டெல்லி: நடப்பு 2019-20ஆம் நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்படைந்துள்ள நிலையில் புதுமையான யுக்திகள், ஆலோசனைகள், வரி சேமிப்புக்கான, வருமானத்தை பெருக்கும் ஆலோசனைகளை அனைவரிடத்தில் இருந்தும் வரவேற்கப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலே சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதத்தில் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டது. முந்தைய பாஜக ஆட்சியின் ஐந்து ஆண்டு நிறைவடைந்ததை ஒட்டி, தற்காலிக செலவினங்களுக்கு மட்டுமே இடைக்கால பட்ஜெட்டில் அனுமதியளிக்கப்பட்டது. அதோடு வருமான வரி செலுத்துவோரின் வரிச்சுமையை குறைக்கும் விதமாக ஐந்து லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் வருமான வரி செலுத்துவல் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
சமீபத்தில் நடைபெற்ற 17ஆவது லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியே மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது, பிரதமராக மோடியே தொடர்கிறார். மிக முக்கியத்துவம் வாய்ந்த நிதி அமைச்சராக மீண்டும் அருண் ஜெட்லியே வருவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், தன்னுடைய உடல்நிலையை காரணம் காட்டி தனக்கு வேண்டாம் என்று ஒதுங்கிக்கொண்டதால், அப்பொறுப்பை தனது நம்பிக்கைக்கு உரிய நபரான நிர்மலா சீதாராமனுக்கு ஒதுக்கி மோடி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.
நிதியமைச்சரும் இடைக்கால பட்ஜெட்டை முழு பட்ஜெட்டாக மாற்ற தீயாக வேலை செய்ய ஆரம்பித்துவிட்டார். நிதியமைச்சக அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அனைவரும் பம்பரமாக சுற்றி சுழன்று வேலை செய்து வருகிறார்கள். இதற்காக அனைத்து ஊழியர்களுமே அலுவலக காவலில் வைக்கப்பட்டுள்ளனர். பட்ஜட் ரகசியங்கள் வெளியில் கசிந்துவிடக்கூடாது என்ற காரணத்தினால் அவர்கள் யாரையும் வீட்டுக்கு அனுப்புவது கிடையாது.
பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளான ஜூலை 5ஆம் தேதி வரைக்கும் அவர்கள் அனைவருக்கும் தேவையான அனைத்தும் அவர்கள் வேலைசெய்யும் இருப்பிடத்திற்கே வந்துவிடும். இயற்கை உபாதையைத் தவிர.
பட்ஜெட் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நிதியமைச்சருக்கு முன் உள்ள முக்கியமான சவாலக பொருளாதார மந்தநிலை பிரம்மாண்டாக காட்சியளிக்கிறது. உலக வங்கியின் கணிப்பான 7.2 சதவிசிதம் என்ற அளவைக்காட்டிலும் குறைந்து 6.8 சதவிகிதத்திற்கு வந்துவிட்டது. நடப்பு நிதியாண்டில் நிச்சயமாக 7.5 சதவிகிதத்தை எட்டும் என்று உலக வங்கியின் பொருளாதார ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. எனவே பொருளாதாரத்தை வலுவாக்க, தொழில் துறையை மேலும் வளர்ச்சியடையத் தேவையான ஆக்கபூர்வமான திட்டங்களை பட்ஜெட்டில் கொண்டுவர வேண்டும் என்று தொழில் துறையினர் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்.
அடுத்ததாக, நாளுக்கு நாள் பெருகி வரும் வேலையில்லாத் திண்டாட்டம். கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத வகையில் 6.7 சதவிகிதத்தை எட்டியுள்ளதாக மத்திய பொருளாதார கண்காணிப்பு மையமும் புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது. எனவே வேலையில்லாத் திண்டாட்டத்தை குறைத்து வேலை வாய்ப்பை பெருக்கும் வகையில் பட்ஜெட்டில் தொழில் துறைக்கும், தொழில் முனைவோருக்கும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிலை அதிகரிக்கும் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும்.
எனவே, எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்பது போல், இவை இரண்டையும் மனதில் கொண்டு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வேலை செய்ய தொடங்கியுள்ளார். அவரும் பட்ஜெட் தொடர்பாக பலதரப்பினரிடம் இருந்தும் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும், வேலை வாய்ப்பை பெருக்கும், வரி சேமிப்புக்கு உதவும் ஆக்கபூர்வமான ஆலோசனைகளை பொதுமக்களிடம் இருந்தும் வரி ஆலோசகர்களிடம் இருந்தும், பொருளாதார நிபுணர்களிடமிருந்தும் வரவேற்கிறார். அனைவரும் தங்களின் மேலான ஆலோசனைகளை நிதியமைச்சருக்கு தாராளமாக தெரிவிக்கலாம்.
இது பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில், பட்ஜெட் தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமிருந்தும் மேலான ஆலோசனைகள் வந்து கொண்டிருக்கின்றன. அதை நான் வரவேற்கிறேன், தங்களின் ஆலோசனைகளுக்கு மிக்க நன்றி, என குறிப்பிட்டுள்ளார்.