டெல்லி: அமெரிக்கா தனது வர்த்தக முன்னரிமை நாடுகளின் பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கி விட்டதால், இது நாள் வரையிலும் அனுபவித்து வந்த சிறப்பு சலுகைகளை இனிமேல் பெற முடியாத நிலையில், பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்சனைகளை பேசித் தீர்த்துக்கொள்ள இந்தியா அழைப்பு விடுத்த போதும், அமெரிக்க அதை நிராகரித்ததால், இந்தியாவும் வர்த்தக முன்னுரிமை சலுகைக்காக அமெரிக்காவிடம் கெஞ்சப்போவதில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
தனது இறக்குமதி பொருட்களுக்கு இந்தியா விதித்திருந்த இறக்குமதி வரி உயர்வை வாபஸ் பெற்றுக்கொள்ளும்படி அமெரிக்கா பலமுறை கோரிக்கை விடுத்திருந்த போதிலும், இந்தியா தனது நிலையை மாற்றிக்கொள்ளாததால், இறுதியில் அமெரிக்கா இதுநாள் வரையிலும் இந்தியாவுக்கு அளித்து வந்த சலுகையை திரும்பப் பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதிகளிடம் இருந்த பெறப்பட்ட தரவுகளின் படி, கடந்த 2018ஆம் ஆண்டில் இந்தியா சுமார் 36 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்தது. அதே சமயத்தில் முன்னுரிமை வர்த்தக சலுகையாக சுமார் 1800 கோடி ரூபாயை மட்டுமே பெற்று வந்தது. இதன் காரணமாகவே, இந்தியாவும் தனது நிலையை மாற்றிக்கொண்டதாக மெத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா நிர்பந்தம்
அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 29 வகையான பொருட்களுக்கு இந்தியா கடந்த 2018ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் கூடுதல் இறக்குமதி வரி விதித்தது. இருந்தாலும் அமெரிக்காவின் பலமான நிர்பந்தம் மற்றும் மிரட்டல் காரணமாக பல முறை அந்த வரி உயர்வை இந்தியா பல முறை தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தது.
இந்தியா இழுத்தடிப்பு
கடந்த பிப்ரவரி மாதத்தில் இறுதியாக இறக்குமதி வரியை ரத்து செய்யுமாறு இறதி எச்சரிக்கை விடுத்தது. அதற்காக மே மாதம் 2ஆம் தேதியை இறுதி கெடு நாளாகவும் நிர்ணயித்தது. ஆனால், கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்று வந்த லோக்சபா தேர்தலை காரணம் காட்டி இந்தியாவும் போக்கு காட்டி வந்தது. ஆனாலும், இது பற்றி பேச்சுவார்த்தை நடத்த வருமாறு அமெரிக்காவை கேட்டுக்கொண்டது.
வரி உயர்வை ரத்து செய்
இந்தியாவின் அழைப்பை ஏற்று கடந்த மே மாதம் 6ஆம் தேதி இங்கு வந்த அமெரிக்க வர்த்தக செயலாளர் வில்பர் ரோஸ், இந்தியாவின் நடவடிக்கையைப் பார்த்து எரிச்சலானார். முடிவில் இந்தியாவில் உள்ள அமெரிக்க நிறுவனங்களுக்கு ஏற்படும் சிக்கல்களை களையுமாறும், இறக்குமதி வரி உயர்வை ரத்து செய்யுமாறும் வலியுறத்தினார்.
ஜூன் 16 வரை ஒத்திவைப்பு
வில்பர் ரோஸின் கோரிக்கையை ஏற்று இந்திய அதிகாரிகளும், தற்போது தேர்தல் நடைபெறுவதால், தேர்தல் முடிந்து புதிய ஆட்சி பொறுப்பேற்ற உடன் இது பற்றி பேச்சுவார்த்தை நடத்தப்போவதாகவும், அது வரையிலும் வரும் ஜூன் 16ஆம் தேதி வரையிலும் இறக்குமதி வரி உயர்வை ஒத்தி வைத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
வர்த்தக சலுகை இனி கிடையாது
இந்த நிலைமையில் கடந்த மே மாத இறுதியில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், யாரும் எதிர்பாராத நிலையில், நாங்கள் அளித்துவந்த முன்னுரிமை வர்த்தக சலுகையை பெற்று பயனடைந்துவரும் இந்தியா போன்ற நாடுகள் எங்களுடைய பொருட்களுக்கு அதிகப்படியான இறக்குமதி வரியை விதிக்கிறது. இதனால் எங்களின் ஏற்றுமதி பாதிப்படைகிறது. ஆகவே ஜூன் 5ஆம் தேதிக்கு பின்னர், இந்தியாவுக்கு நாங்கள் அளித்துவந்த முன்னுரிமை வர்த்தக சலுகையை திரும்பப் பெற்றக்கொள்வதாகவும், முன்னுரிமை வர்த்தக நாடுகளின் பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கி விட்டதாகவும் தடாலடியாக குண்டைப் போட்டார்.
