புற்று நோயை குணப்படுத்தும் 9 வகையான மருந்துகளின் விலையை சுமார் 87 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் விலைக் குறைப்பு நடவடிக்கையால் இந்தியாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 22.5 லட்ச
டெல்லி: உயிர்க் கொல்லி நோயான புற்று நோயை குணப்படுத்தும் 9 வகையான மருந்துகளின் விலையை சுமார் 87 சதவிகிதம் குறைத்து மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டில் மட்டுமே சுமார் 8 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர். மத்திய அரசின் விலைக் குறைப்பு நடவடிக்கையால் இந்தியாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 22.5 லட்சம் பேர் பயனடைவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இன்றைக்கு உலகை பயமுறுத்தும் நோய்களில் முக்கியமான நோய் புற்றுநோயாகும். பெரும்பான்மையான மக்கள் தங்களுக்கு இந்த நோய் வரவே கூடாது என்பதுதான். அப்படியே வந்துவிட்டாலும், ஆரம்பநிலையில் கண்டுபிடித்துவிட்டால் எளிதில் குணப்படுத்திவிடமுடியும்.
அதே சமயத்தில் புற்று நோய் வந்துவிட்டாலே நமக்கு மரணம் நிச்சயம் என்று படித்தவர்கள் கூட நம்பி விரக்தியடைவதும் உண்டு. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட மருத்துவ வசதிகள் பெருகிவிட்ட இன்றைய காலகட்டத்தில முற்றிய நிலையில் உள்ள புற்றுநோயைக் கூட குணப்படுத்துவதற்கான அனைத்து மருந்துகளும் வந்துவிட்டன.
புற்று நோயை குணப்படுத்தும் மருந்துகள் பல வகைகள் வந்துவிட்டாலும் அதற்கான விலைதான் பாமர மக்கள் வாங்கவே முடியாத எட்டாத உயரத்தில் உள்ளன. இதனால் பெரும்பாலான பாமர மக்கள் இந்த மருந்தை வாங்குவதற்கு வழி இல்லாமல் தொண்டு நிறுவனங்களை நாடுவதுண்டு. தொண்டு நிறுவனங்களும் ஏழை மக்களுக்கு குறிப்பிட்ட அளவில் சலுகை விலையில் புற்று நோய்க்கான மருந்துகளை வாங்கி இலவசமாக அளிப்பதும் உண்டு.
ஆனால், புற்று நோயை குணப்படுத்தும் மருந்துகள் உட்பட அனைத்து மருந்துகளும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருந்துக் கடைகளில் (Generic Medical Store) விலை மிகக் குறைவாகவே கிடைக்கும். ஆனால் இந்த வகையான மருந்துக் கடைகளைப் பற்றிய விளம்பரங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில்லை. இதனால் சாதாரண பாமர மக்களுக்கு இந்த வகையான மருந்துக்கடைகளைப் பற்றிய விசயம் பெரிய அளவில் சென்றடையவில்லை.
அது மட்டுமில்லாமல், அரசு மருத்துவ மனைகளும் இந்த மருந்துகளைப் பற்றிய விவரங்களை பாமர மக்களுக்கு எடுத்துச் செல்வதுமில்லை. இதனைப் பயன்படுத்தி தனியார் மருந்துக் கடைகளும் உயிர்காக்கும் அரிய வகை மருந்துகளை மனசாட்சியே இல்லாமல் கொள்ளை லாபத்தில் விற்று பணத்தை குவித்து வருகின்றனர். இதை தமாதமாக உணர்ந்து கொண்ட மத்திய அரசு, தற்போது பொது மக்களின் குறையை நிவர்த்தி செய்யும் விதமாக புற்றுநோயை குணப்படுத்தும் மருந்துகளின் விலையை குறைக்க முடிவெடுத்துள்ளது.
புற்று நோயை குணப்படுத்தும் 9 வகையான மருந்துகளின் விலையை சுமார் 87 சதவிகிதம் வரையில் குறைக்க முன்வந்துள்ளதாக அறிவித்துள்ளது. மத்திய அரசின் ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (National Pharmaceutical Pricing Authority) புற்று நோயை குணப்படுத்தும் மருந்துகளின் விலையை குறைத்து கடந்த 15ஆம் தேதியன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மருந்து விலை குறைப்பு அமலுக்கு வந்ததை கண்டிப்பாக பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று மருந்து உற்பத்தியாளர்களுக்கும் மருத்துவ மனைகளுக்கும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள சில்லறை விற்பனையாளர்கள், விற்பனைப் பிரதிநிதிகள், மருந்து தயாரிப்பாளர்கள் மற்றும் மருத்துவ மனைகளிடம் நடத்திய ஆய்வின் அடிப்படையில் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதற்கு முன்னர் சுமார் 22 ஆயிரம் ரூபாய் செலவழித்து வாங்கிய பெம்எக்செல் (Pemxcel) அல்லது பெமரெக்சட் (Pemtrexed) 500 மில்லிகிராம் ஊசி மருந்தின் விலை 2 ஆயிரத்து 800 ரூபாய் விலைக்கே கிடைக்கும். மேலும் 100 மில்லிகிராம் ஊசி மருந்தின் விலை 800 ரூபாய்க்கே கிடைக்கும்.
இதேபோல், 10 மாத்திரைகள் கொண்ட 100 மில்லிகிராம் எர்லோட்டினிப் (Erlotinib) மருந்தின் விலை முன்பு சுமார் 6 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனையானது. மத்திய அரசின் விலைக்குறைப்பால் இனி அது ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனையாகும்.
மத்திய அரசின் விலைக் குறைப்பு உத்தரவினால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 22.5 லட்சம் பேர் பயனடைவார்கள். சாதாரண பாமர மக்கள் மாதந்தோறும் இதற்காக செலவிடும் தொகை பெருமளவில் குறையும்.


Click it and Unblock the Notifications