டெல்லி: சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், கூடிய விரைவில் பாஜகவின் முதல் ஆட்சிக் காலத்தில் கொண்டு வந்த மோட்டார் வாகனச் சட்டத்தில் கொண்டு வந்திருக்கும் மாற்றங்களை அங்கீகரிக்கக் போகிறார்களாம்.
கடந்த 2014 - 2019 ஆட்சிக் காலத்திலேயே மோட்டார் வாகனச் சட்டத்தில் கொண்டு வந்த மாற்றங்களுடன், அதே சட்டத்தை தற்போது ராஜ்ய சபாவில் தாக்கல் செய்யப் போகிறார்களாம். ஏற்கனவே இந்த சட்டம் திருத்தங்களுடன் மக்களவையில் நிறைவேற்றி விட்டார்கள்
மாநில அரசுகள் போடும் சாலைப் போக்குவரத்து சட்ட திட்டங்களை எல்லாம் ஒரு பக்கம் ஒதுக்கி விட்டு, மாநில அரசுகளின் உரிமைகளையும் புறம் தள்ளிவிட்டு, மத்திய அரசு இந்த விதிகள் மூலம் சாலை தவறுகளுக்கு கடுமையான அபராதங்களை நிர்ணயித்து இருக்கிறார்களாம். அந்த சட்டத்தில் கொண்டு வர இருக்கும் முக்கிய மாற்றங்களை மட்டும் இங்கே பார்ப்போம்.
மாற்றம் செட் 1
1. ஓட்டுநர் உரிமம் எடுக்க, வாகனத்தை பதிவு செய்ய ஆதார் கட்டாயம்.
2. இந்தியா முழுக்க இனி ஒரே மாதிரியான வாகனப் பதிவு சான்றிதழ்கள் (RC - Registeration Certificate) வழங்கப்படும்.
3. சாலை விதி மீறல்களுக்கு அதிகபட்சம் ஒரு லட்சம் வரை அபராதம் விதிக்கலாம். மாநில அரசுகள் தங்கள் இஷ்டப்படி இந்த 1 லட்சம் ரூபாயில் இருந்து 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கலாமாம்.
மாற்றம் செட் 2
4. சாலை விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு 2 லட்சம் ரூபாய் வரை நஷ்ட ஈடு வழங்கப்படும். இப்போது வரை 25,000 தான் வழங்கப்படுகிறதாம்.
5. 18 வயதுக்குட்பட்டவர்கள் வாகனத்தை ஓட்டி ஏற்படுத்தும் விபத்துகளுக்கு அவர்களின் காப்பாளர் மற்றும் வாகன உரிமையாளரே பொறுப்பாக்கப்படுவார். வாகன பதிவுகள் ரத்து செய்யப்படுமாம்.
6. குடிமக்கள் குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் 10,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டி இருக்கும். இதற்கு முன் 2,000 ரூபாய்.
மாற்றம் செட் 3
7. வேகக் கட்டுப்பாட்டைத் தாண்டி ரேஷ் டிரைவிங் செய்பவர்களுக்கு 5,000 ரூபாய் தண்டம் கட்ட வேண்டும். இதற்கு முன் 1,000 ரூபாய்.
8. ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் 5,000 ரூபாய் கப்பம் கட்ட வேண்டும். இதற்கு முன் 500 ரூபாய்.
9. அதிவேகமாக வாகனம் ஓட்டினால் 1,000 - 2,000 ரூபாய் அபராதம். இதற்கு முன் 400 ரூபாய்
10. சீட் பெல்ட் போடவில்லையா 1,000 ரூபாய் அபராதம், இதற்கு முன் 100 ரூபாய்.
மாற்றம் செட் 4
11. போனில் பேசிக் கொண்டே வாகனம் ஓட்டினால் 5,000 ரூபாய் மொய் எழுத வேண்டும். இதற்கு முன் 1,000 ரூபாய்
12. தரமற்ற வாகன தயாரிப்புப் பொருட்கள் மற்றும் இன்ஜின்கள் கண்டு பிடிக்கப்பட்டால் 500 கோடி ரூபாய் வரை தயாரிப்பு நிறுவனங்கள் அபராதம் செலுத்த வேண்டி இருக்கும்.
13. ஆட்டோமொபைல் நிறுவன பொருட்களின் தரக் குறைவுக்கு ஒப்பந்ததாரர்கள், ஆலோசனை நிறுவனங்கள் என சம்பந்தப்பட்ட அனைவருமே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுவார்களாம்.
மாற்றம் செட் 5
14. ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்க (Renewal) இதுவரை ஒரு மாத காலம் மட்டுமே வழங்கப்பட்டது. ஆனால் இந்த புதிய சட்டத்தினால் ஒரு வருடம் வரை கால அவகாசம் வழங்கப்படுகிறது.
15. சாலை விபத்துக்களில் மற்றவர்களுக்கு உதவுபவர்கள் தங்கள் அடையாளங்களை விருப்பப்பட்டால் மட்டுமே காவலர்களிடமோ அல்லது மருத்துவ உதவியாளர்களிடமோ சொன்னால் போதும்.
16. விபத்தில் ஒருவர் இறந்துவிட்டால் அவருக்கு இன்ஷூரன்ஸ் மூலம் 10 லட்சம் ரூபாயும், கடுமையான காயங்கள் (விளக்கவில்லை) ஏற்பட்டால் 5 லட்சம் ரூபாயும் நஷ்ட ஈடாக வழங்கப்படுமாம்.