டெல்லி: மத்திய அரசின் பட்ஜெட்களில், அரசுக்குச் சொந்தமான சொத்துக்களை விற்று, அரசுக்கு தேவையான நிதியைத் திரட்டுவதற்கு தனியாக இலக்கு நிர்ணயிக்கப்படும். அப்படி 2018 - 19 நிதி ஆண்டில் அரசுக்குச் சொந்தமான சொத்துக்களை விற்று 80,000 கோடி ரூபாய் வருவாய் திரட்ட இலக்கு நிர்ணயித்து, சுமார் 84,000 கோடி ரூபாய் திரட்டினார்கள். ஆனால் இப்போது 2019 - 20-ல் 90,000 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயித்திருக்கிறார்கள்.
மத்திய நிதி அமைச்சகத்தில் கீழ் இயங்கும் Department of Investment and Public Asset Management (DIPAM)துறை தான் மத்திய அரசுக்குச் சொந்தமான சொத்துக்களை விற்று வருவாயைத் திரட்டுகின்றன.
இப்போது எந்தெந்த நிறுவனங்களை விற்று நிதி திரட்டலாம் என Department of Investment and Public Asset Management (DIPAM) ஒரு பட்டியல் போட்டிருக்கிறது. Scooters India, Bharat Pumps & Compressors, Project & Development India, Hindustan Prefab, Hindustan Newsprint, Bridge & Roof Co. and Hindustan Fluorocarbons போன்ற நிறுவனங்களை விற்கத் தேவையான நடவடிக்கைகளை கடந்த சில ஆண்டுகளாகவே எடுத்து வருகிறார்கள். ஆனால் இந்த பட்டியலை எல்லாம் கிடப்பில் போட்டு விட்டு, நிதி ஆயோக்கின் பட்டியலை முதலில் விற்கச் சொல்லிக் கொண்டிருக்கிறார்களாம் நிதி ஆயோக்கின் அதிகாரிகள்.
நிதி ஆயோக் கொடுத்த பட்டியலில், என் டி பி சி என்கிற மின்சார உற்பத்தி நிறுவனத்தின் பதர்பூர் மின் ஆலையை மட்டும் விற்பது, அதே என் டி பி சி யின் 400 ஏக்கர் நிலத்தை விற்றுவிடுவது. செயில் நிறுவனத்தின் ப்ரவுன்ஃபீல்ட் திட்டத்தை மட்டும் அலேக்காக விற்று விடுவது, சிமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் சில திட்டங்களை விற்று விடுவது, என பட்டியல் நீள்கிறது. இதெல்லாம் ஒரு நிறுவனத்துக்குச் சொந்தமாக இருக்கும் ப்ராஜெக்ட் திட்டங்கள் மற்றும் சொத்துக்கள். ஆனால் இதை எல்லாம் தாண்டி அரசுக்குச் சொந்தமான 24 நிறுவனங்களை, முழுமையாக, அப்படியே விற்கப் போகிறார்களாம். இதில் ஏர் இந்தியா தான் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறதாம்.
அடுத்த படியாக நிதி அமைச்சகத்தின் கீழ், மத்திய நிதி அமைச்சர் தலைமையில் அரசு சொத்துக்களை விற்க உருவாக்கப்படும் பேனல்களின் ஒப்புதல் கிடைத்த உடன் அடுத்த மார்ச் 2020-க்குள் ஒவ்வொரு சொத்தாக விற்கத் தயாராக இருக்கிறார்கள் நிதி ஆயோக் மற்றும் Department of Investment and Public Asset Management (DIPAM) அதிகாரிகள்.