டெல்லி: மகப்பேறு காலங்களில் பெண் ஊழியர்களுக்கு ஆறு மாத விடுமுறை அளிப்பது போல ஆண் ஊழியர்களுக்கும் ஆறு மாத காலம் பேறுகால விடுமுறை திட்டத்தை ஜோமாட்டோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்திற்கு பெற்றோர் கடமை விடுமுறை என்று பெயரிட்டுள்ளது.இந்த சலுகை ஆண், பெண்களைப் போல குழந்தையைத் தத்தெடுப்பவர்களுக்கும், வாடகைத்தாயாய் இருப்பவர்களுக்கும், ஓரினச்சேர்கையாளர்களுக்கும் பொருந்தும் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனமாக ஜோமாட்டோ உள்ளது. உலகம் முழுவதும் 13 நாடுகளில் தங்களது உணவு டெலிவரி சேவையை ஜோமாட்டோ வழங்கி வருகிறது.
இந்த நிறுவனம் ஆண் ஊழியர்களுக்கும் 26 வாரங்கள் பெற்றோர்கள் கடமை விடுமுறை(new parental leave policy) வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
குழந்தை பிறக்கும் ஆண், பெண் இருவருக்கும் ரூ.70,000 மற்றும் 6 மாத லீவ் வழங்கப்படுமாம்.
பேறுகால விடுமுறை
இந்தியச் சட்டத்தின்படி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு ஆறு மாத கால மகப்பேறு விடுமுறை அளிக்கப்படுகிறது. தமிழ்நாடு எல்லாவற்றிலுமே முன்னோடி என்ற வகையில், ஏற்கனவே மகளிருக்கு வழங்கப்பட்டுவந்த பேறுகால விடுமுறை 6 மாதகாலமாக இருந்தது. 6 மாதகாலம் மகப்பேறு விடுமுறையை, 9 மாதகாலமாக அறிவித்து, கடந்த 2019 ஆண்டு நவம்பர் மாதம் முதல் அது நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது இந்தியா முழுவதும் அனைத்து முறைசார் பிரிவுகளிலும் உள்ள நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு சம்பளத்துடன் கூடிய 26 வாரகாலம் விடுமுறை அளிக்க வகைசெய்யும் மசோதா நடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவால், நாடுமுழுவதிலும் உள்ள 18 லட்சம் மகளிர் பயன்பெறுவார்கள்.
விடுமுறை கட்டாயம்
10 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களைக்கொண்ட அனைத்து நிறுவனங்களிலும் பணிபுரியும் பெண்களுக்கு முதல் 2 பிரசவங்களுக்கு 26 வார காலவிடுமுறை வழங்கப்பட வேண்டும். 3வது பிரசவத்துக்கு 12 வாரகாலம் விடுமுறை அளிக்கப்பட வேண்டும். இதுமட்டுமல்லாமல், இந்த மசோதாப்படி, குழந்தைகளை தத்தெடுக்கும் பெண்களுக்கும், வாடகைத்தாய் மூலம் குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கும் 12 வாரகாலம் விடுமுறை அளிக்கப்படவேண்டும்.
விடுமுறையுடன் உதவித்தொகை
ஜோமாட்டோ உணவு டெலிவரி செய்யும் நிறுவனம் தொழிலாளர்களிடம் அதிக வரவேற்பை பெறும் வகையில் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி புதிதாக குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதியினருக்கு சம்பளத்துடன் 26 வாரம் விடுமுறை அளிக்கப்படும். ஒரு குழந்தையின் பிரசவத்திற்கு உதவித்தொகையாக 70ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதற்கு பெற்றோர் கடமை விடுமுறை என்று பெயரிட்டுள்ளது.
ஆணும் பெண்ணும் சமம்
சொந்த வாழ்க்கையின் இலக்கும் அலுவலக வாழ்க்கையின் இலக்கும் எப்போது அர்த்தமுள்ளதாக இருக்கிறதோ அப்போதுதான் ஊழியர்கள் சிறந்த வேலையை அளிப்பார்கள் என்னைப் பொறுத்தவரை குழந்தைகளைப் பெற்றெடுக்கும் போது ஆணுக்கும் பெண்ணுக்கும் விடுமுறை அளிக்கும் கொள்கையில் சமமற்ற தன்மை நிலவுகிறது என்று ஜோமாட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல், தனது பிளாக்கில் பதிவிட்டுள்ளார். அனைவருக்கும் விடுமுறை சலுகை
மகப்பேறு காலங்களில் விடுமுறை அளிப்பதில் பெண்களுக்கு என்ன சலுகை வழங்கப்படுகிறதோ அதையே நாங்கள் ஆண் ஊழியர்களுக்கும் வழங்க உள்ளோம். இந்தச் சலுகை குழந்தையை தத்தெடுப்பவர்கள், ஓரினச் சேர்க்கையாளர்கள், வாடகைத்தாயாய் இருப்பவர்களுக்கும் பொருந்தும் என்றும் தீபிந்தர் கோயல் குறிப்பிட்டுள்ளார் அவருடைய அறிவிப்புக்கு ஊழியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தத் திட்டத்தை அனைத்து நிறுவனங்களும் அமல்படுத்தினால் நன்றாகவே இருக்கும்.