பெங்களூரு: இந்தியாவில் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு ஏற்ற திறமையான சவாலான வேலை கிடைப்பதில்லை. அதற்கு பதிலாக ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரையிலான சம்பளத்திற்கேற்ற குறைந்த தகுதியுள்ள வேலைகளே அதிக அளவில் கிடைப்பதாக இன்ஃபோசிஸ் நிறுவன முன்னாள் தலைமை நிதி அதிகாரியான டி.வி.மோகன்தாஸ் பய் (T V Mohandas Pai) தெரிவித்துள்ளார்.
அதேபோல், இந்தியாவில் நல்ல தகுதியான திறமையான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுவதில்லை. இளைஞர்களின் கற்பனைக்கேற்ற வேலை கிடைப்பதற்கு மாற்றாக குறைவான சம்பளத்திலேயே வேலை கிடைக்கிறது. இதற்கு இந்தியாவின் பூகோள ரீதியிலான மற்றும் பிராந்திய அமைப்பும் ஒரு முக்கிய காரணம் என்று மோகன்தாஸ் பய் வெளிப்படையாக கூறினார்.
இந்தியாவில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கையில் 15 வயது முதல் 29 வயது வரை உள்ளவர்களே அதிக அளவில் உள்ளதாக வேலையில்லாத் திண்டாட்டம் பற்றிய புள்ளிவிவரப் பட்டியல் தெரிவிக்கிறது என்று பய் கூறினார். அதோடு ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக சுமார் 60 முதல் 70 லட்சம் வரையில் குறைவான சம்பளம் பெறும் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவாதாக இபிஎஃப்ஒ (EPFO) அமைப்பு தெரிவித்துள்ளது.
அதிகரிக்கும் வேலையில்லாத் திண்டாட்டம்
இந்தியாவில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துவிட்டதாக இந்தியா பொருளாதார கண்காணிப்பு மையம் (Centre for Monitoring Indian Economy-CMIE) கடந்த பிப்ரவரி மாதத்தில் புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் சுமார் 6.7 சதவிகிதத்தை எட்டிவிட்டதாகவும் தரவுகளை வெளியிட்டு பீதியை கிளப்பியுள்ளது.
3 கோடி பேருக்கு வேலையில்லை
கூடவே, தற்போது வரையிலும் இந்தியாவில், சுமார் 3 கோடி பேர் வரையிலும் உயர் கல்வி முடித்துவிட்டு வேலையில்லாமல் திண்டாடி வருகின்றனர். அதுவும், பொறியியல் மற்றும் வணிகவியல் பட்டப்படிப்பு முடித்துவிட்டு நான்கில் மூன்று பேல் நல்லதொரு வேலைவாய்ப்பிற்காக காத்திருப்பதாகவும் பொருளாதார கண்காணிப்பு மையம் புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது.
அனுபவ அறிவு அதிகம்
நிலைமை இப்படி இருக்க கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்தியா வந்த ஐஎம்எஃப் தலைவரான கினி ரொமெட்டியும் இதே கருத்தை தெரிவித்திருந்தார். அதோடு, இந்தியாவில் உள்ள தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை செய்பவர்களில் சுமார் 65 சதவிதிதம் பேர் போதிய பயிற்சி இல்லாதவர்களாகவே உள்ளனர். எந்த வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்களோ அதற்கு துளியும் பொருத்தமற்றவர்களாகவே உள்ளனர். பல்கலைக்கழக பட்டப்படிப்பை விட தேர்ந்தெடுக்கப்பட்ட வேலைக்கேற்ப திறமைதான் அவசியம் என்றதோடு, குறைந்த படிப்பறிவு கொண்ட அனுபவ அறிவின் காரணமாக கூடுதல் சம்பளம் வாங்குவோர் இந்தியாவில் அதிகம் பேர் உள்ளனர் என்றும் அவர் கருத்து தெரிவித்திருந்தார்.
பட்ஜெட் எதிர்பார்ப்பு
தற்போது மத்தியில் மீண்டும் ஆட்சிப்பொறுப்பேற்றுள்ள மோடியும் வேலை வாய்ப்பை பெருக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முடுக்கிவிட்டுள்ளார். வரும் ஜூலை 5ஆம் தேதி தாக்கல் செய்யவிருக்கும் நடப்பு ஆண்டுக்கான முழு பட்ஜட்டிலும் இது குறித்து முக்கிய திட்டங்கள் வெளியாக அதிக வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்களும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் அதிக அளவில் வேலை வாய்ப்பை உருவாக்கும் தொழில் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பபோவதாகவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நல்லவேலை இல்லையே
இந்நிலையில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரியான டி.வி.மோகன்தாஸ் பய் , இந்தியாவில் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கான திறமையான வேலைவாய்ப்புகள் கிடைப்பது கடினமாக உள்ளது. ஆனால் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரையிலான குறைந்த சம்பளத்திற்கான வேலைகளே அதிக அளவில் தாராளமாக கிடைப்பதாகவும், அதோடு நல்ல வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுவதில்லை என்று ஆதங்கப்பட்டார்.
