டெல்லி: சமூக வலைதளமான பேஸ்புக் நிறுவனம் வரும் 2020ஆம் ஆண்டு வாக்கில் சொந்தமாக மெய்நிகர் நாணயம் ( GlobalCoin) என்னும் பிட்காயினை உருவாக்கி 12 நாடுகளில் புழக்கத்தில் விடப்போவதாக பிபிசி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
குளோபல் காயினை இந்தியாவிலும் பிரபலப்படுத்த பேஸ்புக் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்தியாவில் தன்னுடைய பிட்காயின் சேவையை தொடங்குவதற்கு பேஸ்புக் பலதரப்பட்ட இடையூறுகளை எதிர்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
பேஸ்புக்கின் மெய்நிகர் கரன்சிகளை உருவாக்குவதன் மூலம் பொதுமக்களை டிஜிட்டல் பரிவர்த்தனையின் மூலம் மிகக் குறைந்த செலவில் பாதுகாப்பான பணப்பரிமாற்றங்களை மேற்கொள்ள வழி செய்வதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனை நடைமுறைப்படுத்த வெஸ்டர்ன் யூனியன் போன்ற பணப்பரிமாற்ற நிறவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக தெரிகிறது.
குளோபல் காயின்
பிட்காயின்.. இன்றைக்கு உலகம் முழுவதும் பெரும்பாலானவர்களால் உச்சரிக்கப்படும் பெயர். அது எந்த வடிவத்தில் இருக்கும், எந்த உலோகத்தில் செய்யப்பட்டிருக்கும், என அனைவராலும் கேள்வி கேட்டு நச்சரிக்கப்படும் பெயர். குறியாக்க நாணயம் (cryptocurrency) அல்லது மெய்நிகர் நாணயம் அல்லது பிட் காயின், உருவமாய் இல்லாமல் அரூபாமாய் இருந்து கொண்டு இணையதளத்தை கலக்கிக்கொண்டுள்ளது.
பிட்காயின் கடவுள்
கடந்த 2008ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி ஜப்பானைச் சேர்ந்த சத்தோசி நகமோட்டோ (Satoshi Nakamoto) என்பவர் பிட்காயின் இணையர்-இணையர் வலைதளம் (Bitcoin: A Peer-to-Peer Electronic Cash System) என்ற எழுதிய கட்டுரையின் மூலமாக மெய்நிகர் நாணயம் என்னும் பிட்காயினுக்காக ஒரு மென்பொருளை உருவாக்கினார்.
2 கோடி பிட்காயின்கள்
நகமோட்டோ பின்னர் 2009ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி பிட்காயின் வலைதளத்தை (Bitcoin Network) உருவாக்கி, அதில் கட்டச் சங்கிலியை (Block Chain) செயல்படுத்தி அதில் முதல் கட்டத்தையும் இணைத்தார். அந்தக் கட்டத்தில் இவர் கடந்த 2010ஆம் ஆண்டு வரையிலும் சுமார் 1 கோடி பிட்காயின்களை உருவாக்கி இருந்தார் என்று சொல்லப்படுகிறது. அதிக பட்சமாக 2 கோடி பிட்காயின்களே உருவாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
டிஜிட்டல் பரிவர்த்தனை
பிட்காயின் என்பது மின்னணு வடிவத்தில் உள்ள பணமாகும் (Digital Currency). ரொக்கப்பணத்தைப் போல் இதை கண்களால் பார்க்க முடியாது. காகிதப் பணம் போல் அச்சிடப்படுவதும் இல்லை. ரொக்கப் பரிமாற்றம் என்பது நம்முடைய வங்கிக் கணக்கில் இருந்து வேறொருவருடைய கணக்கிற்கு மின்னணு பரிமாற்றத்தின் மூலமாக பணத்தை மாற்றுவதாகும். பிட்காயின் என்பது கணிதச் சிக்கல்களை தீர்க்கக்கூடிய மென்பொருளின் மூலம் அதிகரிக்கும் தொழில்வளர்ச்சியின் காரணமாக உலகம் முழுக்க இயங்கும் கணினிகளால் இது உருவாக்கப்படுகிறது.
கிரிப்டோகிராஃபி
பிட்காயினை கட்டுப்படுத்துவதற்கு எந்த நாட்டிலும் எந்த ஒரு அமைப்பும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. பிட்காயின் உருவாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு கிரிப்டோகிராஃபி தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. உலகம் முழுவதும் இருந்தும் பரிமாற்றம் செய்யப்படும் பிட்காயின் பணப் பரிமாற்றத்தை இந்த மென்பொருளே சேமித்து வைத்து நிர்வகிக்கிறது.
கட்டச் சங்கிலி
சாதாரண பணத்தைப் போலவே பிட்காயினை பெற்றவர் அதை திரும்ப செலுத்தினால் மட்டுமே நம்முடைய கணக்கில் அது வரவு வைக்கப்படும். இல்லை என்றால் நம்முடைய கணக்கில் உள்ள பிட்காயினின் மதிப்பானது குறைந்து காணப்படும். இதன் காரணமாக இதில் தவறுகள் நடப்பதற்கு 100 சதவிகிதம் வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. பிட்காயின் கணக்குகள் உள்ள தகவல் தொகுப்புகளுக்கு கட்டச் சங்கில் (Block Chain) எனக் கூறப்படுகிறது.
ஒரு பிட்காயின் 20089 டாலர்கள்
முதல் பிட்காயின் அமெரிக்காவைச் சேர்ந்த ஹரோல்டு தாமஸ் ஃபின்னே (Harold Thomas Finney) என்பவருக்கு கொடுக்கப்பட்டது. ஒரு பிட்காயினின் இன்றைய மதிப்பானது சுமார் 8000 அமெரிக்க டாலர்களாகும். இதன் அதிகபட்ச வருவாய் என்பது கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பரில் 20089 டாலராக அதிகரித்ததாகும். குறைந்த பட்சமாக கடந்த 2013ஆம் ஆண்டு ஜூலையில் 65 டாலர்களாக இருந்தது.
பெங்களூரு யுனோ காயின்
இந்தியாவில் பெங்ளூருவில் இயங்கிவரும் யுனோ காயின் (Uno Coin) நிறுவனம் பிட்காயின் நாணயமுறையின் அடிப்படையில் பரிவர்த்தனை செய்து வருகிறது. இங்கு பிட்காயினை வாங்கவோ அல்லது விற்கவோ முடியும். இந்தியாவில் சுமார் 500 கடைகள் மட்டுமே பிட்காயினை ஏற்றுக்கொள்கின்றன. இருந்தாலும் மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் இந்தியாவில் பிட்காயின் பரிமாற்றத்திற்கு அனுமதி வழங்கவில்லை.
மார்க் ஜூகர்பெர்க்
புகழ்பெற்ற சமூக வலைதளமான ஃபேஸ்புக் வலைதளத்தின் உரிமையாளரான மார்க் ஜூகர்பெர்க் (Mark Zuckerberg) தன்னுடைய நிறுனத்தின் மூலமாக மெய்நிகர் நாணயத்தை (cryptocurrency) உருவாக்கி புழக்கத்தில் விடப்பபோவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது பற்றிய பேச்சுவார்த்தையை அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் நிதிக் கட்டுப்பாட்டுதுறையினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக பிபிசி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக நாணயம்
ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிடப்போகும் பிட்காயின், உலக நாணயம் (Global Currency) என்ற பெயரில் அழைக்கப்படும் என்று அறிவித்துள்ளது. நடப்பு 2019ஆம் ஆண்டின் இறுதி வாக்கில் உலக நாணயத்தின் சோதனை முயற்சி தொடங்கும் என்றும், வரும் 2020ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தன்னுடைய உலக நாணயத்தை புழக்கத்தில் விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மின்னணு பரிவர்த்தனை
உலக நாணயத்தின் மூலம் மின்னணு பணப்பரிவர்த்தனை திட்டத்தையும் (digital payment system) அடுத்த ஆண்டில் தொடங்க ஃபேஸ்புக் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் பொதுமக்கள் மிகக் குறைந்த கட்டணத்தில் மிகவும் பாதுகாப்பான டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள இது மிகவும் பயனள்ளதாக அமையும் என்றும் கூறப்படுகிறது.
எளிமையான பரிமாற்றம்
ஃபேஸ்பிக் நிறுவனம் தன்னுடைய உலக நாணயத்தை செயல்படுத்துவது வெஸ்டர்ன் யூனியன் (Western Union) பணப்பரிமாற்ற நிறுவனத்துடன் பேச்சுவார்தையில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் மூலமாக டிஜிட்டல் பரிமாற்றங்களை எளிமையாக்க முடியும் என்றும் கூறப்படுகிறது. இதோடு வங்கிகள் மற்றும் தரகு நிறுவனங்களுடனும் ஃபேஸ்புக் நிறுவனம் இணையவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொழில்நுட்ப குறைபாடுகள்
உலக நாணயத்தை வர்த்தக ரீதியில் புழக்கத்திற்கு வெளியிட முடிவு செய்துள்ளபோதிலும், முதலில் அதிலுள்ள ஒழுங்குமுறை மற்றும் தொழில்நுட்ப குறைபாடுகளை நீக்கி சரிசெய்யவேண்டும். அதோடு அதிலுள்ள சவால்கள், மோசடிகள் மற்றும் வாய்ப்புகள் பற்றி முழுமையாக அறிந்துகொள்ளவேண்டும். இதை உத்தேசித்து ஃபேஸ்புக் நிறுவனரான மார்க் ஜூகர்பெர்க் இதுபற்றி விவாதிக்க இங்கிலாந்து வங்கியின் ஆளுநரான மார்க் கார்னி (Mark Carney) யை சந்தித்து பேசியுள்ளார்.
இந்தியாவிலும் செயல்படுத்தணும்
ஃபேஸ்புக் நிறுவனம் தனது உலக நாணயமான க்ரிப்டோகரன்சி என்னும் குளோபல் காயினை இந்தியாவிலும் பிரபலப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் பிட்காயின் பரிவர்த்தனைக்கு இதுவரையிலும் உரிய அனுமதி வழங்காததால், ஃபேஸ்புக் தனது உலக நாணயத்தை இந்தியாவில் சேவையை தொடங்க பல்வேறு தடங்கல்களை சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.