ஜெனீவா: தேர்தல் அறிக்கையில் அளித்திருந்த வாக்குறுதியின்படி நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் சராசரி வருமானத்தை எப்படி இருமடங்காக உயர்த்துவீர்கள், அதற்கான நிதி ஆதாரங்கள் என்ன? என்று உலக வர்த்தக அமைப்பின் கூட்டத்தில் ஐரோப்பிய யூனியன் கேள்வி எழுப்பியுள்ளது.
ஏற்கனவே நிதிப்பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்து வருவதோடு, ஒவ்வொரு ஆண்டு பட்ஜெட்டிலும் பற்றாக்குறையாகவே இருந்து வரும் சூழ்நிலையில் விவசாயிகளின் வருமானத்தை எப்படி இரட்டிப்பாக உயர்த்த முடியும், இது எப்படி சாத்தியமாகும் என்று பல்வேறு கிடுக்கிப்பிடி கேள்விகளை கேட்டு துளைத்தெடுத்துள்ளது.
இந்தியாவில் ஆட்சியை பிடிக்க நினைக்கும் அனைத்து கட்சிகளுமே எளிதில் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அள்ளி வீசி மக்களை ஏமாற்றி, தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்துவிடும். பின்னர் வாக்குறுதிகளை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு வேறு வேலைகளை பார்க்க ஆரம்பித்துவிடும். தேர்தல் வாக்குறுதியைப் பற்றி கேட்டால், ஓஹோ அப்படியா அதெல்லாம் நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்று மக்களின் வாயை அடைத்து விடுவார்கள்.
வருமானம் இரட்டிப்பு
சமீபத்தில் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் ஆளும் கட்சியான பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்றால் விவசாயிகளின் சராசரி வருமானத்தை நிச்சயமாக இரண்டு மடங்காக உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது.
தேர்தல் வெற்றி
இந்த வாக்குறுதியின் பேரில் தான் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளில் பெரும்பாலானவர்கள் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கே தங்களின் ஓட்டுக்களை அளித்து அமோக வெற்றிபெற வைத்தனர். நரேந்தி மோடியே மீண்டும் பிரதமராக வந்துவிட்டார். பிரதமராக வந்து அமர்ந்த உடனே விவசாயிகளுக்கு ஏற்கனவே அளித்து வந்த 6000 ரூபாய் உதவித் தொகையை நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கும் வழங்கும் திட்டத்தில் கையெழுத்திட்டு செயல்படுத்த ஆரம்பித்துவிட்டார்.
2016-ல் அறிவிப்பு
கடந்த 2016ஆம் ஆண்டிலேயே இது பற்றிய அறிவிப்பை வெளியிட்டு வரும் 2022ஆம் ஆண்டிற்குள் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார். அவர் சொன்னது போலவே கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில், நாடு முழுவதும் உள்ள சுமார் 12 கோடி விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் ஆண்டுக்கு ரூ.6000 மானிய உதவித் தொகை வழங்கும் பிஎம்-கிஷான் திட்டத்தை கொண்டுவந்தார்.
பிரதமர் விவசாயத் திட்டம்
தற்போது லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியதை அடுத்து, பிஎம்-கிஷான் திட்டத்தை நாடு முழுமைக்கும் விரிவு படுத்த உத்தரவிட்டு கையெழுத்திட்டுள்ளார். இதன்மூலம் நாடு முழுவதும் உள்ள சுமார் 14.5 கோடி விவசாயிகள் பயன்பெறுவார்கள். இதற்காக மொத்தம் 75 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என்றும் பின்னர் நாடு முழுமைக்கும் விரிவுபடுத்தப்பட்டதால் கூடுதலாக 87 ஆயிரத்து 217 கோடி ரூபாய் செலவாகும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பிரதமர் பயிர் காப்பீட்டுத் திட்டம்
இதேபோல் பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டமான பிரதான் மந்திர் ஃபசல் பீமா யோஜனா (Pradhan Mantri Fasal Bima Yojana-PMFBY) திட்டத்தின் மூலமாக வேளாண் பயிர்களுக்கான காப்பீடு வழங்குவதற்கான திட்டத்தை கடந்த 2016ஆம் ஆண்டில் மோடி தொடங்கி வைத்தார். இத்திட்டத்திற்கு ஆகும் செலவானது சுமார் 17 ஆயிரத்து 500 கோடி ரூபாய் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
பட்ஜெட் பற்றாக்குறை
ஏற்கனவே ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் பற்றாக்குறை ஏற்படும் இக்கட்டான நிலையில். இவ்வகையான திட்டங்களுக்கான நிதி ஆதாரம் எங்கிருந்து கிடைக்கும் என்று அனைத்து எதிர்கட்சிகளும் கேள்வி எழுப்பி வருகின்றன. இதே கேள்வியை தற்போது உலக வர்த்தக அமைப்பில் அங்கம் வகிக்கும் ஐரோப்பி யுனியனும் பிரதரை பார்த்து கேள்வி எழுப்பியுள்ளது.
உலக வர்த்தக மாநாட்டில்
சமீபத்தில் ஜெனீவாவில் உலக வர்த்தக அமைப்பின் (World Trade Organization-WTO) உறுப்பு நாடுகளின் கூட்டம் நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் அமெரிக்காவில் விவசாயிகளுக்கு வழங்கும் நலத்திட்டங்களைப் பற்றி விரிவாக அலசப்பட்டது. அதோடு அதற்காக செலவழிக்கப்பட்ட பணத்திற்கான ஆதாரங்கள், இவற்றில் ஏதேனும் முறைகேடுகள் நடந்துள்ளதா என்றும் தீவிரமாக ஆராயப்பட்டது.
2022-க்குள்
அதோடு, இந்தியாவில் பிஎம்-கிஷான் திட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு வழங்கப்படும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவிக்கான தொகை எங்கிருந்து பெறப்படுகிறது, இது எப்படி சாத்தியமாகும், தொடர்ந்து ஆண்டு தோறும் இந்த நிதி உதவியை வழங்க முடியுமா என்றும், வரும் 2022ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின வருமானத்தை எப்படி இரட்டிப்பாக ஆக்க முடியும், அதற்கான சாத்தியக்கூறுகள் என்ன என்று கிடுக்கிப்பிடி கேள்விகளை ஐரோப்பிய யூனியன் கேள்வி எழுப்பியுள்ளது.