டெல்லி : சர்வதேச அளவில் ஏடிஎம்களின் பயன்பாடு வர வர குறைந்து கொண்டே வருகிறதாம். அட ஆமாங்க இது இப்படியே போனா ஏடிஎம்களுக்கு விரைவில் நாம டாடா கட்ட வேண்டியதுதான்.
அமெரிக்காவின் பொருளாதார வல்லுனரான பால் வோல்கர், ஒரு உரையாற்றலின் போது, ஏ.டி.எம்கள் தான் நிதிய சமூகத்தின் முன்னேற்றத்திற்கான கடைசி கண்டுபிடிப்பாக இருக்கும் என்று கூறியுள்ளராம். அட ஆமாங்க இனி ஏ.டி.எம்கள் உபயோகம் இருக்காதாம்.
நாளடைவில் ஏ.டி.எம்களுக்கு நாம் டாடா சொல்ல வேண்டிய நேரம் வந்திருச்சாம். அதிலும் நாளுக்கு நாள் ஏ.டி.எம்களின் உபயோகம் குறைந்து வருவதோடு, வங்கிகளில் சென்று பணபரிவர்த்தனை செய்வதும் குறைந்து வருகிறதாம். இதனால் வங்கிகளுடைய கிளைகளின் எண்ணிக்கையே நாளுக்கு குறைந்து கொண்டே வருதாம்.
சர்வதேச அளவில் பயன்பாடு குறைந்துள்ளது
இதுகுறித்து ஆலோசனை நிறுவனமான ஆர்.பி.ஆர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் பிரேசில் உள்ளிட்ட உலகின் ஐந்து மிகப்பெரிய சந்தைகளிலும் 1% வீழ்ச்சியை கண்டுள்ளதாம். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், வழக்கமான வாடிக்கையாளர்களில் குறிப்பிட்ட பகுதியினர் மொபைல்பரிவர்த்தனைக்கு மாறியுள்ளனராம்.
அதிகரிக்கும் மொபைல் வாடிக்கையாளர்கள்
இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவெனில் அமெரிக்காவின் முக்கிய வங்கி கடந்த ஆண்டு அதன் கிளைகளை 2% குறைத்துள்ளதாம். அதோடு 10.8 பில்லியன் டாலரை தொழில் நுடபத்திற்காக ஒதுக்கியுள்ளதாம். இதோடு வாடிக்கையாளர்களையும் இந்த முறையில் 5% உயர்ந்துள்ளனராம். அதிலும் மொபைல் வாடிக்கையாளர்கள் 11% அதிகரித்துள்ளனராம்.
ஏடிஎம்களுக்கு டாட்டா காட்ட வேண்டிய நேரம்
எப்படியோ ஏ.டி.எம்களுக்கு டாடா காட்ட வேண்டிய நேரம் இன்னும் வெகு தொலைவில் இல்லை என்பதே உண்மை. சரி எப்படி இந்த ஏ.டி.எம் கண்டுபிடிக்கப்பட்டது.இதன் பின்னனி என்ன கொஞ்சம் தெரிஞ்சுக்கலாமா? அட ஆமாங்க ஒவ்வொரு இயந்திரத்துக்கும் ஒரு வரலாறு உண்டு இல்லையா? அதுபோல தான் ஏ.டி.எம்களுக்கும். ஸ்காட்லாந்தை சேர்ந்த ஜான் ஷெப்பர்ட் போரோன் என்பவர் தனது மனைவியின் பிறந்த நாள் பரிசு வாங்க வங்கிக்கு பணம் எடுக்க சென்ற போது வங்கி நேரம் முடிந்து விட்டது என்று கூறிவிட்டனராம்.
சாக்லேட் வெண்டிங் மெஷில் உருவானது ஏடிஎம்
கடுப்பான ஜான் தனது மனைவிக்கு கையில் இருந்த மிச்ச காசுகளை வைத்து சாக்லேட் வெண்டிங் மெஷினில் சாக்லேட்களை வாங்கிச் சென்றாராம். காசுகளை கொடுத்தவுடன் சாக்லேட் கொட்டுவதை பார்த்ததும் மனசனுக்கு மூளையில் பளிரென்று உதித்ததாம் ஏடிஎம் ஐடியா.
