டெல்லி: ஒரு நாட்டின் ஆட்டோமொபைல் துறை சரிகிறது என்றால் அந்த நாட்டின் பொருளாதாரமே சரியத் தொடங்குகிறது எனச் சொல்வார்கள் பொருளாதார அனலிஸ்டுகள்.
இந்தியாவில் கடந்த ஆறு மாதங்களாக, கார் விற்பனை கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து கொண்டிருக்கிறது. அதிலும் கடந்த இரண்டு மாதங்களில் இந்திய கார் விற்பனை சுமார் 20 சதவிகிதம் வரை சரிந்திருக்கிறது.
இந்த சவால்களை சரிகட்ட, மீண்டும் தங்கள் கார்களின் விற்பனையை அதிகரிக்க, கார் தயாரிப்பு நிறுவனங்கள் ஒரு புதிய மேற்கத்திய பாணி விற்பனையை கையில் எடுத்திருக்கிறது.
லீஸுக்கு கார்
ஹியூண்டாய், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, ஸ்கோடா, ஃபியாட் போன்ற கார் தயாரிப்பு நிறுவனங்கள் சுமார் 17,000 முதல் 22,000 ரூபாய்க்குள் கார்களை லீசுக்குக் கொடுக்கத் தொடங்கி இருக்கிறார்களாம். ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு விதமாக லீஸ் விடுகிறார்கள். பொதுவாக லீஸுக்கு விடும் கார்களுக்கு டவுன் பேமெண்ட் வாங்கிக் கொள்ளாமல் இருப்பது, கார்களுக்கான பராமரிப்புகளை எல்லாம் கார் நிறுவனங்களே பார்த்துக் கொள்வது, நடுவில் காரை வாங்கிக் கொள்வது என்றாலும் மீதி பணத்தை செலுத்திவிட்டு காரை வாங்கிக் கொள்வது என பல வசதிகளைக் கொண்டு வருகிறார்கள்.
ஹியூண்டாய்
தென் கொரிய கார் உற்பத்தி நிறுவனமான ஹியூண்டாய் தன்னுடைய ஹியூண்டாய் க்ரெட்டா என்கிற காரை லீஸுக்கு விடுகிறது. சென்னையில் ஹியூண்டாய் க்ரெட்டா காரின் ஷோரூம் விலை 9.60 லட்சம் ரூபாய். இதோடு ஆர்டிஓ கட்டணங்கள் 96,000 ரூபாய் + இன்ஷூரன்ஸ் 66,000 ரூபாய் என மொத்தம் 11.21 லட்சம் ரூபாய் செலவாகிறது. இந்த காரை மாதம் 17,642 ரூபாய்க்கு லீஸ் விடுகிறார்கள். லீஸ் காலம் 5 ஆண்டுகள்.
டவுன் பேமெண்ட் என்றால்
இந்த காரை சொந்தமாக, வங்கி கடன் மூலம் வாங்க வேண்டும் என்றால் கூட 2.73 லட்சம் ரூபாய் டவுன் பேமெண்ட் கட்ட வேண்டும். அதன் பிறகு மாதாமாதம் சுமார் 19,000 ரூபாய் இஎம்ஐ கட்ட வேண்டும். ஆனால் இப்போது லீஸுக்கு மாதம் வெறும் 17,642 ரூபாய் (சாலை வரிகள் & ஜி எஸ் டி வரி உடனான லீஸ் தொகை இது) செலுத்தினால் போதும், காரை ஒட்டிச் செல்லலாம். இதற்கு பராமரிப்பு வேலைகளை எல்லாம் ஹியூண்டாய் நிறுவனமே பார்த்துக் கொள்வார்கள்.
இருசக்கர வாகனம்
இந்தியாவிலேயே டெல்லி, மும்பை போன்ற பெருநகரங்களில் மட்டும் ஆர்தர் எனர்ஜி என்கிற இரு சக்கர வாகன நிறுவனம், தன் ஆர்தர் 450 என்கிற எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனத்தை மாதம் 2,500 ரூபாய் என 3 வருடங்களுக்கு லீஸுக்கு விடுகிறது. ஆனால் அதற்கு டவுண்ட் பேமெண்டாக 75,000 ரூபாய் செலுத்த வேண்டி இருக்கிறது. 3 ஆண்டு முடிவில் மீண்டும் 75,000 ரூபாய் திருப்பிக் கொடுக்கப் படுமாம்.
ஹியூண்டாய் நிறுவனம்
இந்தியாவில் கார்கலை இஎம்ஐ-க்கு வாங்குவதைக் கூட கவுரவக் குறைச்சலாகப் பார்த்த காலங்கள் உண்டு. ஆனால் இப்போது வங்கிக் கடனில் கார் வாங்குவது எல்லாம் சகஜமாகிவிட்டது. அதே போல இந்தியாவில் கார்களை லீசுக்கு எடுத்துக் கொள்வதும் சகஜமாகிவிடும். இன்றைய இளைஞர்கள் தங்கள் எதிர்காலத்துக்கான முதலீடுகளைச் சரியாகச் செய்கிறார்கள். மீதப் பணம் இருந்தால் கார் எல்லாம் என்கிறார்கள். கார் வாங்க விரும்புபவர்கள், கூடுமானவரை கார் ஷேரிங் செய்கிறார்கள். எனவே தான் லீஸ் திட்டம் இந்தியாவில் விரைவில் வெற்றி பெறும் என நம்புகிறோம் என்கிறது ஹியூண்டாய்.