திறமைக்கு மதிப்பில்லையே
இந்தியாவில் வேலை வாய்ப்புகளுக்கு பிரச்சனை என்பது கிடையாது. ஏராளமான அளவில் வேலை வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. ஆனால் அவை எல்லாம் குறைந்த சம்பளத்திற்கான வேலை வாய்ப்புகளாகவே உள்ளன. பட்டப்படிப்பு முடித்த இளைஞர்கள் கனவு காணும் வேலை என்பது கனவாகவே உள்ளது. இதன் காரணமாகவே அவர்கள் குறைந்த சம்பளத்தில் தங்களை பொருத்திக்கொண்டு வேலை பார்ப்பதால், தங்களின் திறமையையும் வெளிப்படுத்த முடியாமல் போய்விடுகிறது என்று மோகன்தாஸ் பய் கூறினார்.
சீனாவைப் பாருங்கள்
இந்தியாவில் தகுதிக்கேற்ப வேலை கிடைக்காமல் போவதற்கு முக்கியமாக, இந்தியாவின் பூகோள மற்றும் பிராந்திய அளவிலான நில அமைப்பும் காரணமாகும். இதனை தவிர்க்க வேண்டுமானல், சீனாவைப்போல் நாமும் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் அதிக அளவில் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் கட்டமைப்போடு கூடிய உயர் தொழில்நுட்ப நிறுவனங்களையும், தொழிற்சாலைகளையும் உருவாக்க வேண்டும்.
ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு
கடற்கரையோர பிராந்தியங்களில் தொழிற்சாலைகளை உருவாக்குவதோடு, வேலை தேடுவோருக்கும் எளிதில் வேலை கிடைக்கும் வகையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறைகளில் அதிக முதலீடுகளை அதிகரிக்க வேண்டும். சீனாவில் முதலில் இதே உத்தியைத்தான் பயன்படுத்தினார்கள். முதலில் வேலை வாய்ப்புகள் அதிக அளவில் தேவைப்படும் தொழில்களை உருவாக்கினார்கள். பின்னர் அதற்கேற்ப ஏற்றுமதி தொழிலையும் அதிக அளவில் ஆரம்பித்தனர் என்று மோகன்தாஸ் பய் கூறினார்.
மின்னணு பொருட்கள் உருவாக்கம்
குறிப்பாக சீனாவில், அதிக அளவில் வேலை கிடைக்கும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறைகளான தொழில்நுட்பத் துறை தொழில்களான மின்னணு பொருட்கள் உருவாக்கம், சிப்கள் தயாரிப்பு போன்ற தொழில்களால் அதிக அளவிலான வேலை வாய்ப்புகள் கிடைப்பதற்கான ஒரு ஆரோக்யமான சூழல் உருவானது குறிப்பிடத்தக்கது. இவ்வகையான தொழிற்சாலை கட்டமைப்புகளை எல்லாமே கடற்பிராந்தியங்களை ஒட்டியே அமைந்திருப்பதால், விநியோகச் சங்கலி என்பது அற்றுப்போகாமல் இருக்கிறது என்றும் பய் தெரிவித்தார்.
இந்தியாவில் அப்படி இல்லை
இந்தியாவில் அப்படி இல்லை. அதிக அளவில் தொழிலாளர்கள் தேவைப்படும் தொழில்களை உருவாக்குவதில்லை, அதற்கேற்ப திட்டமிடுவதும் கிடையாது. அதற்கேற்ப தொழிற்கொள்கைகளையும் நாம் ஏற்படுத்துவதில்லை. இதன் காரணமாகவே நம்மால் அதிக அளவிலான அதாவது நம்மிடமுள்ள உபரி தொழிலாளர்களை பயன்படுத்த முடியாமல் போகிறது என்று வருத்தப்பட்டார்.
ஆண்டுக்கு 70 லட்சம் தான்
இந்தியாவில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கையில் 15 வயது முதல் 29 வயது வரை உள்ளவர்களே அதிக அளவில் உள்ளதாக வேலையில்லாத் திண்டாட்டம் பற்றிய புள்ளிவிவரப் பட்டியல் தெரிவிக்கிறது என்று பய் கூறினார். அதோடு ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக சுமார் 60 முதல் 70 லட்சம் வரையில் குறைவான சம்பளம் பெறும் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவாதாக இபிஎஃப்ஒ (EPFO) அமைப்பு தெரிவித்துள்ளது.
35 லட்சம் ஓட்டுநர்கள்
இந்தியாவில் வாகன விற்பனை என்பதும் வேலைவாய்ப்போடு தொடர்புடையதாக உள்ளது. உதாரணமாக 30 முதல் 35 லட்சம் பேல் வேலை வாய்ப்புகளை பெற்ற கையோடு தள்ளுபடியில் கார்களையோ இரு சக்கர வாகனத்தையோ கொள்முதல் செய்துவிடுகிறார்கள். ஆனால் இவற்றில் அதிகபட்சமாக 5 லட்சம் கார்களுக்கு மட்டுமே ஓட்டுநர் தேவைப்படுகின்றனர். ஆனால் நம் நாட்டில் ஓட்டுநர்களின் வேலைவாய்ப்பு என்பது 30 முதல் 35 லட்சம் வரை உள்ளனர் என்று மோகன்தாஸ் பய் தெரிவித்தார்.