ஜெருசலேம்: சமைப்பதற்கு ஆட்கள் இருந்தும் வீட்டில் சமைப்பதை சாப்பிடாமல் தினமும் ஹோட்டல்களில் இருந்து வகை வகையாக உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டு, ரூ.70 லட்சம் வரையிலும் பொதுமக்களின் பணத்தை சாப்பிட்டு தீர்த்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் மனைவி சாராவை இஸ்ரேல் கோர்ட் கண்டித்துள்ளது. கூடவே ரூ.10 லட்சம் வரை அபராதமும் விதித்துள்ளதோடு, சாப்பாட்டுக்காக பணத்தை தவணை முறையில் திரும்ப செலுத்தவும் உத்தரவிட்டுள்ளது.
பொதுமக்களின் நம்பிக்கைக்கு விரோதமாக நடந்துகொண்டதாக அவர்மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் இது ஆதாரமில்லாத குற்றச்சாட்டு என்றும் பிரதமரின் புகழை குறைக்கும் வகையில் எதிர்கட்சிகள் திட்டமிட்டு செய்த சதி என்றும் சாராவின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆளும் லுகுட் கட்சியே மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. பிரதமராக வழக்கம்போலவே பெஞ்சமின் நெதன்யாகு பொறுப்பேற்றுக் கொண்டார். இதன்மூலம், இஸ்ரேல் என்ற நாடு உருவானதில் இருந்து தொடர்ந்து ஐந்து முறை பிரதமராக பதவி வகித்தவர் என்றதோடு நீண்காலம் பிரதமராக பதவி வகித்தவர் என்ற பெருமையை பெஞ்சமின் நெதன்யாகு பெற்றுள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் மனைவி
நெதன்யாகு பிரதமராக பதவி வகிப்பதால் அவரை பார்ப்பதற்கு தினமும் விருந்தினர்களும், அரசு அதிகாரிகளும் தொடர்ந்து வந்த வண்ணம் இருப்பதுண்டு. இவர்களை உபசரித்து தேநீர் மற்றும் சாப்பாடு என விருந்தோம்பல் செய்யவேண்டியது கட்டாயமாகும். இதற்கான பொறுப்பை நெதன்யாகுவின் மனைவியான சாராதான் கவனித்துக்கொள்வது வழக்கம்.
தினசரி விருந்து
இஸ்ரேல் நாட்டின் சட்டதிட்டங்களின் படி பிரதமர், அவருடைய குடும்பத்தினர் மற்றும் அவருடன் இருப்பவர்களுக்கு உணவு தயாரிப்பதற்காகவே ஒரு குழு பணியாற்றுவது வழக்கமாகும். இந்தக் குழுதான் பிரதமருக்கும் உடன் இருப்பவர்களுக்கும் அன்றாடம் உணவு வகைகளை தயாரித்து தருவார்கள். இது காலம் காலமாக தொடரும் நடைமுறையாகும்.
அரசு செலவில் ஹோட்டல் சாப்பாடு
இந்நிலையில் பெஞ்சமின் நெதன்யாகுவின் மனைவி சாரா, பிரதமரின் இல்லத்தில் சமைப்பதை சாப்பிடாமல் கடந்த பல நாட்களாக ஹோட்டல்களில் இருந்து தேவையான உணவு வகைகளை தனது விருப்பம் போல் ஆர்டர் செய்து சாப்பிட்டு வந்துள்ளார். இதற்கான மொத்தப் பணத்தையும் இஸ்ரேல் அரசு கஜானவிலிருந்தே செலவழிக்கப்பட்டிருந்தது.
ரூ. 70 லட்சம் செலவு
இந்த வகையில் சுமார் 70 லட்சம் ரூபாய் வரையிலும் அரசு கஜானாவில் இருந்து ஹோட்டலுக்கு செலவழிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து பொதுமக்களின் பணத்தை தன் இஷ்டத்திற்கு எடுத்து செலவழித்தாக சாராவின் மீது ஜெருசலேம் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
ஹோட்டல் சாப்பாடு ஏன்
வழக்கு விசாரணையின் போது, பிரதமரின் வீட்டில் உணவு தயார் செய்வதற்காக வெளியாட்கள் வரவழைக்கப்பட்டது சாராவிற்கு தெரியாது என்றும் பிரதமரின் அலுவலக நிர்வாக மேலாளர்களால் வெளியிலிருந்து உணவு வகைகள் ஆர்டர் செய்து வரவழைக்கப்பட்டன என்றும் சாராவின் வழக்கறிஞர் வாதாடினார். ஆனாலும் பின்னர் சாரா தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
திரும்ப கொடுக்கணும்
இதனையடுத்து அவர் மீது பொது மக்களின் பணத்தை பொறுப்பற்ற முறையில் செலவழித்ததாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதோடு அவருக்கு சுமார் 7 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அதோடு ஹோட்டலில் சாப்பிட்ட தொகையை தவணை முறையில் செலுத்தவும் ஜெருசலேம் மாஜிஸ்ட்ரேட் கோர்ட் உத்தரவிட்டது.
பிரதமர் மனைவி என்றாலும் தவறுதான்.
இஸ்ரேல் நாட்டில்தான் இதெல்லாம் சாத்தியம். நம் நாட்டில் சாதாரண கவுன்சிலரின் மனைவி கூட இப்படி ஹோட்டலில் சாப்பிடதற்காக பைன் கட்டியிருக்க முடியாது. பாவம் சாரா. பிழைக்கத் தெரியாதவர். அரசியலில் இன்னமும் அவர் எல்கேஜியைக் கூட தாண்டவில்லை. அவர் தினமும் ஃப்ளைட் பிடித்து வந்து நம் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளிடம் ட்யூசன் படிக்கவேண்டும். 4 மாதத்தில் இட்லி சாப்பிடுவதற்கு மட்டுமே 2 கோடி ரூபாய் எப்படி செலவழிப்பது என்பது பற்றி தெரிந்துகொள்வதற்கு.