மும்பை: மோடியின் நண்பர், வியாபாரி, யோகா குரு என பன்முகங்களைக் கொண்ட பாபா ராம்தேவ்-ன் பதஞ்சலி நிறுவனம் (Patanjali), ருச்சி சோயா நிறுவனத்தை 4,350 கோடி ரூபாய் கொடுத்து வாங்க இருப்பதாக, நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து உறுதிபடுத்தப்பட்ட செய்திகள் வருகின்றன.
இப்போது பதஞ்சலி நிறுவனம் சொன்ன படி 4,350 கோடி ரூபாயைக் கொடுக்க, தங்களால் எவ்வளவு திரட்ட முடியும் எனப் பார்த்திருக்கிறார்கள். ஒரே அதிர்ச்சி என்ன செய்தாலும் 600 கோடி ரூபாய்க்கு மேல் திரட்ட முடியாது எனத் தெரிந்து விட்டது.
எனவே தற்போது எஸ்பிஐ, பஞ்சாப் நேஷனல் பேங்க், பேங்க் ஆஃப் பரோடா, யூனியன் பேங்க், ஜே அண்ட் கே பேங்க் என பலரிடமும் வட்டிக்குக் கடன் கேட்டிருக்கிறது பதஞ்சலி ஆயுர்வேதா நிறுவனம்.
என்ன தவறு
என்னங்க இதில் என்ன தவறு இருக்கிறது. அவர்களிடம் வாங்க பணம் இல்லை அதனால் கடன் வாங்கி நிறுவனத்தை வாங்குகிறார்கள். இது எல்லா தொழிலதிபர்களும் செய்வது தானே..? எனக் கேட்பது சரி தான்.
ட்விஸ்ட்
ஆனால் இதில் ஒரு சின்ன டிவிஸ்ட். பதஞ்சலி ஆயுர்வேதா நிறுவனம், இந்த ருச்சி சோயா நிறுவனத்திடம் பேசி, சாதாரணமாக ஒரு நிறுவனம், இன்னொரு நிறுவனத்தை வாங்குவது போல வாங்கவில்லை.
கடன்
ருச்சி சோயா என்கிற நிறுவனத்துக்கு கடுமையான கடன் தொல்லை இருந்தது. ருச்சி சோயா நிறுவனம், எஸ்பிஐ வங்கிக்கு 1,800 கோடி ரூபாய் கடனைத் திருப்பிக் கொடுக்க வேண்டும். இப்படி சென்ட்ரல் பேங்க்-க்கு 816 கோடி, பஞ்சாப் நேஷனல் பேங்க்-க்கு 750 கோடி ரூபாய் என பல இந்திய அரசு வங்கிகளுக்கு மொத்தம் 9,300 கோடி ரூபாயைத் திருப்பித் தர வேண்டும். ஆனால் ருச்சி சோயா நிறுவனத்தால் திருப்பிக் கொடுக்க முடியவில்லை.
முடியாது
ஆகையால் "எனக்கு கடன் கொடுத்தவங்களுக்கு என்னால கம்பெனி நடத்தி காச திருப்பிக் கொடுக்க முடியல, நான் திவாலாயிட்டேன்" என கையை உயர்த்தி, சரண்டர் ஆகிவிட்டார்கள் ருச்சி சோயா நிறுவனத்தினர்கள்.
அதானி
அதன் பிறகு தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திடம், ருச்சி சோயா நிறுவன கடன் தொடர்பாக புகார் செய்யப்பட்டது. அதன் பின் தான் விஷயம் கேள்விப்பட்டு, ருச்சி சோயா நிறுவனத்தை வாங்க அதானியும், பதஞ்சலி நிறுவனமும் முன் வந்தார்கள். ஆக இந்த இருவரில் அதிக தொகைக்கு ருச்சி சோயாவை வாங்குபவர் கொடுக்கும் பணத்தை, ருச்சி சோயா நிறுவனத்துக்கு கடன் கொடுத்த வங்கிகள் பிரித்து எடுத்துக் கொள்ளுமாறு உத்தரவிட்டது தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம்.
எனக்கு வேண்டாம்
இந்த ஏலத்தில் அதானி சுமார் 6,000 கோடி ரூபாய் வரை கொடுத்து ருச்சி சோயாவை வாங்க முன் வந்தார். பதஞ்சலியால் அவ்வளவு கொடுக்க முடியவில்லை. அதன் பிறகு சில போன் கால்களைப் பேசிய அதானி "சாரி, நான் இந்த ஏலத்தில் இருந்து விலகிக் கொள்கிறேன்" என ஒதுங்கிவிட்டார்.
இவ்வளவு தான்
ஆக கடைசியாக 4,350 கோடி ரூபாய்க்கு டீலை ஃபைனல் செய்தது பதஞ்சலி. இந்த 4350 கோடி ரூபாயில் 115 கோடி ரூபாய் ருச்சி சோயா நிறுவனத்தின் பங்குகளை வாங்க பயன்படுத்தப் போகிறார்கள். அதன் பிறகு ருச்சி சோயா நிறுவனத்தை மேம்படுத்த, தொழில் செய்யத் தேவையான முதலீடுகளாக 1,700 கோடி ரூபாய் முதலீடு செய்கிறார்கள். பாக்கி 2,435 கோடி ரூபாய் தான் ருச்சி சோயா வாங்கி இருக்கும் கடனைத் திருப்பிச் செலுத்த பயன்படுத்தப் போகிறார்களாம்.
எஸ் பி ஐ
சுருக்கமாக 9,300 கோடி ரூபாய் கடன் கொடுத்த வங்கிகளுக்கு (SBI, Bob, J&K Bank, Central Bank, Union Bank) வெறும் 2,435 கோடி ரூபாய் மட்டுமே கிடைக்கும். இப்போது அந்த 2,435 கோடி ரூபாய் கடனைக் திருப்பி வசூலிக்க, பதஞ்சலிக்கு 3,700 கோடி ரூபாயை கடனாகக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன இந்த (SBI, Bob, J&K Bank, Central Bank, Union Bank) வங்கிகள் . இதில் பலத்த அடி வாங்கும் எஸ்பிஐக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்.
இப்ப சொல்லுங்க கருப்பன் குசும்பன் தான..? எஸ்பிஐ கிட்ட வாங்குன கடன திருப்பி அடைக்க, எஸ்பிஐ கிட்டயே திரும்ப கடன் வாங்குறான்னா பாத்துக்குங்கப்பு..!