முதல் ஏடிஎம் பார்க்லேஸ் வங்கியில் வைக்கப்பட்டது
இவ்வாறு இவர் உருவாக்கிய முதல் ஏடிஎம் இயந்திரம் 1969ஆம் ஆண்டு லண்டனில் உள்ள பார்க்லேஸ் வங்கியில் வைக்கப்பட்டதாம். விரும்பிய நேரத்தில் பணத்தை எடுக்க முடியும் என்ற ஆச்சரிமும் மக்களிடையே பரவியது. அதே நேரத்தில் ஏ.டி.எம் சேவை மிகுந்த வரவேற்பையும் பெற்றதாம்.
கொஞ்சம் கொஞ்சமாக குறையும் ஏடிஎம் சேவை
பல நேரங்களில் புனித தலமாக மாறிய ஏ.டி.எம் அனைத்து மதங்களின் புனித தலங்களின் காண முடியும். கோவில் இறைவனைத் தரிசிக்க வரிசையில் நின்றிருப்பதை நாம் பார்த்துள்ளோம். ஆனால் பண பரிவர்த்தனைக்காக அன்றாடம் ஏடிஎம்களில் கூட்டத்தை பார்க்க முடிகிறது. ஆனா இப்ப இந்த கூட்டமும் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கியுள்ளது.
சிட்டி பேங்க் & ஹெச்.எஸ்.பி.சி அறிமுகம்
சரி இந்தியாவில் எப்படி? ஏ.டி.எம் வழக்கத்திற்கு வந்தது? எப்போது? சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னால்தான் இந்தியாவில் ஏடிஎம் முதன்முதலாக அறிமுகம் செய்யப்பட்டது. அதுவும் சிட்டி பேங்க் மற்றும் ஹாங்காங் அண்ட் பேங்கிங் கார்ப்பரேஷன் என்று கூறப்படும் HSBC வங்கிகள்தான் முதன்முதலில், 1987ல் மும்பையில் முதன்முதலாக ஏ.டி.எம் மையங்களைத் தொடங்கினவாம். ஆரம்பத்தில் இந்த ஏ.டி.எம் -களில் நாள் ஒன்றுக்கு ஒருவர் ரூ.3000 மட்டுமே எடுக்கலாம் என்ற கட்டுப்பாடு இருந்ததாம். ஆனால் இது லட்சக் கணக்கில் எடுத்துக் கொள்ளும் வசதிகள் வந்து விட்டன.
ஏடிஎம் உற்பத்தி
ஏடிஎம்-கள் நவீன டெக்னாலஜி உதவியுடன் அதன் வடிவங்கள் மற்றும் இயங்கும் திறன்கள் அவ்வப்போது மாற்றப்பட்டே வந்தது. அதோடு ஏடிஎம்கள் மூலம் பணம் மட்டுமின்றி மற்ற பொருட்களையும் வழங்கும் முறையும் பரிசோதனை செய்யப்பட்டது. அமெரிக்கா, பிரிட்டன், மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஏடிஎம் மிஷின்களை தயாரிப்பதில் முன்னணி நாடுகளாக இருந்தன. அதன் பின்னர் ஜப்பான் நாடும் இதில் இணைந்து நவீன வகையான ஏடிஎம் மிஷின்களை தயார் செய்து உலகின் பல நாடுகளுக்கு சப்ளை செய்தும் வருகிறது.
குறிப்பிட்ட காலத்திற்குள் பிரபலம்
ஏ.டி.எம்-இன் அபரீதமான வளர்ச்சி குறிப்பிட்ட காலத்திற்குள்ளேயே மிக பிரபலமடைந்தது. 1967ல் அறிமுகம் செய்யப்பட்ட ஏ.டி.எம் மிஷின் மூன்றே வருடங்களில் அமெரிக்கா உள்பட உலகின் பல நாடுகளில் புகழ் பெற்றது என்றால் பாருங்களேன். டெலிபோன் தொழில்நுட்பத்தை இணைத்து அமெரிக்காவில் கடந்த 1970ஆம் ஆண்டுகளில் ஏ.டி.எம் மிஷின்கள் இயங்க ஆரம்பித்தன.
