மும்பை: மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளான அலாகாபாத் பேங்க், ஆந்திரா பேங்க் மற்றும் ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் ஆகிய வங்கிகள் மற்றொரு பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் இணைக்கப்படும் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.
வருவாய் மற்றும் லாபம் மிகக் குறைவாக உள்ள சிறிய பொதுத்துறை வங்கிகளான இம்மூன்று வங்கிகளின் இணைப்பு நிகழ்வானது இன்னும் மூன்று மாதங்களில் நிறைவு பெறும் என்று பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவித்துள்ளது.
நாட்டிலுள்ள மிகச் சிறிய பொதுத்துறை வங்கிகளை பெரிய அளவிலான பொதுத் துறை வங்கிகளோடு இணைத்து விடுவது நல்லது என்றும், இதனால் இரு வங்கிகளுக்கும் அநாவசிய செலவுகள் குறைவதோடு இணைப்பின் மூலமாக வங்கிகளின் தரத்தையும் சர்வதேச தரத்தில் உயர்த்திக் கொள்ள முடியம் என்று தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி வீ.சுப்ரமணியன் ஆலோசனை தெரிவித்திருந்தார்.
இதனை அடுத்தே வர்த்தக ரீதியாக மிகக் குறைவான வருவாயையும் நட்டத்தில் இயங்கும் பொதுத்துறை வங்கிகளை பெரிய வங்கிகளோடு இணைப்பதற்கு மத்திய அரசு முன்வந்தது. கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பேங்க் ஆஃப் பரோடா வங்கியுடன் தேனா வங்கியும் விஜயா வங்கியும் இணைந்து செயல்படத் தொடங்கின.
தற்போது, நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் 4ஆவது மிகப்பெரிய வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியானது கடந்த 1894ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதாகும். பின்னர் சுதந்திர இந்தியாவில் 1969ஆம் ஆண்டில் பெரிய வங்கிகள் அரசுடைமை ஆக்கப்பட்டபோது பஞ்சாப் நேஷனல் வங்கியும் அரசுடைமை ஆக்கப்பட்டது.
பஞ்சாப் நேஷனல் வங்கி இந்தியாவின் 764 நகரங்களில் தனது கிளைகளைக் கொண்டுள்ளது. நாடு முழுவதும் சுமார் 1.10 வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள பிஎன்பி வெளிநாடுகளிலும் தனது கிளைகளைக் கொண்டுள்ளது.
வாராக்கடன் பிரச்சனையில் சிக்கித் தவித்ததால் கடந்த 2018ஆம் நிதியாண்டில் சுமார் 12 ஆயிரத்து 283 கோடி ரூபாய் நட்டத்தை சந்தித்தது. மேகுல் சோக்சி மற்றும் நீரவ் மோடி ஆகியோருக்கு முறைகேடாக சுமார் 14 ஆயிரம் கோடி ரூபாய் கடன் கொடுத்ததால் தான் கடும் நட்டத்தை சந்தித்ததாக பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவித்தனர்.
கடன் பிரச்சனையில் இருந்து வெளிவருவதற்காக மத்திய அரசிடம் இருந்து மறுசீரமைப்பு நிதியை எதிர்பார்த்துக்கொண்டுள்ளது. இந்நிலையில் பஞ்சாப் நேஷனல் வங்கி மிகச் சிறிய பொதுத்துறை வங்கிகளான ஆந்திரா வங்கி மற்றும் அலகாபாத் வங்கி ஆகியவற்றை தன்னோடு இணைப்பதற்கு முன்வந்துள்ளது.
அலகாபாத் வங்கி கடந்த 1865ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதாகும். கடந்த 2014ஆம் ஆண்டில் 150ஆவது ஆண்டைக் கொண்டாடியது. நாடு முழுவதும் 3245 கிளைகளைக் கொண்டுள்ளது. கடந்த 2018-19ஆம் ஆண்டில் சுமார் 8 ஆயிரத்து 334 கோடி ரூபாயை நட்டத்தை சந்தித்துள்ளது.
மற்றொரு வங்கியான ஆந்திரா வங்கி கடந்த 1923ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. நாடு முழுவதும் 1518 கிளைகளைக் கொண்டுள்ளது. கடந்த 2018-19ஆம் ஆண்டில் சுமார் 2ஆயிரத்து 786 கோடி ரூபாய் நட்டத்தை சந்தித்துள்ளது.
அதேபோல் ஓரியன்டல் வங்கி கடந்த 1943 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. கடந்த 1980ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாக வங்கிகள் பொதுத்துறை வங்கிகளாக மாற்றம் செய்யப்பட்டபோது, இந்த வங்கியும் மத்திய அரசின் வசமானது. நாடு முழுவதும் சுமார் 2700 கிளைகளைக் கொண்டுள்ளது. கடந்த 2018-19ஆம் ஆண்டில் 55 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது.
சிறிய வங்கிகளின் மோசமான வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் வராக்கடன் பிரச்சனைகளால் தொடர்ந்து நிதிச்சிக்கலை சந்தித்துவருகிறது. இதனை தவிர்ப்பதற்காகவே இவ்வகையான வங்கிகளை பெரிய பொதுத்துறை வங்கிகளோடு இணைப்பதற்கு மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
வங்கிகளை ஒன்றிணைப்பதன் மூலமாக வாராக்கடன் சுமை குறைவதோடு மறுசீரமைப்பு செய்வதற்கு ஆகும் செலவுகளும் கணிசமாக குறையும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. வங்கிகளை இணைப்பதற்கான பேச்சுவார்த்தையை மத்திய அரசு கடந்த மார்ச் மாதமே தொடங்கிவிட்டது. முதல் சுற்று பேச்சுவார்த்தையில் பஞ்சாப் நேஷனல் வங்கி, யூனியன் வங்கி, மற்றும் பேங்க் ஆஃப் இந்தியா ஆகியவை கலந்து கொண்டன.
இம்மூன்று வங்கிகளின் இணைப்பு நடவடிக்கைகள் இன்னும் மூன்று மாதங்களில் தொடங்கும் என்று பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்துள்ளது. இருந்தாலும் இணைப்பு பற்றிய எந்த ஒரு அறிவிப்பையும் பஞ்சாம் நேஷனல் வங்கியோ அல்லது மத்திய அரசோ இன்னும் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.