டெல்லி: வரும் 2019 ஜூலை 05-ம் தேதி, இரண்டாம் முறையாக பதவி ஏற்றிருக்கும் மோடி அரசு, 2019 - 20 நிதி ஆண்டுக்கான, தன் முழு பட்ஜெட்டை (Budget) தாக்கல் செய்யப் போகிறது. நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சராக பொறுப்பேற்று தாக்கல் செய்ய இருக்கும் முதல் பட்ஜெட்.
இந்த வேலைக்கு அல்வா கிண்டிக் கொடுத்து பட்ஜெட் தயாரிக்கும் அனைத்து அதிகாரிகளையும் தனியாக வைத்து விடுவார்கள். கிட்டதட்ட வெளி உலகத்துடன் எந்த ஒரு தொடர்பும் இருக்காது என்பதை எல்லாம் படித்திருக்கிறோம். அந்த திருவிழா இன்று டெல்லியில் தொடங்கிவிட்டார்களாம்.
இதை ஆங்கிலத்தில் Quarantine Period என்று சொல்வார்கள். இந்த Quarantine Period-ல் என்ன எல்லாம் செய்வார்கள், எப்படி பாதுகாக்கப்படுவார்கள், கண்காணிக்கப்படுவார்கள், செல்ஃபோன் & இணைய வசதிகள்..? இதற்கு முன் பட்ஜெட் டாக்குமெண்டுகள் வெளியே லீக் ஆகி இருக்கிறதா..? வாங்க விளக்கமா பாக்கலாம்.
கண்காணிப்பு
இந்த Quarantine Period காலத்தில் ஒட்டு மொத்த நிதி அமைச்சக அலுவலகமே துப்பாக்கி ஏந்திய காவலர்களால் நிரம்பி வழியுமாம். சாதாரண ஜன்னல் கதவு தொடங்கி, நிதி அமைச்சர் வந்து போகும் மெயின் கதவுகள் வரை எல்லா இடத்திலும் எலெக்ட்ரானிக் ஐடி கார்ட்களை வைத்து தான் அனுமதி வழங்கி இருப்பார்களாம். அந்த ஐடி இல்லாமல் பிரதமரே ஆனாலும் நிதி அமைச்சக அலுவலகத்தில் நுழைய முடியாதாம். இந்த Quarantine Period-ல் நிதி அமைச்சருக்குக் கூட தனி எலெக்ட்ரானிக் ஐடி கொடுப்பார்களாம்.
காவலர்கள்
ஐடி கார்டை வைத்து அதிகாரிகள் உள்ளே சென்ற உடன் வழக்கம் போல வாச கதவை நோக்கி காவலர்கள், காவல் காத்துக் கொண்டிருக்க மாட்டார்களாம். மாறாக உள்ளே பட்ஜெட் தயாரிப்பில் இருக்கும் அதிகாரிகள் என்ன செய்கிறார்கள் என நான்கு ஷிஃப்ட் போட்டு அக்மார்க் விளக்கெண்ணெய் ஊற்றி கண்காணித்துக் கொண்டிருப்பார்களாம். இந்த பாதுகாப்புப் பணியைச் செய்ய, இந்தியாவின் உள் நாட்டு உளவு வேலைகளை கவனித்துக் கொள்ளும் IB - Intelligence Bureau-வையே நேரடியாக பணியில் அமர்த்தப்படுவார்களாம். இவர்களுக்கு உதவியாக டெல்லி காவல் துறையும் இருக்குமாம்.
அந்த நீல பேப்பர்
நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொருளாதார விவகாரத் துறை தொடங்கி, புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை (Ministry of Statistics and Program Implementation) வரை பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் அரசுத் துறைகள், இந்தியாவின் முக்கியமான பொருளாதார விவரங்களை எல்லாம் நிதி அமைச்சகத்துக்கு கொடுத்திருப்பார்கள். அனைத்து தரவுகளும் திரட்டப்பட்டு ஒரு நீல பேப்பரில் பிரிண்ட் அவுட் எடுத்துக் கொடுப்பார்களாம்.
இத்தனை ரகசியமா..?
பொதுவாக, இந்தியப் பொருளாதாரத்தைப் பொறுத்து தான் மத்திய பட்ஜெட்டில் பல திட்டங்களை முன் வைப்பார்கள் மத்தியில் ஆளும் அரசினர். ஆகையால் இந்த நீல பேப்பருக்கு அத்தனை மவுஸாம். இந்த நீல பேப்பரை நிதி அமைச்சர் பார்க்கலாம், விவாதிக்கலாம், பென்சிலில் கிறுக்கலாம்.... ஆனால் வீட்டுக்கு எல்லாம் கொண்டு போக முடியாதாம். பட்ஜெட் தயாரிப்பு வேலையில் ஈடுபட்டிருக்கும், அரசால் நியமிக்கப்பட்ட பட்ஜெட் இணைச் செயலர் மட்டுமே தன் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளலாமாம். மற்றவர்கள் பிடியில் இந்த நீல பேப்பர் போகவே கூடாதாம்.
இந்த முறை
Arvind Shrivastava, IAS தான் இந்த முறை பட்ஜெட் தயாரிப்புக்கு இணைச் செயலராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் பொறுப்பில் தான் அந்த நீல பேப்பர் இருக்கப் போகிறது. ஆகையால் கிட்ட தட்ட மொத்த பட்ஜெட்டைத் தூக்கிப் பிடிக்கும், பாதுகாக்கும் முக்கியமான பொறுப்பை சுமந்து கொண்டிருக்கிறார் நம் Arvind Shrivastava.உத்திரப் பிரதேசத்தில் பிறந்து வளர்ந்து, UPSC தேர்வில் தேர்வாகி, கர்நாடகத்தில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக பணியில் சேர்ந்தவர் Arvind Shrivastava.
தனிமைச் சிறை
பட்ஜெட் தயாரித்துக் கொண்டிருக்கும் நேரங்களில் கூட கொஞ்சமே கொஞ்சம் சுதந்திரம் இருக்குமாம். ஆனால் பட்ஜெட் டாக்குமெண்டுகளை ஃபைனல் செய்த பிறகு, இன்னும் ராணுவ கட்டுப்பாட்டில் தான் பட்ஜெட் தயாரித்த அதிகாரிகள் இருக்க வேண்டி இருக்குமாம். பட்ஜெட் தயாரிக்கத் தொடங்கியதில் இருந்தே சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் வீட்டு பக்கமே போக முடியாது என்பதை படித்திருப்பீர்கள். ஆனால் பட்ஜெட் தயாரித்த பின், அந்த பட்ஜெட் டாக்குமெண்டுகளை பிரிண்ட் அவுட் எடுக்கும் சாதாரண உதவியாளர்கள் கூட வீட்டுக்கு போக முடியாதாம். பட்ஜெட் ஜூலை 05-ம் தேதி வாசித்து முடிக்கும் வரை அனைவரும் நிதி அமைச்சகத்தில் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும்.
நோ ஃபோன்
நிதி அமைச்சக அலுவலகத்தில் நுழையும் அதிகாரிகளின் செல்ஃபோன்களை எல்லாம் பிடுங்கி வைத்து விடுவார்களாம். அவ்வளவு ஏன் உள்ளே பட்ஜெட் தயாரிப்பு வேலையில் பயன்படுத்தப்படும் கணிணிகளில் இருந்து குறிப்பிட்ட சில மெயில் ஐடிகளைத் தவிர மற்ற எந்த மெயில் ஐடியில் இருந்தும் மெயில் செய்ய முடியாதாம். நிதி அமைச்சகத்தில் பட்ஜெட் தயாரிப்பு வேலைகளில் பயன்படுத்தப்படாத, பத்திரிகையாளர் சந்திப்பு பகுதிகளில் இருக்கும் சாதாரண கணிணிகளைக் கூட இணையத்தில் இருந்து துண்டித்துவிடுவார்களாம். எவ்வளவு கட்டுப்பாடு..?
பட்ஜெட் லீக்
1950-ம் ஆண்டு வரை பட்ஜெட் டாக்குமெண்ட்களை நிதி அமைச்சகம் தயாரித்துவிட்டு, குடியரசுத் தலைவர் அலுவலகத்துக்கு எடுத்துச் சென்று பிரிண்ட் போடுவார்களாம். 1950-ம் ஆண்டு பட்ஜெட்டில் ஒரு சில பகுதிகள் பகிரங்கமாக பொது மக்கள் கையில் கிடைக்கத் தொடங்கிவிட்டதாம். அதன் பிறகு தான் பட்ஜெட் டாக்குமெண்டுகளை இன்னும் பாதுகாப்பாக பிரிண்ட் செய்ய டெல்லி மிண்டோ ரோடில் ஒரு பிரஸ் வைத்தார்களாம். 1980-ம் ஆண்டில் இருந்து தான் பட்ஜெட் டாக்குமென்டுகள் நிதி அமைச்சக அலுவலகங்களிலேயே பிரிண்ட் செய்து விடுகிறார்களாம். பட்ஜெட் டாக்குமெண்டுகளை வெளியிடுவது Indian Officials Secrets Act 1923 படி தவறு. இந்த சட்டத்தை எதிர்த்தும், ஆர்டிஐ சட்டங்களை மேற்கோள் காட்டியும் பல வழக்குகள் இன்னும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.
இந்த ரகசியம் தேவையில்லை
தேவை இல்லை என்பது தான் பெருவாரியான குரலாக ஒலிக்கிறது. ஏன் எனக் கேட்டால் "என்னங்க இது, இன்னுமா பிரிட்டீஷ்காரன் செஞ்ச மாதிரியே பட்ஜெட்டை தயார் செய்யுறது. ஏகப்பட்ட நாடுகள்ள பட்ஜெட் தயாரிச்சு பொது வெளியில ஒரு சில மாசம் வெச்சி ஒப்பீனியன் கேட்டு ரெடி பண்ணிக்கிட்டு இருக்குற காலத்துல போய் இன்னும் கடுமையா, தனிமையா உட்கார்ந்து பட்ஜெட் ரெடி பண்ணிக்கிட்டு இருக்கீங்களே" என்கிறார்கள்.
ரகசியம் தேவை
இல்லை கண்டிப்பாக பட்ஜெட் தயாரிப்பதில் இது போன்ற ரகசியங்கள் தேவை எனச் சொல்பவர்கள் "இந்தியால இப்ப தான் பங்குச் சந்தை மியூச்சுவல் ஃபண்டு எல்லாம் கொஞ்சம் பிரபலம் ஆகிக்கிட்டு இருக்கு. இந்த நேரத்துல பட்ஜெட் விவரம் எல்லாம் வெளில கிடைச்சா அதனால் இந்திய பங்குச் சந்தையில பெரிய மாறுதல்கள் ஏற்படலாம்" ஆகையால் பட்ஜெட்டை இத்தனை ரகசியமாக கையாள்வதில் தவறில்லை என்கிறார்கள் ஆதரவாளர்கள்.