யாருக்கு எல்லாம்
ஹியூண்டாயின் இந்த திட்டத்தை, மாதம் சுமார் 50,000 ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் சம்பளதாரர்கள், மருத்துவர் வழக்கறிஞர் ஆடிட்டர் போன்ற துறை சார் ப்ரொஃபஷனல்கள், ஓரளவுக்கு தொழிலில் வெற்றி பெற்ற சின்ன சின்ன தொழிலதிபர்கள், கார்ப்பரெட் நிறுவனங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் என பலருக்கும் இந்த திட்டத்தை ஏ எல் டி ஆட்டோமோட்டிவ் என்கிற நிறுவனம் மூலம் லீஸுக்குத் தரத் தொடங்கி இருக்கிறார்களாம்.
யாருக்கு செட் ஆகும்
கார் செலவுகளை நினைத்து கார் வாங்காமல் இருப்பவர்கள், லீஸ் வழியாக காரை வாங்க நினைப்பவர்கள், பெரிய அளவில் டவுன் பேமெண்ட் கட்ட முடியாதவர்கள், சில வருடங்களுக்கு ஒரு முறை காரை மாற்ற நினைப்பவர்கள், சந்தையில் வரும் புதிய கார்களை எல்லாம் பயன்படுத்த விரும்புபவர்களுக்கு எல்லாம் இந்த லீஸ் திட்டம் ஒரு நல்ல வாய்ப்பு தான்.
இதுவரை இந்தியாவில்
இந்தியாவின் மொத்த கார் சந்தையில், லீஸ் வெறும் 1 சதவிகிதமாகத் தான் இருக்கிறது. ஆனால் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளில் கார் லீஸ் சந்தை, மொத்த கார்கள் பயன்பாட்டில் சுமார் 30 சதவிகிதத்தை ஆக்கிரமித்திருக்கிறது. இன்னும் இந்தியாவில் மிகப் பெரிய கார் உற்பத்தியாளரான மாருதி சுஸிகி இந்த களத்தில் இறங்கவில்லை. ஆனால் கண்ணில் க்ளிசரின் ஊற்றி கவனித்துக் கொண்டிருக்கிறார்களாம்.
என்ன லாபம் வாடிக்கையாளர்களுக்கு
1. டவுன் பேமெண்ட் கட்டாமல் வாகனத்தை பயன்படுத்தத் தொடங்கலாம். வங்கிக் கடன் தொல்லை இல்லை.
2. லீஸ் காலம் முழுவதும் வாகன பராமரிப்பை கார் உற்பத்தி நிறுவனங்களே பார்த்துக் கொள்வார்கள். கூடுதல் கார் செலவுகள் இல்லை.
3. அடிக்கடி கார் மாற்றுபவர்கள் அதே விலை கொடுத்து பல கார்களை ஓட்டி கெத்து காட்டலாம்.
என்ன லாபம் கார் நிறுவனத்துக்கு
1. கார்களை லீஸ் விடுவதால் கார் மோகம் அதிகரித்து அடுத்த சில வருடங்களில் லீஸ் வழியாக அதிக கார்கள் விற்பனை செய்யப்படும்.
2. கார் உற்பத்தி மீண்டும் சீரடையும்
3. கார் தயாரிப்பு நிறுவனம் - வங்கி - வாடிக்கையாளர் என்றிருந்த முறை மாறி, கார் தயாரிப்பு நிறுவனமும் - வாடிக்கையாளர்களும் நேரடியாக பேசிக் கொண்டு லீஸ் எடுப்பார்கள்.
4. சுருக்கமாக இனி வங்கிக் கடனில் செலுத்தும் இ எம் ஐ-யை கார் நிறுவனங்களே வாங்கத் தொடங்கிவிடுவார்கள். அப்படியே காரை விற்ரும் விடுவார்கள்.
சாசே புரட்சி
1990-களில் பணக்காரர்கள் பயன்படுத்தும் விலை உயர்ந்த ஷாம்பூக்கள், காஸ்மெட்டிக்ஸ்களை எல்லாம் அரை லிட்டர் ஒரு லிட்டர் பாட்டில்களில் தான் கிடைக்கும். அதை சாசே பாக்கெட்களில் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய்க்கு அடைத்து விற்கத் தொடங்கி சந்தைத்ப்படுத்துதலில் பெரிய புரட்சியே செய்தது கெவின் கேர் நிறுவனம். அது போல இன்று கார் நிறுவனங்களும் 5 லட்சம் 6 லட்சத்துக்கு கீழ் கார் கிடைக்காத போது, அதே கார்களை லீஸ் என்கிற பெயரில் மாதம் 18,000 ரூபாய்க்கு தரத் தொடங்கி இருக்கிறார்கள். சாசே புரட்சி இப்போது காரிலும் நடக்கத் தொடங்கி இருக்கிறது.