டெல்லி : நடப்பு மாதத்தில் இதுவரை அன்னிய முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளில் ரூ.3,207 கோடியை விலக்கிக் கொண்டுள்ளனர். இதற்கு காரணம் சர்வதேச அளவில் நிகழ்ந்து வரும் வர்த்தக போரும் ஒரு வகையில் காரணமே என்றாலும், வரப்போகும் தேர்தல் முடிவுகளும் காரணமாக கருதப்படுகிறது.
இந்திய பங்குச்சந்தைகளில் அன்னிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து அதிகளவு முதலீடு செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தை மற்றும் கடன் பத்திரங்களில் மொத்தம் ரூ.11,182 கோடி முதலீடு செய்தனர். இதுவே கடந்த மார்ச் மாதத்தில் ரூ.45,981 கோடியாக உயர்ந்தது.
பின்னர் இது ஏப்ரல் மாதத்தில் ரூ.16,093 கோடியாக குறைந்து முதலீடு செய்திருந்தனர். இவ்வாறு தொடர்ந்து 3 மாதங்களாக முதலீடுகள் குவிந்த நிலையில், நடப்பு மாதமான மே மாதத்தில் அன்னிய முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை வெளியேற்றியுள்ளனர் என்பது கவனிக்கதக்கது.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் கடந்த 2ம் தேதியில் இருந்து 10ம் தேதி வரை மட்டும் அன்னிய முதலீட்டாளர்கள் ரூ.1,344.72 கோடி முதலீடு செய்தனர். ஆனால் இதுவே கடன் சந்தையில் இருந்து ரூ.4,552.20 கோடியை வெளியேற்றியுள்ளனர். இதன்மூலம் நிகர வெளியேற்றம் ரூ.3,207.48 கோடியாக உள்ளது.
இதற்கு காரணம் ஈரானில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய சலுகை காலம் முடிந்து விட்ட நிலையில், தற்போது ஜீன் வரையில் அரசு நீடித்திருக்கிறது. எனினும் இது தற்காலிக முடிவே தவிர இது ஒரு நிரந்தர தீர்வு அல்ல என்றும் கருதப்படுகிறது. இந்த நிலையில் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் அடையலாம், இது இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாக்குறையை மேலும் அதிகரிக்கும் என்ற சூழ்நிலையே நிலவி வருகிறது.
இதோடு, ரூபாய் மதிப்பு சரிந்தால் பணவீக்கமும் அதிகரிக்கும் என்பதால் முதலீட்டாளர்கள் உஷாராக இருந்து வருகின்றனர். அதோடு தற்போது நடந்து கொண்டிருக்கும் மக்களவை தேர்தலில் முடிவுகள் எப்படி இருக்குமோ என்ற அச்சம் முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவி வருகிறது. இது மட்டும் அல்லாமல் அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தக போருக்கு இன்னும் சுமூக தீர்வு ஏற்பட்டதாக தெரியவில்லை. இது போன்ற பல காரணங்கள் உண்டு முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டை விலக்கிக்கொள்ள. எனினும் மேற்கண்ட காரணங்கள் முக்கியமாக பார்க்கப்படுகின்றன என்றும் முதலீட்டு நிபுணர்கள் கூறுகின்றனர்.