லக்னோ: விளைச்சல் அதிக அளவில் இருந்தாலும் மாம்பழங்களை பறிப்பதற்கு கால தாமதம் ஏற்படுவதால், மாம்பழப் பிரியர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் துசேரி மற்றும் அல்போன்சா வகை மாம்பழங்களின் விலை கடந்த ஆண்டைக் காட்டிலும் 50 சதவிகிதம் விலை அதிகமாக இருக்கக்கூடும் என்று மாம்பழ வியாபாரிகள் தெரிவித்தனர்.
வட மாநிலங்களில் மிகவும் புகழ்பெற்ற துசேரி வகை மாம்பழங்களின் விளைச்சல் அதிமாக இருந்த போதிலும் வரத்து குறைந்து காணப்படுகிறது. மாம்பழ விளைச்சல் சுமார் 40 லட்சம் டன்களாக இருக்கக்கூடும் என்றும், இந்திய சந்தைகளில் துசேரி வகை மாம்பழங்களின் வரத்து அடுத்த வாரத்தில் இருக்கும் என்று மலிகாபாத்தை சேர்ந்த மாம்பழ வியாபாரிகள் தெரிவித்தனர்.
இந்தியாவில் மாம்பழ சீசன் என்பது பொதுவாக ஏப்ரல் மாதத்திலேயே ஆரம்பித்துவிடும். இருந்தாலும் மே மற்றும் ஜூன் மாதங்களில் வரத்து அதிகமாக காணப்படும். அதிலும் தமிழ்நாட்டில் சேலம் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் மே மாதத்தில் தான் மாம்பழ வரத்து அதிக அளவில் இருக்கும். இங்கிருந்து தான் வெளிநாடுகளுக்கும் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படும்.
தமிழ்நாட்டில் மாம்பழ விளைச்சல் என்பது மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளான செங்கோட்டை, மேக்கரை, அச்சன்புதூர், வடகரை, புளியரை, வல்லம் போன்ற பகுதிகளில் மாம்பழ விளைச்சல் அதிக அளவில் இருக்கும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மழை குறைந்ததால் விளைச்சலும் குறைந்து காணப்பட்டது. அதோடு அதிகப்படியாக வீசிய காற்றினாலும் விளைச்சல் குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் பொதுவாக இமாம்பசந்த், மல்கோவா, பெங்களூரா, ருமேனியா, பங்கனப்பள்ளி, செந்தூரா, கிளிமூக்கு ஆகிய வகை மாம்பழங்கள் அதிக அளவில் சந்தைக்கு வரத்துவங்கியுள்ளன. மாம்பழங்களின் ராணியான அல்ஃபோன்சா வகை மாம்பழங்களின் வரத்து அடுத்த வாரத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வடமாநிலங்களில் இந்த ஆண்டு மாம்பழ விளைச்சல் கடந்த ஆண்டை விட அதிகரித்து காணப்பட்டாலும், அதிகப்படியான வெயிலின் தாக்கத்தால் மாம்பழங்களை பறிப்பதற்கான ஆட்கள் பற்றாக்குறையாக இருப்பதால் தற்போதைக்கு சந்தைக்கு மாம்பழ வரத்து என்பது மிகவும் குறைவாகவே காணப்படுகிறது.
குஜராத்தின் புகழ்பெற்ற அதிக சதைப்பற்றுள்ள கேசார் வகை மாம்பழங்களின் விளைச்சலும், மாம்பழப் பிரியர்களுக்கு மிகவும் பிடித்தமான மாம்பழங்களின் ராணி எனப்படும் மஹாராஷ்டிராவின் புகழ்பெற்ற அல்ஃபோன்சா வகை மாம்பழங்களின் விளைச்சலும் இந்த ஆண்டில் அதிகமாகவே உள்ளது. இவை இரண்டுன் வரத்தும் இந்தியச் சந்தைகளில் அடுத்த வாரத்தில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் வட மாநில மாம்பழப் பிரியர்களுக்கு பிடித்தமான உத்தரபிரதேசத்தின் நறுமணம் மிக்க துசேரி வகை மாம்பழங்களும் இந்த ஆண்டு அதிக விளைச்சலை தந்துள்ளது. இந்த வகை மாம்பழங்களின் வரத்தும் அடுத்த வாரத்தில் இந்தியச் சந்தையில் எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வகை மாம்பழங்களின் விலையானது கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் 50 சதவிகிதம் வரையிலும் அதிகமாகவே இருக்கும் என்று தெரிகிறது.
துசேரி வகை மாம்பழங்களின் விளைச்சலானது இந்த ஆண்டில் சுமார் 40 லட்சம் டன்களுக்கும் அதிமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு துசேரி வகை மாம்பழங்கள் 5 கிலோ அடங்கிய ஒரு பெட்டி ரூ.200க்கு விற்பனையானது. ஆனால் இந்த ஆண்டு அதைவிட 50 சதிவிகிதம் கூடுதலாக அதாவது ரூ.300க்கு விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக உத்தரப்பிரதேசத்தின் மலிகாபாத் ஏரியாவைச் சேர்ந்த சிவ் சரண் சிங் என்ற மாம்பழ விவசாயி தெரிவித்தார்.
உத்தரபிரதேசத்தில் கடந்த ஆண்டு 40 லட்சம் டன்களாக இருந்தது. நடப்பு வருடத்தில் விளைச்சல் கடந்த ஆண்டைவிட குறைவாகவே இருப்பதாக பல்வேறு தரப்பிலும் மதிப்பிடப்பட்டிருந்தது. அதே சமயத்தில் மாம்பழ வியாபாரிகள் சங்கத் தலைவரான இன்ஸ்ராம் அலி குறிப்பிடுகையில், இந்த ஆண்டு மாம்பழ விளைச்சல் சராசரி அளவாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் விளைச்சல் குறைவாக இருந்ததால் பறிப்பதற்கான பருவமும் தாண்டிவிட்டது.
அதோடு காலநிலை மாற்றத்தினாலும், ஆலங்கட்டி மழைப்பொழிவு போன்ற இயற்கை பேரிடர்களாலும் மலிகாபாத் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பழத்தோட்டங்களில் மாம்பழ விளைச்சல் மிகக் குறைந்து காணப்பட்டது.
இதே போன்ற பிரச்சனைதான், மஹாராஷ்டிரா மாநிலத்திலுள்ள புகழ்பெற்ற ரத்தினகிரி மாவட்டத்தில் விளையும் மாம்பழங்களின் ராணியான அல்ஃபோன்சா வகை மாம்பழங்களுக்கும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவும் இவற்றின் விலையும் கடந்த ஆண்டைக் காட்டிலும் 50 சதவிகிதம் அதிகரித்துக் காணப்பட்டது.