டெல்லி: சர்வதேச அளவில் 7 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு சேதத்தை ஏற்படுத்திய உலகிலேயே மிக மிக அபாயகரமான 6 வைரஸ்கள் அடங்கிய லேப்டாப் ஒன்று சுமார் 9.50 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.
இதில் உள்ள ஆபத்தான வைரஸ்களின் பாதிப்பிலிருந்து தப்பிப்பதற்காக இந்த லேப்டாப் காற்று கூட புக முடியாத ஒரு பெட்டியில் வைத்து பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏலம் ஆன்லைனில் நடைபெறும் நிகழ்ச்சி தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்படும் அளவிற்கு அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஒரு தமிழ் சினிமாவில் உலகின் கொடிய வைரஸ் கிருமியை ஒரு சின்ன பெட்டியில் வைத்து பூட்டி சீல் வைத்து அதையும் உறைநிலையில் ஒரு குளிர்சாதன பெட்டியில் வைத்து பூட்டி வைத்திருப்பதாக காட்டியிருப்பார்கள். அதை திறந்தால் உள்ளே உறை நிலையில் உள்ள வைரஸ் காற்றின் மூலமாக வெளியில பரவி உலகை அழித்துவிடும் என்றும் பயமுறுத்தி இருப்பார்கள். கிட்டத்தட்ட அதே மாதிரிதான் ஒரு லேப்டாப் இருக்கிறது.
6 வைரஸ்கள்
ஒரு சாதாரண 10.2 அங்குலம் கொண்ட சாம்சங் என்சி10 (Samsung NC10) மற்றும் 14 ஜிபி திறன் கொண்ட விண்டோஸ் எக்ஸ்பி (Windows XP(SP3) மென்பொருளின் கீழ் இயங்கும் இதன் பெயர் ‘தி பெர்சிஸ்டென்ஸ் ஆஃப் ஷாஸ்' (The Persistence of Chaos). இப்போதைக்கு இந்த லேப்டாப் தான் உலகின் அதி பயங்கரமான 6 வைரஸ்களை உள்ளடக்கிய லேப்டாப் என் பெயரெடுத்துள்ளது.
ஆபத்தான லேப்டாப்
இந்த லேப்டாப் அப்படி என்ன பெரிதாக நாசம் விளைவித்தது என்றுதானே கேட்கிறீர்கள். அதிகம் ஒன்றும் கிடையாது. உலகம் முழுவதும் உள்ள கம்ப்யூட்டர்களை எல்லாம் துவம்சம் செய்துள்ளது. இதனால் சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள நஷ்டம் சுமார் 7 லட்சம் கோடி ரூபாய் ஆகும். இதனால் தானோ என்னவோ வெளியில் விட்டுவைத்தால் ஆபத்து என்று நினைத்து பெட்டியில் வைத்து பூட்டி வைத்துள்ளார்கள்.
ஏலம் நேரடி ஒளிபரப்பு
இந்த லேப்டாப்பை திறந்தால் எங்கே வைரஸ் வெளியில் பரவி ஆபத்தை ஏற்படுத்தி விடுமோ என்ற பயத்தில் ஒரு பெட்டியில் வைத்து பூட்டி சீல் வைத்துவிட்டார்கள். இந்த லேப்டாப் தான் தற்போது ஏலத்திற்கு விடப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப விலையானது சுமார் 8 கோடியே 37 லட்சம் ரூபாய். ஏலம் விடப்படும் நிகழ்ச்சிய தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
மோசமான அழிவு
தி பெர்சிஸ்டென்ஸ் ஆஃப் ஷாஸ் லேப்டாப் ஏலம் விடும் நிகழ்ச்சி கடந்த 27ஆம் தேதி நடைபெற்றது. ஏலத்தின் தொடக்கத்தில் சுமார் 8.37 கோடி ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இறுதியில் சுமார் இந்த லேப்டாப் சுமார் 9.50 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. ஒரு வம்பை இவ்வளவு விலை கொடுத்து வாங்கியிருக்கிறார் என்றால் இதனால் ஏற்பட்ட அழிவு அவ்வளவு மோசமானதாக இருந்துள்ளது என்றுதான அர்த்தம். சரி, அப்படி இந்த லேப்டாப்பில் என்னதான் வைரஸ் இருந்தது என்றுதானே கேட்கிறீர்கள், வாருங்கள் பார்க்கலாம்.
