நாமக்கல் : சென்னை தமிழகம் முழுவதும் தண்ணீர்ப் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. பாளம் பாளமாக வெடித்து கண்ணீர் விட வைக்கிறது பூமி. குறிப்பாக தலைநகர் சென்னையின் நிலை மிக மோசம் என்றே கூறலாம். இந்த நிலையைப் பயன்படுத்தி போர்வெல் தொழில் களை கட்டியுள்ளது. கல்லா கட்டி வருகிறது.
தற்போது தமிழகம் முழுவதும் குறிப்பாக சென்னையில் போர் போடும் வேலைதான் படு ஜோராக, மும்முரமாக நடந்து வருகிறது. கிட்டத்தட்ட சென்னையில் திரும்பிய பக்கமெல்லாம் போர்வெல்கள் போடும் வேலைதான் ஜரூராக நடக்கிறது என்றே கருதலாம்.
போர்வெல் நிறுவனங்களுக்கு இப்போது பண மழை கொட்டிக் கொண்டிருக்கிறது. டல்லடித்துக் கிடந்த வேலை இப்போது தமிழகம் மற்றும் சென்னையில் நிலவும் வறட்சியால் லாபகரமாக மாறியுள்ளது.
டல்லடித்துக் கிடந்த போர்வெல்?
முன்பெல்லாம் வீடு கட்டும்போது தான் போர் போடுவாங்க. அதுவம் ரொம்ப ஆழமா போட மாட்டாங்க. அதிபட்சம் 100 அடிதான். தண்ணீர் கொட்டோ கொட்டென்று கொட்டும். முன்னர் வாரத்தில் இரண்டு மூன்று என்று போர்கள் தற்போது வாரத்தில் எல்லா நாளும் பிசியாகவே இருக்கிறது.
போர்வெல் வண்டிகள் கிடைப்பதில்லை?
நாமக்கல் பகுதியிலிருந்து ஏராளமான போர்வெல் வாகனங்கள் சென்னையில் முகாமிட்டுள்ளன. குறிப்பாக புறநகர்ப் பகுதிகளில் அதிக அளவிலான போர்வெல் வாகனங்களைக் காண முடிகிறது. முன்பெல்லாம் தெருவுக்குத் தெரு டீக்கடை இருக்கும். இப்போது ஊருக்கு ஊர் போர்வெல் வாகனங்களை அதிகம் பார்க்க முடிகிறது. எனினும் வண்டிகள் தண்ணீருக்காக தோண்ட புக் செய்தால் 10 - 15 நாள் கழித்தே வர முடியும் என்று கூறுகின்றனவாம். அந்த அளவு கிராக்கிகள் உள்ளனவாம். ஆழம் அதிகமாக தோண்ட முடியாது என்பதால் ஒரு நாளைக்கு இரண்டு கூட போர்வெல் போடுகிறார்களாம்.
தற்போது 200 அடியில் தண்ணீர் சில இடங்களில் இல்லை
சென்னை புறநகர்களில் பொதுவாக 50 - 100 அடி தோண்டினாலே தண்ணீர் வந்து விடும். அதிலும் முன்னரெல்லாம் பெரும்பாலான வீடுகளில் 25 அடி முதல் 50 அடி வரைதான் போர்வெல் போட்டிருப்பார்கள். ஆனால் தற்போது பருவ மழை பொய்த்து விட்டதால் போர்வெல மற்றும் கிணறுகள் வற்றி மக்களை வாட்டி வதைத்தும் வருகின்றன.
தண்ணீர் இல்லாததால் பயன் இல்லை?
பல பகுதிகளில் போர்வெல் கிணறுகளில் நீர்மட்ட அளவு வெகுவாக இறங்கிப் போய் விட்டது. பெரும்பாலான பகுதிகளில் 200 அடிக்கும் கீழே நீர் மட்டம் போயுள்ளது. எனினும் சென்னையில் அதிக ஆழத்தில் போர்வெல் போட அனுமதியில்லாததால் பல போர்வெல்கள் போட்டும் பயன் இல்லாமல் தான் இருக்கிறது.
சென்னையில் தற்போது பிசியான தொழில்
சென்னையின் வறட்சியால் போர்வெல் நிறுவனங்களுக்கு பெரும் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. சென்னையில் திரும்பிய பக்கமெல்லாம் போர்வெல் வாகனங்கள்தான். படு பிசியாக இந்த தொழிலில் ஈடுபட்டிருப்போர் இப்போது சென்னை நகரிலும் புறநகர்ப் பகுதிகளிலும் போர் போடும் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.
போர்வெல் செலவு
போர் போடுவதற்கு ஒரு அடிக்கு சராசரியாக ரூ.90 - 120 வரை செலவாகிறதாம். அதன் உள்ளே செலுத்தும் பைப் லைனுக்கு ரூ.200 - 220 வரை வாங்கப்படுக்கிறதாம். இந்த செலவினமே குறைந்தபட்சம் 50,000 ரூபாய்க்கு மேல் வரும் என்கிறார்கள் இந்த போர்வெல் ஆப்ரேட்டர்கள். அதோடு போர்வெல்லினுள் செலுத்தும் மோட்டார் செலவு சராசரியாக ரூ.30,000வரை இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இது மோட்டாருக்கு மோட்டார் வித்தியாசப்படும். அதோடு போர்வெல் ஆழம் அதிகரிக்கும் அளவை பொறுத்து இந்த செலவினம் இன்னும் அதிகரிக்குமாம். ஆமாங்க.. ஆழம் அதிகரிக்க அதிகரிக்க ரூ.10 கூடிக் கொண்டே போகுமாம். எப்படியும் ஆள் கூலி, டிரான்ஸ்போர் செலவு என அனைத்தும் சேர்த்து சராசரியாக ரூ.1 லட்சம் வரை செலவாகலாம் என்றும் கருதப்படுகிறது.
சமீபகாலமாக சென்னையில் உள்ள இட நெருக்கடி, நெரிசல்கள் போன்ற பிரச்னைகள் மற்ரும் போக்குவரத்து செலவுகளை எல்லாம் காரணம் காட்டி ஒரு அடி போர் போட சுமார் 400 ரூபாய் வரை கூட அசால்டாக வசூலிக்கிறார்கள். இதன் பிறகு தான் பைப் செலவுகள், டீசல் செலவுகள் என எல்லாம் சேர்த்து ஒரு 500 அடி போர் போட சுமார் 2.5 லட்சம் ரூபாய் வரை செலவாகிறதாம்.
இடம் விஸ்தாரமான இடம் இருக்க வேண்டும்?
இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் இந்த போர்வெல் உரிமையாளர்கள் தங்களுக்குகென ஒரு விதிமுறையை வைத்திருக்கின்றனவாம். ஆமாங்க.. அதிக அளவு நெரிசலான இடங்களில் வண்டிகள் போகாதாம், வண்டிகள் திரும்புவதற்கு சாதகமான இடங்களாக இருக்க வேண்டும் என்றும் கண்டிசன் வைக்கின்றனவாம். ஆமாசாமி கிராக்கி இருக்கும்போது பயன்படுத்திக்கிட்ட தான் எங்களுக்கு பொழப்பு. சென்னை நகருக்குள் எங்காவது சென்று மாட்டிக்கொண்டால் எங்களது பொழப்பே போய்விடும் என்கிறார்கள் இந்த வண்டி உரிமையாளர்கள்.