திருச்செந்தூரில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாவிட்டால் இனிமேல் தங்கள் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்ப முடியாது என்று பெட்ரோல் பங்க் உரிமையாளர்களும் காவல்துறையினரும் தெரிவித்துள்ளனர். ஜூன் 1 முதல
தூத்துக்குடி: சட்டம் போட்டும் திருந்தவில்லை. ஹெல்மெட் போடாமல் இருசக்கரவாகனங்களில் பயணித்து விலைமதிப்பில்லாத உயிரை இழக்கின்றனர். இனி ஹெல்மெட் போடாவிட்டால் பெட்ரோலே போட முடியாது அப்படி சட்டத்தை அமல்படுத்தியுள்ளனர் திருச்செந்தூர்வாசிகள்.
ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தை ஓட்டுவது சட்டப்படி குற்றமாகும். இச்சட்டத்தை மீறினால் இந்திய மோட்டார் வாகனச் சட்டம் 1988 பிரிவு 129இன் படியும், இந்திய தண்டனைச் சட்டம் 188இன் கீழ் 6 மாதங்களை வரையிலும் சிறைத் தண்டனை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இன்றைய இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தை ஓட்டும்போது மற்றவர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்க்கும் விதமாக வாகனத்தை அதி வேகமாக ஓட்டி சாகசச் செயல்களில் ஈடுபடுவதுண்டு. அப்படி வேகமாக ஒட்டிச் சென்று பெரிய அளவில் விபத்தில் மாட்டி உயிரையோ அல்லது உடல் உறப்புகளையோ இழப்பது தவிர்க்க முடியாதது.
இப்படி விபத்தில் மாட்டிக்கொள்ளும்போது தலையில் பெரிய அளவில் அடிபடாமல் இருக்கவே தலைக்கவசம் என்னும் ஹெல்மெட் அணியவேண்டும் என்பது அவசியமாகும். இதை அனைவரும் பின்பற்றி நடக்கவேண்டும் என்பதும் மிக அவசியமாகும்.
நாட்டிலுள்ள பெரும்பாலான மாநிலங்களும் இதற்கென சட்டங்களை இயற்றியுள்ளன. நீதிமன்றமும் இதை வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இதை பெரும்பாலானவர்கள் பின்பற்றி நடப்பதில்லை. சட்டத்தை மீறி நடக்கும் போது ஏற்படும் போதுதான் விபத்துகளும் ஏற்படுகின்றன.
விபத்துகள் ஏற்படும்போது மட்டுமே பெரும்பாலானவர்களுக்கு ஹெல்மெட் அணிவதன் அவசியமும் மண்டையில் புரிகிறது. தினசரி நடக்கும் விபத்துக்களின் எண்ணிக்கையில் இரு சக்கர வாகன விபத்துக்களே சுமார் 29 சதவிகித அளவில் உள்ளன.
நாளொன்றுக்கு சராசரியாக 134 இரு சக்கர வாகன விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுவதாக புள்ளிவிவரமும் பயமுறுத்துகிறது. மேலும் நாள்தோறும் நடக்கும் இருசக்கர வாகன விபத்துக்களில் ஹெல்மெட் அணியாததால் மட்டுமே 98 பேர் மரணமடைவதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை திருச்செந்தூர் உட்கோட்ட பிரிவு மற்றும் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் இணைந்து விபத்துக்களை குறைக்க புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளனர். இதன்படி பெட்ரோல் பங்குகளில் ஹெல்மெட் போடாமல் போகும் இருசக்கர வாகன ஓட்டிகள் பெட்ரோல் நிரப்ப முடியாது. திருச்செந்தூரில் விபத்துக்களை குறைக்கும் வகையில் ஜூன் 1ஆம் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது.
முதலில் இதுபற்றி விழிப்புணர்வை ஏற்படுத்திவிட்டு அதனை மீறுபவர்களுக்கு கண்டிப்பாக பெட்ரோல் போட மாட்டார்கள் என்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா கூறியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்செந்தூர் திருநெல்வேலி சாலையில் ஹெல்மெட் அணியாமல் சென்ற இருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். இதனையடுத்தே இந்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவிலும் ஜூன் 1ஆம் தேதி முதல் இந்த திட்டம் அமலாகிறது. இதனை அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்தலாம். ஹெல்மெட் அணியாமல் வந்து பெட்ரோல் போடச்சொல்லி பிரச்சினை செய்பவர்கள் மீது புகார் அளிக்கலாம் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications