அமெரிக்காவிலிருந்து கிடைக்கும் வருமானத்தை உத்தேசித்தே கால தாமதம் ஏற்படுவதை தவிர்க்க சுந்தரம் கிளேட்டன் நிறுவனம் அமெரிக்காவிலேயே வாகன உதிரிபாகங்களை தயாரிப்பதற்கான ஆலையை தொடங்க முடிவெடுத்துள்ளது.
சென்னை: டிவிஎஸ் சுந்தரம் குழுமத்தின் அங்கமான சுந்தரம் கிளேட்டன் லிமிடெட் நிறுவனம் அமெரிக்காவிலேயே வாகன உதிரிபாகங்களை தயாரிப்பதற்கான ஆலையை தொடங்கியுள்ளது. அமெரிக்க வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக, தன்னுடைய முதல் வெளிநாட்டு உற்பத்தி ஆலையை அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தில் சுமார் 630 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கியுள்ளது.
சுந்தரம் கிளேட்டன் உற்பத்தி செய்யும் பொருட்களில் சுமார் 60 சதவிகிதம் வரையிலும் அமெரிக்காவுக்கே ஏற்றுமதியாகிறது. அதோடு இந்நிறுவனத்தின் வருவாயில் சுமார் 40 சதவிகிதம் வரையிலும் அமெரிக்க சந்தையின் பங்களிப்பாகும். ஆகவே இதை உத்தேசித்தே அமெரிக்காவில் புதிய ஆலையை தொடங்க இந்நிறுவனம் முன்வந்துள்ளதாக தெரிகிறது.

சுந்தரம் கிளேட்டன் நிறுவனம், டிவிஎஸ் சுந்தரம் குழுமத்தின் ஒரு அங்கமாகும். இந்நிறுவனம் கடந்த 1962ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் கிளேட்டன் தேவந்தர் ஹோல்டிங்ஸ் பிஎல்சி (Clayton Dewandre Holdings PLC) நிறுவனத்தின் உதவியோடு தொடங்கப்பட்டது. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வாகனங்களுக்கு தேவையான உதிரிபாகங்களை தயாரித்து வழங்கி வருகின்ற நிறுவனமாகும்.
இந்நிறுவனம் தன்னுடைய தயாரிப்புகளை உள்நாட்டில் மட்டும் இல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறது. இதன் முக்கிய வாடிக்கையாளராக அமெரிக்கா தொடர்ந்து இருந்து வருகிறது. இந்நிறுவனத்தின் மொத்த ஏற்றுமதியில் சுமார் 60 சதவிகிதம் அமெரிக்காவுக்கு செல்கிறது. மேலும் இதன் வருவாயில் சுமார் 40 சதவிகிதம் வரையிலும் அமெரிக்க ஏற்றுமதியின் மூலமே கிடைக்கிறது.
அமெரிக்காவிலிருந்து கிடைக்கும் வருமானத்தை உத்தேசித்தே கால தாமதம் ஏற்படுவதை தவிர்க்க சுந்தரம் கிளேட்டன் நிறுவனம் அமெரிக்காவிலேயே வாகன உதிரிபாகங்களை தயாரிப்பதற்கான ஆலையை தொடங்க முடிவெடுத்தது.
அதன்படி, சுந்தரம் கிளேட்டன் நிறுவனம் தன்னுடைய முதல் வெளிநாட்டு உற்பத்தி ஆலையை அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தில் ரிட்ஜ்வில்லே (Ridgeville) தொழிற்பூங்காவில் 50 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 630 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தன்னுடைய உற்பத்தி ஆலையை தொடங்கி உள்ளது.
இங்கு ஆலை தொடங்கப்பட்டதால் வட அமெரிக்காவில் உள்ள தன்னுடைய வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் என்று இந்நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர் லட்சுமி வேணு தெரிவித்தார்.
முதல் வெளிநாட்டு உற்பத்தி ஆலையை தொடங்கியது குறித்து மேலும் அவர் கூறியதாவது, தெற்கு கரோலினா மாகாணத்தில் உற்பத்தி ஆலை தொடங்கப்பட்டதன் மூலமாக இப்பிராந்தியத்தில் உள்ள வாடிக்கையாளர்களுக்கும் வட அமெரிக்காவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கும் பொருட்களை விரைவாக கொண்டு சேர்க்க முடியும். அதோடு இங்கு ஆலை தொடங்கப்பட்டதன் மூலம் சர்வதேச சப்ளை நிறுவனமாக உயர்ந்துள்ளது என்றும் லட்சுமி வேணு தெரிவித்தார்.
சுந்தரம் கிளேட்டன் நிறுவனம் தன்னுடைய உற்பத்தியை வரும் செப்டம்பர் மாதம் முதல் தொடங்க உள்ளது. இதனுடைய உற்பத்தி திறன் முதலாம் ஆண்டில் சுமார் 1000 டன்னாக இருக்கும் என்றும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 10000 டன்களாக உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் லட்சுமி வேணு தெரிவித்தார்.
இந்த ஆலையில் உயர் அழுத்த திறன் கொண்ட டை-காஸ்ட் (High Pressure die-cast) மற்றும் ஈர்ப்பு தன்மை உடைய டை-காஸ்ட் (Gravity die-cast) போன்ற உதிரி பாகங்களை உற்பத்தி செய்யப்போவதாக தெரிவித்துள்ளது. இவை அனைத்தும் வாகன உதிரிபாகங்கள் தயாரிக்க பயன்படுவதாகும்.
தெற்கு கரோலினா பகுதியில் ஆலையை அமைப்பதற்கு, அமெரிக்காவின் வர்ததக மேம்பாட்டு அமைப்பும், சென்னையில் உள்ள வர்த்தக சேவை மையமும் இணைந்து முக்கிய பங்கு வகித்தன. இங்கு அதிக அளவில் வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறவனங்கள் உள்ளன. அதோடு இந்தப் பகுதி வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. எனவே தான் இங்கு வாகன உதிரபாகங்களை தயாரிக்கும் நிறுவனம் அமைவது உபயோகமாக இருக்கும் என்றும் லட்சுமி வேணு தெரிவித்தார்.
சுந்தரம் கிளேட்டன் நிறுவனம் சமீபத்தில் தமிழ்நாட்டில் சென்னைக்கு அருகில் ஓரகடம் பகுதியில் வாகன உதிரிபாக உற்பத்தி சாலையை தொடங்கி உள்ளது. இந்நிறுவனம் கடந்த 2018-19ஆம் நிதியாண்டில் சுமார் 1932.94 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications