டெல்லி: வர்த்தகர்கள், தொழில் துறையினரின் நீண்டநாள் கோரிக்கையான ஜிஎஸ்டி மாதாந்திர ரிட்டனில் மாற்றம் செய்யவேண்டும் என்ற கோரிக்கையை ஏற்ற மத்திய அரசும் மறைமுக வரிகள் வாரியமும் தற்போது முற்றிலும் புதிய ஜிஎஸ்டி ரிட்டன் படிவத்தை தயார் செய்துள்ளது. வரும் அக்டோபர் மாதம் முதல் அனைவரும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
தற்போது நடைமுறையில் இருக்கும் ஜிஎஸ்டிஆர்-3பி படிவம் வரும் டிசம்பர் மாதம் வரையிலும் நடைமுறையில் இருக்கும் என்றும், அதில் உள்ள உள்ளீட்டு வரி பயனையும் இதற்கு மாற்றிக்கொள்ளலாம் என்றும் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
வாட் வரி முறைக்கு மாற்றாக, கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலையில் சரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்டது. பின்னர் மாதாந்திர ரிட்டன் படிவங்கள் அனைத்தும் 2017ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய வரிமுறை அமல்படுத்தப்பட்டாலும் சில தொழில்நுட்பக் கோளாறுகள் இருந்ததால் மாதாந்திர ரிட்டன் தாக்கலும் தாமாமானது.
அதோடு, புதிய மாதாந்திர ரிட்டன் படிவங்களில், கொள்முதல், விற்பனை மற்றும் நிகர வரி செலுத்துதல் ஆகியவற்றுக்கு தனித்தனியாக படிவங்கள் இருந்ததால், வர்த்தகர்களுக்கும் தொழில் துறையினருக்கும், ரிட்டன் படிவங்களை தயார் செய்வதிலும் குழப்பமும், கால தாமதமும் ஏற்பட்டது. இதன் காரணமாக மாதாந்திர ரிட்டன் தாக்கல் செய்வதை தவிர்த்தும், கால தாமதம் செய்தும் வந்தனர். இதனால் மத்திய மாநில அரசுகளுக்கு சீராக வரவேண்டிய ஜிஎஸ்டி வரிகளில் சுனக்கம் ஏற்பட்டது.
மத்திய, மாநில அரசுகளுக்கு வரவேண்டிய ஜிஎஸ்டி வரி வருவாய் தடைபட்டதற்கான காரணத்தை அறிந்து கொண்ட ஜிஎஸ்டி ஆணையமும், விரைவில் அனைத்து தரப்பினருக்கும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் ஜிஎஸ்டி ரிட்டன் படிவங்கள் மாற்றியமைக்கப்படும் என்று அறிவித்தது. மேலும் இதற்கான ஆலோசனைகளை வரி ஆலோசகர்களும், பொது மக்களும் தெரிவிக்கலாம் என்றும் அறிவித்தது
வரி ஆலோசகர்களும், வரி நிபுணர்களும் தங்களின் ஆலோசனைகளை ஜிஎஸ்டி ஆணையத்திற்க வழங்கியதை அடுத்து, கடந்த ஜனவரி மாதத்திலேயே புதிய படிவம் தயார் செய்யப்பட்டுவிட்டது. ஆனாலும் சில தொழில்நுட்பக் கோளாறுகள் இருந்ததால் அதை கண்டுபிடித்து சரி செய்வததில் கால தாமதம் ஏற்பட்டது. பின்னர் கோளாறுகள் சரி செய்யப்பட்டு தயார் நிலையில் இருந்தது.
இந்நிலையில், லோக்சபா தேர்தல் குறுக்கிட்டதால், புதிய படிவத்தை நடைமுறைப்படுத்துவதில் கால தாமதம் ஏற்பட்டது. தற்போது தேர்தல் முடிந்து புதிய ஆட்சி அமைந்து விட்டதை அடுத்து, புதிய ஜிஎஸ்டி ரிட்டன் படிவத்தை அமல்படுத்த தயாராகி வருகிறது.
புதிய மாதாந்திர ஜிஎஸ்டி ரிட்டன் படிவமும், வாட் வரி முறையில் உள்ளதைப் போலவே ஒரே படிவமாக, கொள்முதல், விற்பனை மற்றும் நிகர வரி என அனைத்தையும் ஜிஎஸ்டி ரிட்-01 (GST RET?01) படிவத்தில் தயார் செய்யும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது. கொள்முதல் மற்றும் விற்பனை விவரங்களை, பின்பக்க இணைப்பு 1 மற்றும் 2 (Anx1 & Anx 2) ஆகியவற்றில் தயாரித்துக் கொள்ளலாம்.
புதிய படிவங்கள் வரும் ஜூலை முதல் செப்டம்பர் வரையில் பரிசோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் முதல் அமல்படுத்தப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இதற்கான முறையான அறிவிப்பினை வரும் ஜூலை 5ஆம் தேதி தாக்கல் செய்யும் முழு பட்ஜெட்டில் அறிவிக்கப்படலாம் என்று நிதியமைச்சக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் முதல் விற்பனை விவரங்கள் ஜிஎஸ்டி-ஆர்1 படிவத்தில் தயார் செய்வதற்கு பதிலாக ஜிஎஸ்டி இணைப்பு 1 (Anx 1) பகுதியிலும், இணைப்பு 2 (Anx 2) பகுதியில் கொள்முதல் விவரத்தையும் பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என்றும் நிதியமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த 2018-19ஆம் நிதியாண்டில் விற்றுமுதல் (Turnover) 5 கோடி ரூபாய்க்கும் கூடுதலாக உள்ள வர்த்தகர்களும் தொழில் துறையினரும் வரும் அக்டோபர் முதல் தங்களின் மாதாந்திர ரிட்டன்களை இணைப்பு 1ல் (Anx 1) பதிவேற்றம் செய்து கொள்ளலாம். ரிட்டன்களை வழக்கம்போல் ஜிஎஸ்டி-ஆர்3 பி படிவத்திலேயே தாக்கல் செய்து கொள்ளலாம். இவர்களை அனைவரும் டிசம்பர் மாத ரிட்டன் தாக்கல் செய்யும்போது ஜிஎஸ்டி ரிட்-01 படிவத்திற்கு மாற்றிக்கொள்ளலாம் என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆண்டு விற்றுமுதலை ரூ.5 கோடிக்கு கீழ் கணக்கு தாக்கல் செய்தவர்கள் அனைவரும் தங்களின் காலாண்டுக்கான ஜிஎஸ்டி ரிட்டன்களை, கட்டாயம் இணைப்பு 1ல்(Anx 1) தாக்கல் செய்வது அவசியம் என்றும் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதேபோல், சிறு வர்த்தகர்கள் மற்றும் தொழில் துறையினர் ஏற்கனவே தாக்கல் செய்து வந்த ஜிஎஸ்டிஆர்-3பி படிவத்திற்கு பதிலாக வரும அக்டோபர் மாதத்திலிருந்து ஜிஎஸ்டி பிஎம்டி-08 (GST PMT-08) படிவத்தில் மூலமாக தாக்கல் செய்து கொள்ளலாம். அதே போல் டிசம்பர் காலாண்டுக்கான ஜிஎஸ்டி ரிட்-01 படிவத்தை வரும் 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தாக்கல் செய்துகொள்ளலாம் என்றும் நிதியமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.