டெல்லி : இந்தியாவில் பயணிகள் போக்குவரத்தில் பேருந்துகள், விமானம், கப்பல் என முப்படைகளும் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டிருந்தாலும், இதுவரை ரயில்வே (Railway ) துறையை மட்டும் தனியாருக்கு விடாமல் இருந்து வந்தது இந்திய அரசு. இந்த நிலையில் தற்போது அதற்கும் முற்றுபுள்ளி வைத்துள்ளது மத்திய அரசு.
ஆமாப்பு.. இதுவரை இந்தியாவில் ரயில்வே போக்குவரத்து துறையில் மட்டும் தனியாருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. குறிப்பாக ரயில்வே அமைச்சகம் ரயில்வே பட்ஜெட்டை கூட, தனி பட்ஜெட் ஆக தயாரித்து அந்த போக்குவரத்து சேவையை மேற்கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்திய ரயில்வே துறையின் வாரிய தலைவர் வி.கே.யாதவ் ரயில்வே அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தனியாரைக் கொண்டு பயணிகள் ரயிலை இயக்க திட்டமிட்டிருப்பதாகவும், தொழிலாளர் யூனியன்களிடம் ஆலோசனை நடத்திய பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளாராம்.
பல கோடி பேர் விரும்பும் ரயில் போக்குவரத்து!
இந்தியாவில் பிரதான போக்குவரத்தாக திகழும் ரயிலில், ஒரு நாளைக்கு பல கோடி பேர் பயணம் செய்கின்றனர். அதோடு பெரும்பாலான சரக்கு போக்குவரத்தும் ரயில்கள் மூலமே நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்திய ரயில்வே துறைக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.2 லட்சம் கோடி வரை வருவாய் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
புதிய பல வழித்தடங்களை உருவாக்க நிதி தேவை!
இந்த நிலையில் இன்னும் ரயில்வே துறையை விரிவுபடுத்தவும், எதிர்காலத்தில் மேலும் பல பல புதிய வழித்தடங்கள் அமைத்து வருவாயை பெருக்கவும் முடிவு செய்துள்ளது மத்திய அரசு. அதோடு அதிவேக ரயில் சேவைகளையும் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. இது போன்ற திட்டங்களுக்கு கூடுதல் நிதி தேவைப்படுகிறதாம். ஆக ரயில்வே சேவை இவ்வாறு தனியாருக்கு மாற்றுவதன் மூலம் கணிசமான தொகை கிடைக்குமாம். ஆக இதை வைத்து இதுபோன்ற விரிவாக்க பணிகளுக்கும், புதிய வழித்தடங்களை அமைப்பதற்கும் ஆய்வு நடந்து வருகிறதாம்.
சுற்றுலா தலம் செல்லும் ரயில்களா?
குறிப்பாக பயணிகள் கூட்டம் அதிகம் இல்லாத அதாவது வருவாய் அதிகம் இல்லாத பயணிகள் ரயில் சேவைகளை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அது போல குறைந்த வருவாயை தரும் சுற்றுலாதலங்களுக்கு இயக்கப்படும் ரயில் சேவைகளையும் தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.
100 நாட்களுக்குள் விண்ணபிக்கலாம்
இவ்வாறு தனியாருக்கு குத்தகைக்கு விட ஏலம் எடுக்க விரும்புவோர், 100 நாட்களுக்குள் இது தொடர்பான ஏலத்தொகைக்கு விண்ணப்பம் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் அதிக ஏலத்தொகை கேட்கும் தனியாருக்கு, பயணிகள் கூட்டம் அதிகம் இல்லாத ரயில் சேவையை ஒப்படைக்க தீர்மானமும் செய்யப்பட்டுள்ளது.
புதிய பெயரை வைத்துக் கொள்ளலாம்.
முதல் கட்டமாக பயணிகள் கூட்டம் அதிகம் இல்லாத ஒரு பயணிகள் ரயிலையும், ஒரு சுற்றுலா ரயிலையும் தனியாருக்கு இயக்க அனுமதி வழங்கப்பட உள்ளது. இது எனத அளவுக்கு இயக்கப்படுகிறது என்பதை பார்த்து தான் அடுத்து ரயில் சேவையை இயக்க வாய்ப்பு வழங்கப்படும். அந்த தனியார் சேவைதாரர், அந்த ரயிலுக்கு புதிய பெயரை சூட்டிக் கொள்ளலாம். ரயில் என்ஜின் மற்றும் பெட்டிகள் வாடகை அடிப்படையில் தனியாருக்கு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
டிக்கெட் விற்பனை ஐ.ஆர்.சி.டி.சி பொறுப்பில் விடப்படும்!
அந்த ரயில்வே பெட்டிகள் ஐ.ஆர்.சி.டி.சி பொறுப்பில் விடப்படும் டிக்கெட் விற்பனையும் ஐ.ஆர்.சி.டி.சி மூலமாகவே நடைபெறும். இந்த திட்டத்தால் தனியார் ரயில்களை இயக்குவதோடு, ரயில்வே அமைச்சகத்துக்கும் அதிகப்படியான லாபமும் கிடைக்கும். இந்த நிலையில் முக்கிய நகரங்களை இணைக்கும் நீண்ட தூர எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஒன்று தனியாருக்கு விடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய ரயில்வே சர்வதேச அளவில் 4வது இடம்
சர்வதேச அளவில் 4-வது பெரிய ரயில்சேவையான இந்தியன் ரயில்வேயில் சுமார் 65,000 கிலோமீட்டர் தூரத்திற்கு இருப்பு பாதை உள்ளதாகவும், இதன் மூலம் தினசரி 22,000 ரயில்களை இயக்கி வருகிறது என்றும், இதில் தினசரி சுமார் 12,000 பயணிகள் ரயிலும், 7000 சரக்கு ரயில்களும் இயக்கப்படுகின்றனவாம். அதோடு தற்போது தொடந்து ரயில்வே துறை தனது இருப்பு பாதையை அதிகரித்துக் கொண்டே செல்வதோடு தனது சேவையையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.