சென்னை: மோடி பதவியேற்பு விழாவை விட #pray for Nesamani என்ற ஹேஸ்டேக்தான் நேற்று உலக அளவில் ட்ரெண்ட் ஆனது. யாருய்யா அந்த நேசமணி எனக்கே அவரை பாக்கணும் போல இருக்கே என்று மோடியே கேட்டிருப்பார். இந்த ட்ரெண்டை திருப்பூர்வாசிகள் டிசர்ட் வியாபாரத்திற்கு பயன்படுத்திக்கொண்டுள்ளனர். சுத்தியலும், வடிவேலுவின் தலையும் பிரிண்ட் செய்யப்பட்ட டி சர்ட் ஆன்லைனில் அமோகமாக விற்பனையாகி வருகிறது.
பிரண்ட்ஸ் படத்தில் நீ புடுங்கிறது எல்லாமே தேவையில்லாத ஆணிதான்...போ போய் ஆணிய புடுங்கு என்று தனது அண்ணன் மகனை கடுப்பேத்தி அனுப்பி வைப்பார் வடிவேலு. அதே கடுப்போடு சுத்தியலை எடுத்துக்கொண்டு போய் ஆணியை பிடுங்கப்போன ரமேஷ் கண்ணா கை தவறி சுத்தியலை மேலே இருந்து நழுவ விட, அது வடிவேலுவின் தலையில் விழுந்து அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும்.
அந்த படத்தில் வடிவேலுவின் பேர் நேசமணி. பெயிண்டிங் காண்ட்ராக்டர் நேசமணியின் தலையில் சுத்தியல் விழுந்து அவர் காயம்பட்டு விட்டதாக செய்தி பரவ, அவருக்காக சமூக வலைத்தளத்தில் உலகமே பிரேயர் செய்தது. 19 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு நகைச்சுவை காட்சி உலக அளவில் பேசப்பட்டது இதுவாகத்தான் இருக்கும். இந்த ட்ரெண்டை வியாபார யுத்தியாகவும் பயன்படுத்திக்கொண்டுள்ளனர். நேசமணியின் உருவம் பதித்த டிசர்ட்களை உருவாக்கி உலகத்தை தங்களின் பக்கம் ஈர்த்துள்ளனர்.
ட்ரெண்டை வியாபாரமாக்கிய திருப்பூர்
சமூகவலைத்தளவாசிகள் பலரும் நேசமணிக்காக உருகி உருகி பிரேயர் செய்தனர். பலவிதமான பதிவுகளை, மீம்ஸ்களையும் பதிவிட்டனர்.
இதைத் தொடர்ந்து, இளைஞர்களை கவரும் விதமாக, சுத்தியலும் வடிவேல் தலையும் போட்ட உருவமும், #pray for Nesamani என்ற வாசகம் அடங்கிய டி-ஷர்ட்கள் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
திருப்பூர் டி சர்ட்
#pray for Nesamani ஹேஸ்டேக் டிரெண்ட் ஆகும் போதே தங்களின் நிறுவனத்தில் டி சர்ட்களை பிரிண்ட் செய்து விட்டனர் வீகா பனியன் நிறுவன உரிமையாளர்கள். இதனை போட்டோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வைரலாக்கவே ஆர்டர்கள் குவிந்து விட்டனவாம்.
நேசமணிக்குத்தான் டிமாண்ட்
நடிகர்கள், விளையாட்டு வீரர்களின் உருவம் பதித்த டிசர்ட்களை விட காண்ட்ராக்டர் நேசமணியின் உருவம் பதித்த டி சர்ட்டுகளுக்குத்தான் அமோக ஆதரவு கிடைத்து வருகிறது. லட்சக்கணக்கில் குவிந்துள்ள ஆர்டர்களுக்காக தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பலவண்ணங்கள்
வடிவேலு மயங்கி விழும் காட்சி அடங்கிய போட்டோவும் பிரிண்ட் செய்யப்பட்ட டி சர்ட்டும் விற்பனையில் படு விறுவிறுப்படைந்துள்ளது. ஒரு ட்ரெண்டை வைத்து வியாபாரம் செய்து லட்சக்கணக்கில் லாபம் சம்பாதித்து விட்டனர் திருப்பூர்வாசிகள்.
காவல்துறையும் கவனம் ஈர்த்தது
இருசக்கர வாகன ஓட்டிகள், ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்துவதற்கும் இந்த #pray for Nesamani ஹேஸ்டேக்கை, சென்னை போலீஸ் பயன்படுத்தியுள்ளனர். தலையில் காயம்படாமல் இருக்க ஹெல்மெட் போடுங்க என்று விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.