திருவனந்தபுரம் : கேரளா மாநிலத்தை சேர்ந்த தாயும் மகளும், கடன் கொடுத்த வங்கி மிரட்டியதால் கல்லூரி மாணவி தாயாருடன் சேர்ந்து தீக்குளித்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரம் அருகே நெய்யாற்றின்கரையைச் சேர்ந்தவர் சந்திரன். இவரின் மனைவி லேகா. இவர்களின் ஒரே செல்ல மகள் வைஷ்ணவி. சந்திரன் வளைகுடா நாட்டில் வேலை பார்த்து வந்தபோது, வீடு கட்டுவதற்காக கனரா வங்கியில் ரூ.5 லட்சம் கடன் வாங்கியுள்ளாராம்.
ஒரே மகள் என்பதால் சொத்துகள் எல்லாமே மகள் பெயரிலேயே செய்வதுதான் இந்த தம்பதியின் வழக்கமாம். இந்த நிலையில் புதிய வீட்டையும் வைஷ்ணவி ' என்ற பெயரிலேயே ஆசை ஆசையாகக் கட்டி வந்துள்ளனர். ஆனால் இவர்களின் போதாத நேரம், வளைகுடாவில் வேலை பார்த்து வந்த சந்திரனின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதனால், சந்திரன் கேரளாவுக்கே திரும்பிவிட்டாராம் அதோடு திரும்ப வளைகுடாவிற்கு செல்லாமல் இங்கே, கிடைத்த வேலையைச் செய்து வந்துள்ளார்.
வங்கி நெருக்கடி
எனினும் மகள் பெயரில் கட்டி வரும் வீட்டுக்கு இதுவரை ரூ.8 லட்சம் செலுத்தியுள்ள நிலையில், மேலும் ரூ.6.80 லட்சம் செலுத்த வேண்டுமென்று வங்கி அதிகாரிகள் நெருக்கடி கொடுத்து வந்துள்ளனர். இதனால் சந்திரன் மகள் பெயரில் தாங்கள் கட்டி வந்த வீட்டையும் அதைச் சுற்றி நிலத்தையும் விற்க ரூ. 24 லட்சத்துக்குப் பேரம் பேசியுள்ளார்.
சட்ட நடவடிக்கை எடுக்க போவதாக மிரட்டல்
அதோடு தங்களுக்குச் சொந்தமான நிலத்தை விற்று மே 14-ம் தேதி கடனை அடைத்து விடுவதாகச் சந்திரனின் மனைவி லேகா வங்கி அதிகாரிகளுக்கு உறுதி அளித்திருந்தாராம். ஆனால், நிலத்தை நினைத்ததுபோல விற்க முடியவில்லை. இதனால், வங்கி அதிகாரிகள், லேகாவுக்கு தொடர்ச்சியாகப் போன் செய்து, சொத்துகளைப் பறிமுதல் செய்யப் போவதாகவும் அதற்கான சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டதாக மிரட்டியுள்ளனர்.
மானமே போய்விட்டதாக தற்கொலை
இதனால், பயத்தில் இருந்த லேகா மானம் மரியாதை போய் விட்டதாகக் கருதினார். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமையும் வங்கியில் இருந்து மீண்டும் போன் செய்து மிரட்டியுள்ளனர். இதனால் லேகா மகள் வைஷ்ணவியுடன் தீக்குளித்தார். இதை அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே வைஷ்ணவி மரணமடைந்தார். ஆனால் லேகா தீக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துள்ளார்.
வங்கி அதிகாரிகளால் டார்ச்சர்
வங்கி அதிகாரிகள் செய்த டார்ச்சரால் தாயும் மகளும் தற்கொலை செய்துகொண்டது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெய்யாற்றின்கரை கனரா வங்கி முன் மக்கள் போராட்டம் நடத்தினர். வங்கி அதிகாரிகளைக் கைது செய்ய வேண்டுமென்றும் வலியுறுத்தினர்.
எழுத்து பூர்வமாக உத்தரவாதம்
இது குறித்து லேகாவின் கணவர் சந்திரன் கூறுகையில், ரூ.8 லட்சம் வரை கடனை அடைத்து விட்டோம். ஆனால், வங்கியிலிருந்து மேலும் 6.80 லட்சம் செலுத்த கூறுகின்றனர். அதோடு எங்கள் நிலத்தையும் வீட்டையும் கைப்பற்றச் சென்றனர். அப்போது என் மனைவி லேகா 14-ம் தேதி கட்டுவதாக எழுத்துபூர்வமாக உத்தரவாதம் அளித்திருந்தார்.
கடைசி நேரத்தில் காலை வாரி விட்டனர்.
ஆனால் நிலத்தை வாங்க ஒப்புக்கொண்டவர்கள் கடைசி நேரத்தில் முடிவை மாற்றியதால் எங்களால் பணத்தைச் செலுத்த முடியாமல் போய் விட்டது. ஆனால் இப்போது என் மனைவி மகளை இழந்துவிட்டேன் என்று கதறியிருக்கிறார்.
பிரச்சனையை பேசி தீர்த்துக் கொள்ளலாம்
இந்த கட்டுரை அனைவருக்கும் ஒரு பாடமே. எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் பேசி தீர்த்துக் கொள்ள முடியும் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அதோடு முடிவில்லாத பிரச்சனை என்பது எதுவும் கிடையாது. அது தொழிலாக இருந்தாலும் சரி, வேறெந்த பிரச்சனையாக இருந்தாலும் சரி.
அதற்கென வரைமுறை உண்டு
ஒரு வங்கியோ நிதி நிறுவனமோ உங்களது சொத்தை அவ்வளவு எளிதில் ஜப்தி செய்ய முடியாது. அதற்கென காலமும் உண்டு. சரியான முறையில் கடன் பயனாளர்களை முன்னரே தெரிவித்திருக்க வேண்டும். முன்னரே முறையான நோட்டீஸ் கொடுக்கப்பட வேண்டும். இதற்கென சில வரைமுறைகளூம் உண்டு.
வங்கி அதிகாரிகளின் கூட்டமைப்பு கண்டனம்
இந்த நிலையில் தாய் மற்றும் மகளின் தற்கொலை தொடர்பாக கனரா வங்கியின் கிளை மேலாளர் மீது வழக்கு தொடுக்கவும், அனைத்து இந்திய வங்கி அதிகாரிகளின் கூட்டமைப்பு (AIBOC) கேரள மாநிலக் குழு கண்டனம் தெரிவித்ததுள்ளது.
வெறும் சட்டபூர்வமான நடவடிக்கையே
எனினும் இது குறித்து வங்கி அதிகாரி கூறுகையில், வங்கிக் கடன்கள் திரும்பப் பெற சட்டப்பூர்வ நடைமுறைகளை அமல்படுத்த முயற்சித்ததாகவும், ஆனால் இந்த தற்கொலை துரதிருஷ்டவசமானது என்றும், இதற்கு தான் பொறுப்பாளி இல்லை பதில் கிடைத்திருக்கிறதாம்.