ஸ்மார்ட் வழியை விரும்பிய அமெரிக்கர்கள்
இந்த நாட்களில் அமெரிக்காவில் வரிசையில் நின்று பணம் எடுக்க விரும்பாத அமெரிக்கர்கள் பெரும்பாலும் ஏடிஎம்களையும் கிரெடிட் கார்டுகளையும் பயன்படுத்த ஆரம்பித்தனர். அது போல அப்படியே இந்தியா உள்படப் பல நாடுகளிலிலும் பரவி இன்று அபரீதமான வளர்ச்சியை அடைந்துள்ளது ஏடிஎம்.
பல ஆயிரம் கோடி பரிவர்த்தாய்
குறிப்பாக இந்தியாவில் ஏ.டி.எம் மிஷின்கள் இந்தியாவில் மும்பையில் கடந்த 1987ஆம் ஆண்டு ஏ.டி.எம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டாலும், 1999ல் தான் இந்தியாவின் பல நகரங்களில் ஏடிஎம் மிஷின்கள் பரவியது குறிப்பிடத்தக்கது. அந்த நேரத்தில் நாடெங்கும் வெறும் 800 ஏடிஎம்கள் மட்டுமே இயக்கப்பட்டன. ஆனால் இன்றோ நகரத்திற்கு ஆயிரக்கணக்கில் அளவுக்கு வளர்ச்சி அடைந்து காணப்படுகிறது. இதன் வளர்ச்சி எந்த அளவு எனில் கடந்த 2003ல் மட்டும் 57000 கோடி ரூபாய் ஏடிஎம் மூலம் மக்களுக்கு சப்ளை செய்யப்பட்டுள்ளதாம். ஆனால் இது பல லட்சம் கோடியை தாண்டி விட்டது.
பல முக்கிய மொழிகளிலும் ஏடிஎம்
முதலில் ஆங்கிலத்தில் மட்டுமே செயல்பட்டு வந்த இந்த ஏடிஎம்கள் பின்னர் பல முக்கிய மொழிகளிலும் இயங்கியது. ஏன் தற்போது தமிழிலும் இயங்கி வருவது கூட அனைவரும் பார்த்திருக்க முடியும். மேலும் தற்போது பில்தொகை செலுத்த, டிக்கெட்டுக்கள் எடுக்க மற்றும் ஒருசில பொருளாதார சேவைகளுக்கும் இது உதவி வருகிறது.
ஏடிஎம்க்கு அதோ கதிதான்
எதிர்காலத்தில் ஏடிஎம்.இன் தலைவிதி என்ன? எதிர்காலத்தில் ஏடிஎம் இன் பயன்பாடுகள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது என்று பல ஆய்வுகள் கூறிகின்றன. இதற்கு பெரும்பாலான ஆன்லைன் பரிவர்த்தனைகள்தான் காரணம் என்றும் கருதப்படுகிறது. கையில் பணம் இன்றி டெபிட் கார்டு இன்றி ஆன்லைன் மூலம் பெரும்பாலான பண பரிவர்த்தனை தற்போது வழக்கத்தில் உள்ளதால் ரொக்கப்பணத்தின் தேவைக் குறைந்து வெகுவாக குறைந்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக ஏ.டி.எம் மிஷின்களின் தேவையும் வரும் காலங்களில் குறையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் மயமாக்கல் கொள்கை மாற்றலாம்
இந்தியாவில் ஏ.டிஎம்கள் தேவை எப்படி? என்னதான் ஆன்லைன் பரிவர்த்தனைகள் அதிகமாக இருந்தாலும் இந்தியாவைப் பொறுத்தவரை ஏ.டி.எம்களின் தேவை இன்னும் குறைந்த பாடாக தெரியவில்லை. அதிலும் கிராமப் புறங்களில் இன்னும் ஆன்லைன் பரிவர்த்தனையின் விழிப்புணர்வு இல்லாததாலும் ஏ.டி.எம் மிஷின்களின் தேவை இப்போதைக்கு குறையாது என்றாலும், இந்திய அரசால் டிஜிட்டம் பரிவர்த்தனைகள் ஊக்கப்படுத்தப்பட்டு வருகின்றன. இதுவே ஆன்லைன் பணபரிவர்த்தனைக்கு ஆரம்பமாக இருக்கலாம்.