ஐ லவ் யூ
ஐ லவ் யூ வைரஸ் இமெயில் வழியாக நமது கம்ப்யூட்டரில் நுழைந்து அனைத்து ஃபைல்களையும் பதம் பார்த்துவிடும். இதுவரையிலும் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான கம்ப்யூட்டர்களை பதம் பார்த்துள்ளது. இதன் சேதாரம் சுமார் 1.05 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
மைடூம்
மைடூம் ரஷ்யாவில் உருவாக்கம் செய்யப்பட்டு மின்னஞ்சல் வழியாக உலகம் முழுவதும் அதி விரைவாக பரப்பப்பட்ட வைரஸ் ஆகும். இந்த வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு சுமார் 2.65 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.
ஸோபிக்
ஸோபிக் மற்றும் ட்ரோஜோன் வைரஸ் மின்னஞ்சல் மூலமாக உலகம் முழுவதும் பயன்படுத்தும் கம்ப்யூட்டர்கள் மற்றும் லேப்டாப்களுக்கு பரப்பப்பட்டது. ஸோபிக் மற்றும் ட்ரோஜோன் வைரஸ் நமது கம்ப்யூட்டரில் வந்து உட்கார்ந்த உடனே அனைத்து மென்பொருள் மற்றும் வன்பொருளையும் துவம்சம் செய்துவிடும். அதனால் வைரஸ் பாதிக்கப்பட்ட கம்ப்யூட்டரில் உள்ள ஃபைல்களை நகல் எடுத்தாலும், மின்னஞ்சல் செய்தாலும் மற்ற கம்ப்யூட்டர்களுக்கு பரவி விடும். இதனால் ஏற்பட்ட பாதிப்பு சுமார் 2.58 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.
வண்ணக்ரை
வண்ணக்ரை வைரஸ் மற்ற வைரஸ்களைப் போலவே மிகவும் ஆபத்தான நமது கம்ப்யூட்டர்களை தாக்கும் வைரஸ் ஆகும். இது கம்ப்யுட்டர்களின் ஒட்டுமொத்த இயக்கத்தையும் சிதைக்கக்கூடிய வைரஸாகும். இதுவரையிலும் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள 2 லட்சம் கம்ப்யூட்டர்களை சேதப்படுத்தியள்ளது. இங்கிலாந்தின் தேசிய சுகாதார மையம் 697 கோடி ரூபாய் மதிப்பிற்கு சேதம் ஏற்படுத்தி உள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.
டார்க் டெக்குலா
டார்க் டெக்குலா வைரஸ் லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள வங்கிகள் மற்றும் பெரிய நிறுவனங்களில் உள்ள கம்ப்யூட்டர்களில் நுழைந்து முக்கியமான ஃபைல்கள் மற்றும் தரவுகளையும் திருடிக்கொண்டு கம்ப்யூட்டர்களை செயலிழக்கச் செய்துவிட்டன. அந்த நாட்டிலுள்ள லட்சக்கணக்கான கம்ப்யூட்டர்களை துவம்சம் செய்துவிட்டன.
பிளாக்எனர்ஜி
பிளாக்எனர்ஜி வைரஸ் கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பரில் உக்ரைன் நாட்டில் உருவாக்கப்பட்டு மின்னஞ்சல் மூலமாக பரப்பப்பட்டது. அங்குள்ள அனைத்து கம்ப்யூட்டர்களிலும் நூதனமான முறையில் நுழைந்து கம்ப்யூட்டர்களை இருட்டடிப்பு செய்துவிட்டது. இது நாசப்படுத்திய சேதாரத்தின் மதிப்பு எவ்வளவு என்பது தெரியவில்லை.
பயன்படுத்த தடை
ஏல விதிகளின் படி தி பெர்சிஸ்டென்ஸ் ஆஃப் ஷாஸ் லேப்டாப் வாங்குபவர் வேறு எந்த வகையிலும் பயன்படுத்தக்கூடாது என்றும் மற்ற எந்த கம்ப்யூட்டருடனும் இணைக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.