பேச்சுவார்த்தைக்கு தயார்
ட்ரம்ப் அதிரடி காட்டிய வேளையில் இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றக்கொண்டிருந்ததால், உடனடியாக இந்தியா எந்தவிதமான எதிர்வினையையும் தெரிவிக்காமல் மவுனமாகவே இருந்தது. மறுநாள் இதுகுறித்து கருத்து தெரிவித்த வர்த்தக அமைச்சரான பியுஷ் கோயல், அமெரிக்காவின் அறிவுப்பு எதிர்பாராதது. ஆனாலும் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று மென்மையாகவே கருத்து தெரிவித்திருந்தார்.
அமெரிக்கா நிராகரிப்பு
பியூஷ் கோயலின் கருத்துக்கு பதிலளித்த ட்ரம்ப் இது எதிர்பாராதது. ஆனாலும் நான் இதைத்தான் எதிர்பாத்தேன் என்று எக்குத்தப்பாக பதிலளித்தார். இந்தியத் தரப்பில் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டதையும் நிராகரித்தார். மேலும் இந்தியா அளிக்க தயாராக இருந்த வர்த்தக தொகுப்பு சலுகை (Favourable Trade Package)யையும் நிராகரித்தார்.
மன்டியிடமாட்டோம்
இந்தியாவின் அழைப்பையும் சலுகையையும் ட்ரம்ப் கண்டுகொள்ளாததால், வேறு வழியில்லாமல் இந்தியாவும் தற்போது பதிலுக்கு அமெரிக்காவின் முன்னுரிமை சலுகை எங்களுக்கு தேவையில்லை. அதற்காக நாங்கள் அவர்களிடம் கையேந்தி கெஞ்சப்போவதும் கிடையாது என்று பியூஷ் கோயல் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
போட்டிக்கு தயார்
வர்த்தகத்துறை அமைச்சராக பொறப்பேற்ற பின்னர் கடந்த வியாழனன்று, முதன் முறைய பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில், இந்தியா தனது உரிமையை எப்போதும் எதற்காகவும் விட்டுக்கொடுக்காது. அதோடு இந்தியா தனது ஏற்றுமதி வர்த்தகத்தில் போட்டித் தன்மையை உருவாக்க முயற்சிக்கும். அமெரிக்கா அளித்துவந்த முன்னுரிமை வர்த்தக சலுகையையும் நாங்கள் இனிமேல் கேட்கப்போவதில்லை என்று கூறினார்.
வாழ்வா சாவா போராட்டம் இல்லை
மற்ற நாடுகள் இந்தியாவின் வளர்ச்சிக்கு இதுநாள் வரையிலும் கருணையுடன் உதவியதை மறக்கவில்லை. அதோடு அந்த உதவிகளை நின்றுபோனதற்காக நாங்கள் வருத்தப்படவும் கிடையாது. முன்னுரிமை வர்த்தக சலுகை என்பது ஏற்றுமதியாளர்களுக்கு வாழ்வா, சாவா என்ற போராட்டம் இல்லை. ஒரு சில துறைகளில் வேண்டுமானால், எங்காவது சில இடங்களில் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம். அதுவும்கூட 1 சதவிகிமோ அல்லது 2 சதவிகிதமோ, அவ்வளவே. இந்தியா ஒன்றும் இன்னும் வளர்ச்சியடையாத நாடாகவோ அல்லது வளர்ச்சி குறையாத நாடாவோ இல்லை. எங்களுக்கு யார் முன்னுரிமை தருகிறார்களோ அவர்களோடு நாங்கள் வர்த்தகத்தை நடத்திக்கொள்கிறோம் என்றும் கோயல் கூறினார்.
நம் வழி தனி வழி
நம் நாட்டின் முன்னேற்றத்திலும், வளர்ச்சி சுழற்சியிலும் பல நாடுகள் முன்னின்று உதவுவதோடு, பல பிரச்சனைகளில் இருந்தும் வேகமாக வெளிவர நமக்கு துணையாக இருந்தன என்பதை நம்புகிறோம். ஆனால் சில நாடுகள், இது தான் எங்கள் பாதை, நாங்கள் இப்படித்தான் நடந்துகொள்வோம் என்று தீர்மானித்து வேற வழியை தேர்ந்தெடுத்தால், நாமும் அதற்கேற்ப நம்முடைய பாதையை போட்டி மனப்பான்மையுடன் தேர்ந்தெடுத்து எதிர்கொள்வோம் என்றும் கோயல் உறுதியாகக் கூறினார்.
யானைப் பசிக்கு சோளப்பொரி
அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதிகளிடம் இருந்த பெறப்பட்ட தரவுகளின் படி, கடந்த 2018ஆம் ஆண்டில் இந்தியா சுமார் 36 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்தது. அதே சமயத்தில் முன்னுரிமை வர்த்தக சலுகையாக சுமார் 1800 கோடி ரூபாயை மட்டுமே பெற்று வந்தது. இதன் காரணமாகவே, இந்தியாவும் தனது நிலையை மாற்றிக்கொண்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.