மற்றும் சீனாவுடன் நட்பு பாராட்டியே வந்தார். அதிலும் சீனாவுடன் வர்த்தக உறவில் பட்டும் படாமலும் இருந்த வந்தார். ஆனால் டொனால்ட் ட்ரம்ப் வந்தவுடன் எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்பதற்கு ஏற்ப ஏட்டிக்கு போட்டியாகவே நடக்க ஆரம்பித்தார்.
எஸ்.பி.ஐ கடனுக்கான வட்டிவிகிதம் குறைப்பு.. இந்த மாத இ.எம்.ஐ குறையுமா?
வர்த்தகப்பற்றாக்குறை
இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மதிப்பை விட ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் மதிப்பு குறைவாக இருந்தது. இதனால் அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறை கூடிக்கொண்டே சென்றது. இதற்கு காரணம், இந்த இரு நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்படும பொருட்களுக்கான இறக்குமதி வரி மிகக்குறைவாக இருந்ததே.
இறக்குமதி வரி
இதனால் கடுப்பான ட்ரம்ப் முதலில் இந்தியா மீது கைவைக்க நினைத்தார். அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஹார்லி டேவிட்சன் பைக் உள்பட 29 வகையான பொருட்களுக்கு 50 முதல் 120 சதவிகித வரி விதிக்கப்படுவதற்கு ஆட்சேபம் தெரிவித்ததோடு, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உருக்கு மற்றும் அலுமினியப் பொருட்களுக்கு கூடுதலாக 25 சதவிகித இறக்குமதி வரி விதித்தது.
பேச்சுவார்த்தை
இறக்குமதி வரியை குறைப்பது தொடர்பான இரு நாடுகளும் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டதால் வரி உயர்வு தற்காலிகமாக வரும் 16ஆம் தேதி வரையிலும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த மாத இறுதியில் புதிய ஆட்சி மலர்ந்த உடன் இது பற்றி புதிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.
சீனா பொருட்களுக்கு இறக்குமதி வரி
இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக் உடன்பட்டாலும், நம் அண்டை நாடான சீனாவை வேறு மாதிரியாகவே அமெரிக்கா பார்க்கிறது. இந்தியாவைக் காட்டிலும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மதிப்பு மிக அதிகமாக இருந்தது. அதோடு சீனாவில் இறக்குமதி செய்யப்படும் அமெரிக்க பொருட்களுக்கு வரி அதிகமாக இருந்ததாலேயே வர்த்தகப் பற்றாக்குறை அதிகமாக இருப்பதாக அமெரிக்கா கணித்தது.
ட்ரம்ப் அதிரடி
இதையடுத்து வர்த்தகப் பற்றாக்குறையை சரி செய்யும் விதமாக சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு நாங்களும் அதிக வரிவிதிப்போம் என்று ட்ரம்ப் குண்டைப்போட்டார். இதனால் இறங்கி வந்த சீனா அமெரிக்க பொருட்களுக்கு விதிக்கப்படும் இறக்குமதி வரியை சீனா உறுதியளித்து இருந்தது. இரு தரப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்த நாள் குறிக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சீன துணை அதிபர் லியூ ஹீ தலைமையிலான குழுவை அமெரிக்கா அனுப்ப முடிவு செய்தது. பேச்சுவார்த்தை மே மாதம் 10ஆம் தேதி என முடிவு செய்யப்பட்டது.
வரியை குறைக்காத அமெரிக்கா
திடீரென டொனால்ட் ட்ரம்ப், சீனா உறுதியளித்தபடி அமெரிக்க பொருட்களுக்கு இறக்குமதி வரியை குறைக்கவில்லை. எனவே, நாங்களும் சீனப் பொருட்களுக்கு இறக்குமதி வரியை உயர்த்துவோம் என்று சொல்லிவிட்டு சுமார் 13.98 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 5700 பொருட்களின் இறக்குமதி வரியை 10 முதல் 25 சதவிகிதம் வரையிலும் உயர்த்தி உத்தரவிட்டார். இந்த வரி உயர்வு மே 10ஆம் தேதி (நேற்று) முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவித்தார்.
பேச்சுவார்த்தை தோல்வி
இந்நிலையில் சீன துணை அதிபர் லியூஹீ தலைமையிலான குழு அமெரிக்க வர்ததக பிரதிநிதி ராபர்ட் லைட்திசர் மற்றும் கருவூலக செயலாளர் (Treasury Secretary) ஸ்டீவன் ம்நுசின் (Steven Mnuchin) உள்ளிட்ட உயரதிகாரிகளை தலைநகர் வாஷிங்டனில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது. இரு தரப்பக்கும் இடையில் நேற்று நள்ளிரவு வரை நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
வரி உயர்வு அமல்
ஆனாலும், ஏற்கனவே அறிவித்தபடி, சீனப்பொருட்களுக்கான இறக்குமதி வரி உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்தது. இந்த வரி உயர்வானது புதிதாக இன்று முதல் சீனாவிலிருந்து ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் ஏற்கனவே ஏற்றுமதி செய்யப்பட்டு கப்பல்களில் வரும் பொருட்களுக்கு இது பொருந்தாது என்றும் சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
பதிலடி கொடுக்க சீனா முடிவு
பேச்சுவார்த்தை நடக்கும்போதே சீனப் பொருட்களுக்கு இறக்குமதி வரி உயர்த்தப்பட்டதை அறிந்த சீனா எரிச்சலடைந்தது. அமெரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று சீனாவும் பதிலுக்கு மார் தட்டிக் கொண்டிருக்கிறது. ஆனால் அது எந்த வகையில் என்பதை தெரிவிக்கவில்லை.
சந்தை நிபுணர்கள் கருத்து
அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கை சர்வதேச நிதிச் சந்தையில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். வரும் நாட்களில் சர்வதேச அளவில் நிதிச் சந்தையில் முதலீடு செய்துள்ளவர்கள் முதலீடுகளை அதிக அளவில் விற்றுவிட்டு வெளியேறக்கூடும் என்று சந்தை நிபுணர்கள் கருதுகின்றனர்.
அக்ரிமெண்டுக்கு அவசரமில்லையாம்
இரு தரப்புக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் அடுத்து என்ன நடக்கும் என்ற நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மிகச் சாதாரணமாக, ஒப்பந்தம், கையெழுத்தக்கு எல்லாம் இப்போதைக்கு ஒன்றும் அவசரமில்லை, பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று கூலாக தெரிவித்தார்.