சில மாதங்களாக காணமல் போயிருந்த 2000 ரூபாய் நோட்டுக்களின் புழக்கம் மீண்டும் அதிகரித்துள்ளது. அதன் மர்மம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.
டெல்லி: பரபரப்பான 17ஆவது லோக்சபா தேர்தல் நடந்துமுடிந்த ஒரு வாரத்தில் நாடெங்கிலும் 2000 ரூபாய் நோட்டுக்களின் புழக்கம் அதிகரித்திருப்பது, ஒருவேளை மீண்டும் ஒரு செல்லாத நோட்டு அறிவிப்பு ஏதேனும் வெளிவருமோ என்ற அச்சம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
ஃபிக்சட் டெபாசிட் இருக்குன்றான், ஆர்டி இருக்குன்றான், ஜூவல் லோன் இருக்குன்றான், பெர்சனல் லோன் இருக்குன்றான், ஆனா நீங்க கேட்ட 2000 ரூபாய் நோட்டு மட்டும் இல்லேன்றான். பேங்க்லயே இல்லையாம். லோக்சபா தேர்தல் நடைபெற்ற 2 மாதங்களாக நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளிலும் கடுமையான பணத்தட்டுப்பாடு நிலவியதை வைத்து காமெடியாக சொன்னதுண்டு.
கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நாடு முழுவதும் உள்ள ஏடிஎம்களிலும் வங்கிகளிலும் ரூபாய் நோட்டுக்களுக்கு குறிப்பாக 2000 ரூபாய் நோட்டுக்கள் கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு நிலவியது. இதற்கு காரணம் மத்திய அரசு லோக்சபா தேர்தல் காரணமாக செலவினங்களை குறைத்ததால் பணப்புழக்கம் குறைந்து காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கறுப்பு பணம்
கடந்த 2014ஆம் ஆண்டில் முதன்முதலாக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்ந்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, ஆட்சியில் அமர்ந்த உடனே கறுப்புப் பணப்புழக்கத்தையும் கருப்புப் பொருளாதாரத்தையும் ஒழிக்க சபதம் எடுத்தது.
பணமதிப்பு நீக்கம்
இதையடுத்து கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி இரவில் பிரதமர் நரேந்திர மோடி, உயர் பணமதிப்புடைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாததாக அறிவித்து அனைவரையும் அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்.
2000 ரூபாய் நோட்டு
பொதுமக்கள் தங்களிடம் இருந்த செல்லாத நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து அதற்கு பதிலாக முற்றிலும் புதிய வடிவத்தில் அச்சிடப்பட்ட 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்களை பெற்றுக்கொள்ளவும் மத்திய அரசு கால அவகாசம் அளித்தது. அதிலும் ஒரு நபர் ஒரு நாளைக்கு குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ள முடியும் என்று கட்டுப்பாடும் விதித்தது.
பணம் பதுக்கல்
தங்களின் பணத்தை மாற்றிக்கொள்ள கட்டுப்பாடு விதிப்பதா என்று பொதுமக்கள் விரக்தியடைந்தனர். பணத்தை மாற்றிக்கொள்ள அனைத்து வங்கிகளிலும் கூட்டம் அலைமோதியது. சில கறுப்புப் பணமுதலைகள், வியாபாரிகள், பெரும் தொழில்நிறுவனங்கள் தங்களின் செல்வாக்கை பயன்படுத்தி பினாமிகளின் மூலம் வங்கிகளில் இருந்து புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்களை வாங்கி பதுக்கி வைத்துக்கொண்டனர்.
மாயமான 2000 ரூபாய் நோட்டு
இதன் காரணாமாக கடந்த 2 ஆண்டுகளாக வங்கிகளிலும் ஏடிஎம்களிலும் 2000 ரூபாய் நோட்டுக்கள் கிடைப்பது அரிதாக இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதனால் மத்திய மாநில அரசுகளின் செலவினங்கள் குறைக்கப்பட்டன. அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே பணம் எடுக்கப்பட்டு வந்ததால் பணப்புழக்கம் மேலும் குறைந்துவிட்டது.
அரசியல் கட்சிகள்
அதோடு வாக்காளர்களை கவனிப்பதற்காக சில அரசியல் கட்சிகள் முன்கூட்டியே திட்டமிட்டு பணத்தை எடுத்துவிட்டதால் வங்கிகளிலும், ஏடிஎம்களிலும் 2000 ரூபாய் நோட்டுக்களின் புழக்கம் அடியொடு நின்றுவிட்டது. வாக்காளர்களை கவனிப்பதற்காக அரசியல் கட்சிகளால் எடுக்கப்பட்ட 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்களை ஆங்காங்கே தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றியது நினைவிருக்கும்.
பதுக்கிய பணம் வெளியே வருது
இந்நிலையில் வர்த்தகர்கள், அரசியல் வாதிகள் மற்றும் பினாமிகள் தாங்கள் பதுக்கி வைத்திருந்த 2000 ரூபாய் நோட்டுக்களை தற்போது புழக்கத்தில் விட்டுள்ளதாக தெரிகிறது. கடந்த ஒரு வாரமாக 2000 ரூபாய் நோட்டுக்களின் புழக்கம் அதிக அளவில் இருப்பதாக பொதுமக்கள் வாய்பிளந்து ஆச்சர்யப்படுகின்றனர். எப்போதும் இல்லாத அளவில் 2000 ரூபாய் நோட்டுக்கள் அதிக அளவில் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் பணமதிப்பு நீக்கம்
தற்போது 2ஆவது முறையாக கூடுதல் பலத்துடன் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ள மோடி கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக மீண்டும் ஒரு முறை சவுக்கை சுழற்றுவார் என்று நாடு முழுவதும் பரபரப்பாக பேச்சு எழுந்துள்ளது. இது நிச்சயமாக நடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications