வாஷிங்டன்: இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை இளைஞர்களின் அமெரிக்க வேலை கனவுக்கு வேட்டு வைத்து எச்-1பி விசா நடைமுறையில் கட்டுப்பாடுகளை கொண்டுவந்து வயிற்றெரிச்சலை கொட்டிக்கொண்ட ட்ரம்ப் அடுத்ததாக எச்-1பி விசாவில் வேலை பார்க்கும் ஊழியர்களின் இல்லத்தரசிகளுக்கும் விசா வழங்குவதில் முட்டுக்கட்டை போட தொடங்கிவிட்டார்.
நடந்து முடிந்த 17ஆவது லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அமோக வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. வெற்றி பெற்ற மோடிக்கு அனைத்து நாட்டு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும் தனது வாழ்த்துச் செய்தியை ட்விட்டரில் பதிவிட்டதோடு, தொலைபேசியிலும் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியை ட்ரம்ப் தொலைபேசியில் அழைத்து பேசியதுடன், அடுத்த மாதம் ஜப்பானில் நடக்கும் ஜி-20 மாநாடு நடக்கும்போது, இரு நாடுகளுக்கும் இடையில் உரசலில் இருக்கும் வர்த்தக உறவைப் பற்றி கலந்து பேசி, இரு நாடுகளுக்கும் இடையில் நட்புறவுகள் மேம்படுவதற்கு நாம் இருவரும் சேர்ந்து தேவையான அனைத்து பூர்வாங்க நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என்றும் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
ட்ரம்ப்பின் இந்த மனமாற்றத்தைக் கண்ட இந்திய ஐடி துறை இளைஞர்கள் அனைவருமே சந்தோசத்தில் துள்ளிக் குதித்தனர். ஆஹ்ஹா.. பிரதமர் மோடியின் வெற்றிக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வாழ்த்து தெரிவித்துவிட்டார். நமக்கும் இனி விடிவுகாலம் பிறந்துவிட்டது என்று மனதிற்குள் மகிழ்ச்சியடைந்தனர். இந்திய ஐடி துறை இளைஞர்களின் மைண்ட் வாய்ஸ் அங்கே ட்ரம்பின் காதுக்கு எட்டிவிட்டது போல. உங்களுக்கு வைக்கிறேன்டா பெரிய ஆப்பு, உங்களோட மெய்ன் கனெக்சனையே கட்பண்ணி விட்றேன் என்று மனதிற்குள் கருவிக்கொண்டே தனது அடுத்த அஸ்திரத்தை எடுத்து ஏவ ஆரம்பித்துவிட்டார்.
என்ன செய்யப்போகிறார் ட்ரம்ப்
எச்-1பி விசா அனுமதியில் வேலை பார்ப்பவர்களின் இல்லத்தரசிகளுக்கு, முன்னால் அமெரிக்க அதிபர் ஒபாமா காலத்திலிருந்து தொடர்ச்சியாக அதிக அளவில் வழங்கி வந்த எச்-4 விசா வழங்குவதிலும் தற்போதைய அதிபர் ட்ரம்ப் அதிக கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கிவிட்டதாக தெரிகிறது.
இல்லத்தரசிகளுக்கு வழங்கி வந்த எச்-4 விசாக்களின் கட்டுப்பாடுகளை விதித்தால் அதன் காரணமாக சுமார் 90 சதவிகிதம் அதாவது 1.20 லட்சம் ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று ஐடி துறையைச் சேர்ந்த நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
பொற்காலம்
தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ச்சியின் ஆரம்பகாலமான 1990ஆம் ஆண்டுகளில் இருந்து கடந்த 2016ஆம் ஆண்டில் ஒபாமா அமெரிக்க அதிபராக இருந்த காலம் வரையிலும் இந்திய ஐடி துறை இளைஞர்களுக்கு பொற்காலமாகவே இருந்தது என்று சொல்லாம். அந்த அளவிற்கு இந்திய ஐடி இளைஞர்களுக்கு எச்-1பி விசா என்பது பக்கத்து வீட்டுக்கு சென்று வருவது போல் மிக மிக எளிதானதாக இருந்தது.
ஆரம்பமானது கண்டச்சனி
2016ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனல்ட் ட்ரம்ப் எதிர்பாராத வகையில் வெற்றி பெற்று அமெரிக்காவின் அதிபராக ஆனதில் இருந்து இந்திய ஐடி துறை இளைஞர்களுக்கு குருப்பார்வை விலகி நான்கு ஆண்டுகள் கண்டச் சனி ஆரம்பித்துவிட்டது எனலாம். அந்த அளவிற்கு படுத்தி எடுத்துக்கொண்டிருக்கிறார்.
அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை
தான் அதிபராக வந்தால், அமெரிக்க நிறுவனங்களில் வேலை பார்க்கும் வெளிநாட்டவர்களை அவர்களை சொந்த நாட்டுக்கு அனுப்பிவிட்டு, அதற்கு பதிலாக அமெரிக்க இளைஞர்களை அங்கே வேலைக்கு அமர்த்துவேன் என்றும், புதிய வேலைகளில் அமெரிக்கர்களுக்கு முன்னரிமை வழங்குவேன் என்றும், எச்-1பி விசா விதிமுறைகளில் அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்திருந்தார்.
எச்-1பி விசா கட்டுப்பாடுகள்
ட்ரம்ப் என்ன நம்மூர் அரசியல்வாதியா, தேர்தல் பிரச்சாரத்தில் சொன்னதை அப்போதே மறந்துவிடுவதற்கு. தான் அளித்த வாக்குறுதியை வெற்றி பெற்று வந்த உடனே செயல்படுத்த ஆரம்பித்துவிட்டார். முதல் வேலையாக இந்திய ஐடி இளைஞர்கள் அமெரிக்கா சென்று வேலை பார்ப்பதற்கான எச்-1பி விசா நடைமுறையில் கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கிவிட்டார்.
முதல் பந்து யார்க்கர்
முதலில் எச்-1பி விசா பெற வேண்டுமானால், இந்திய ஐடி இளைஞர்கள் குறைந்த பட்சமாக ஆண்டுக்கு சுமார் 95 ஆயிரம் டாலர்களாவது சம்பளம் வாங்க வேண்டியது கட்டாயம் என்று முதல் பந்தையே யார்க்கராக வீசினார். இதில் இந்திய ஐடி துறை இளைஞர் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்கள். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது.
2ஆவது பந்து ஆஃப் சைடில்
ட்ரம்ப் அடுத்ததாக எச்-1பி விசாவில் வந்தவர்கள் வேறு வேலைக்கு மாறவிரும்பினால், தான் ஏற்கனவே பார்த்துவந்த அதே வேலை, தான் மாற விரும்பும் நிறுவனத்தில் இருந்தால் மட்டுமே தகுதியின் அடிப்படையில் மாறிக்கொள்ள முடியும் என்று அடுத்த பந்தை ஆஃப் சைடில் வீசினார். இதையும் நம் இந்திய ஐடி துறை இளைஞர்கள் தொடமுடியாமல் விட்டுவிட்டனர்.
3ஆவது பந்து லெக் சைடில்
மூன்றாவதாக அமெரிக்காவில் வேலை பார்க்க விரும்பும் நபர்கள், எச்-1பி விசா கேட்டு விண்ணப்பிக்கும்போது, எச்-1பி விசாவுக்கான தகுதிப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால் மட்டுமே எச்-1பி விசா அனுமதி கிடைக்கும், இல்லாவிட்டால் கிடையாது என்று ட்ரம்ப் லெக் சைடில் பந்தை வீசினார். இதிலும் நம்மவர்கள் எதுவும் செய்ய முடியவில்லை.
4ஆவது பந்து நெஞ்சுக்கு நேராக
இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் ட்ரம்ப் தற்போது நான்காவதாக, இருங்கடா உங்கள் மெய்ன் கனெக்சனையே கட் பன்றேன் என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு, அடுத்த பந்தை ஐடி இளைஞர்களின் நெஞ்சுக்கு நேராக வீசினார். அதாவது, எச்-1பி விசாவில் சென்று அமெரிக்காவில் வேலை பார்ப்பவர்கள், தங்களின் மனைவியை உடன் அழைத்துச் செல்வதுண்டு.
எச்-4 இஏடி விசா
தங்கள் மனைவியை அழைத்துச் செல்லும்போது, அதற்கென தனியாக எச்-4 இஏடி (H-4 Employment Authorization Document - EAD) விசா பெற்று அதன் மூலம் தங்களுடன் அழைத்துச் செல்வது வழக்கம். இந்த நடைமுறை தொடக்கத்தில் இருந்தே உள்ளது. அதிலும் முன்னால் அதிபர் ஒபாமா காலத்தில் இந்திய ஐடி இளைஞர்களுக்கு அதிக அளவில் எச்-4 இஏடி விசாக்கள் அளிக்கப்பட்டு வந்தது.
1.20 லட்சம் எச்-4 இஏடி விசாக்கள்
எச்-4 இஏடி விசாக்களினால் சுமார் 90 சதவிகித ஐடி துறை இளைஞர்கள் பயன்பெற்று வந்தனர். குறிப்பாக அமெரிக்காவில் பணியாற்றும் ஊழியர்களின் மனைவிகளில் 90 சதவிகிதம் பேர் பொறியியல் பட்டம் பெற்றவர்களாக இருப்பதால் அவர்கள் எச்-4இஏடி விசா பெற்று அமெரிக்காவில் வேலை பார்ப்பது எளிதானதாக இருந்தது. கடந்த 2015ஆம் ஆண்டிலிருந்து இது வரையிலும் சுமார் 1.20 லட்சம் எச்-4இஏடி விசாக்கள் வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
வேலை ஆரம்பமானது
அதிபராக ட்ரம்ப் வந்ததில் இருந்து எச்-4இஏடி விசா விசயம் கண்ணை உறுத்திக்கொண்டே இருந்தது . இப்பொழுது இதிலும் தடைகளை விதிக்க முன்வந்துவிட்டார். இதற்கான ஆரம்பகட்ட வேலைகளை கடந்த பிப்ரவரி மாதமே தொடங்கிவிட்டார். இதனால் அமெரிக்காவில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஐடி துறையைச் சேர்ந்த ஊழியர்கள் இக்கட்டான நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்று தெரிகிறது.
அமெரிக்கர்களுக்கு சாதகம்
எச்-4இஏடி விசாக்களை வழங்குவதை தடைசெய்வது தொடர்பான பொது விவாதத்திற்கான அறிக்கையை கடந்த 22ஆம் தேதியே ட்ரம்ப் அனுப்பிவிட்டதாக தெரிகிறது. இந்த தடை அமலுக்கு வரும்போது அமெரிக்கர்கள் அதிக அளவில் பயன்பெறுவார்கள் என்று அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலகம் தெரிவித்துள்ளது.
அரசிதழில் வெளியிடப்படும்
இது பற்றி விளக்கமளித்த இமிக்ரேசன்.காம் (Immigration.Com) என்னும் விசா மற்றும் சட்ட ஆலோசனை நிறுவனத்தைச் சார்ந்த ராஜீவ்.எஸ். கண்ணா, தற்போது கொண்டுவந்துள்ள தடை அறிவிப்பு இந்திய ஐடி துறை பணியாளர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாகும். இது தற்போது இரண்டாவது கட்டத்தில் உள்ளது. இந்தத் தடை ஒப்புதல் பெறப்பட்டுவிட்டால், அதன் பின்னர் அரசிதழில் வெளியிடப்பட்டுவிடும் என்றார்
பொதுமக்கள் கருத்து கேட்பு
எச்-4இஏடி விசாவுக்கான தடை பற்றிய அறிவுப்பு அரசிதழில் வெளியான 30 முதல் 60 நாட்களுக்குள் பொது மக்களின் கருத்துக்கள் பதிவு செய்யப்படும். அதன்பின்னர் இந்த தடைச் சட்டம் அமலுக்கு வரும் என்று தெரிகிறது. ஆனாலும் அதற்கு மேலும் பல மாதங்கள் ஆகும் என்பது நிச்சயம் என்றும் அவர் கூறினார்.
நல்ல தீர்வு கிடைக்குமா
ஆக மொத்தத்தில் ட்ரம்ப் ஒருபக்கம் நமது பிரதமர் மோடியுடன் கை குலுக்கிக்கொண்டே, இந்தப் பக்கம் இந்திய ஐடி துறை இளைஞர்களின் முதுகில் குத்திக்கொண்டே இருக்கிறார். அடுத்த ஐந்து ஆண்டுகளிலாவது பிரதமர் மோடி இதற்கு சரியானதொரு தீர்வை முன் வைப்பாரா என்பது தான் ஐடி இளைஞர்களின் எதிர்பார்ப்பு.