டெல்லி : நாட்டில் கனரக வாகனம் ஓட்ட வாகன ஓட்டிகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள அடிப்படை கல்வித்தகுதியை நீக்க மத்திய போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவும், ஓட்டுனர்களிடையே நிலவும் பற்றாக்குறையை குறைக்கவும் மத்திய அரசு கனரக சரக்கு வாகனங்களை ஓட்டுவதற்கான, ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு அடிப்படை கல்வி தகுதி தேவையில்லை என்றும் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாம்.
குறிப்பாக பேருந்துகள், மற்றும் கனரக சரக்கு வாகனங்களை ஓட்டுவதற்கு எந்த வித குறைந்தபட்ச கல்வித்தகுதியும் தேவையில்லை என்றும், வாகனங்களை இயக்கும் திறன் இருந்தால் போதும் என்றும் கூறியுள்ளதாம்.
கல்வித் தகுதி நீக்க முடிவு!
தற்போது மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989இன், விதி எண் 8ன் கீழ் ஒரு ஓட்டுனர் கனரக வாகனங்களை ஓட்டுவதற்கு குறைந்தது எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம் என்று இருந்து வருகிறது. ஆனால் தற்போது இந்த முடிவை மத்திய அரசு மாற்றிக் கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும், கல்வித் தகுதியை நீக்க உள்ளதாகவும் அரசு வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது. அதோடு படிப்பின்மைக்கும் ஓட்டுனருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் விபத்துகளை ஏற்படுத்துவோர் கல்வியறிவு அற்றவர்கள் என்பதற்கான எந்த உறுதியான ஆதாரமும் இல்லை எனவும் மத்திய அரசு அதிகாரிகள் கூறியுள்ளனராம்.
பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களுக்கு உதவும்
சமுதாயத்தில் பொருளாதார ரீதியில் மிகவும் பின் தங்கிய நபர்களுக்கு இது மிகவும் உதவும் வகையில், போக்குவரத்து வாகனம் ஓட்டுவதற்கும் மற்றும் கனரக வாகனங்கள் ஓட்டுவதற்கும் குறைந்தபட்ச கல்வி தகுதியை நீக்க போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாம்.
முறையற்ற கல்வி இல்லாதவர்களும் உள்ளனர்.
குறிப்பாக நாட்டின் கிராமப்புறங்களில் அதிக எண்ணிக்கையிலான வேலையற்ற நபர்கள் உள்ளனர் என்றும், ஆனால் அவர்களில் பலர் முறையான கல்வி இல்லாதவர்களாக இருக்கலாம், எனினும் மற்றப்படி திறமையானவர்களாக உள்ளனர். குறிப்பாக மேவாட் பிராந்தியத்தை சேர்ந்த ஓட்டுநர்களுக்கான கல்வி நிலையைத் தள்ளுபடி செய்யுமாறு ஹரியானா அரசு கோரியது. ஏனெனில் அங்கு வாழும் மக்கள் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட குறைந்த வருமானம் ஈட்டும் பணிகளையே, வாழ்வாதாரத்திற்காக நம்பியுள்ளனர் என்றும் கூறியுள்ளதாம் ஹரியானா அரசு.
கல்விதான் இல்லை?
அதோடு இந்த பிராந்தியத்தில் பலருக்குத் தேவையான திறமை இருக்கிறது. ஆனால் தேவையான கல்வித் தகுதிதான் இல்லை என்றும் அம்மாநில அரசு அறிக்கையை சமர்பித்திருக்கிறதாம். இதனால் அவர்கள் ஓட்டுனர் உரிமம் பெறுவதும் மிக கடினம் என்றும் அந்த அரசு கூறியிருக்கிறதாம். அதோடு வாகனம் ஓட்டுவதும் திறமையான ஒரு திறனே. இதற்கு கல்வித் திறன் அவசியம் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளதாம். குறைந்தபட்ச கல்வி தகுதி நிலையே தகுதியுற்ற இளைஞர்களுக்கும் ஒரு தடையாகவே செயல்படுகிறது என்றும் கூறியுள்ளதாம் ஹரியானா அரசு.
பாதுகாப்பு குறித்த எந்த சமரசமும் கிடையாது?
இருப்பினும் குறைந்தபட்ச கல்வித் தகுதியை நீக்குகையில், சாலை பாதுகாப்பு எந்த வகையிலும் சமரசம் செய்யக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்காக ஓட்டுநர்களின் பயிற்சி மற்றும் திறன் சோதனைக்கு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் கடுமையாக வலியுறுத்தியுள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
திறன் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்?
இவ்வாறு ஓட்டுனர் உரிமத்திற்காக விண்ணபிக்கும் எவரும் கண்டிப்பாக கடுமையான திறன் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும், அதோடு 1988ல் குறிப்பிட்டுள்ளபடி ஒரு பள்ளி அல்லது ஸ்தாபனத்தால் வழங்கப்படும் பயிற்சியின் மூலமோ, ஓட்டுனர் பற்றிய விதிமுறைகளை கட்டாயம் படித்து இருக்க வேண்டும் என்றும், அதோடு ஓட்டுனர் பதிவுகளை பராமரித்தல் போன்ற அடிப்படை கடமைகளை செய்ய தேவையான அளவு திறன்கள் இருந்தால் போதும் என்றும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
லாரிகள் மற்றும் டிரெய்லர்களை ஆய்வு செய்தல்
லாரிகள் மற்றும் டிரெய்லர்களை ஆய்வு செய்தல், பயணத்திற்கு முந்தைய மற்றும் பயணத்திற்கு பிந்தைய பதிவுகளை சமர்பித்தல், காகித வேலைகளில் உள்ள முரண்பாடுகளை கவனித்தல், பாதுகாப்பு அம்சங்களைக் குறித்து புகார்களிக்க பயனுள்ள தகவல்கள் தெரிவிக்கும் அளவுக்கு பேசவும் தெரிந்திருக்க வேண்டும்.
ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் மேம்படும்
மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் நல்ல திறன் இருந்தும் ஓட்டுனர் உரிமம் பெற இயலாத நிலை நிலவி வந்தது. ஆனால் இந்த சட்டம் நடைமுறைக்கு வந்து விட்டால், பல்லாயிரம் பேர் பயன் பெறுவார்கள். அதோடு அவர்கள் வாழ்வாதாரமும் மேம்படும். நாட்டில் ஓட்டுனர்களுக்கான தட்டுப்பாடும் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது எல்லாவற்றையும் விட பலருக்கு இதனால் புதிதாக வேலைவாய்ப்பு கிட்டும் என்பதே நல்ல விஷயமாக கருதப்படுகிறது.