ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் சுமார் 45 லட்சம் ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாய நிலங்களுக்கு பாசன வசதி அளிக்கும் 80 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட உலகின் மிகப்பெரிய காலேஸ்வரம் நீர்ப்பாசன திட்டத்தை இன்று முதல்வர் சந்திர சேகரராவ் திறந்து வைக்கிறார்.
கிட்டத்தட்ட 1832 கி.மீ நீர்வழிப்பாதையை உருவாக்கி 203 கி.மீ சிறு, குறு மாற்றுப்பாதைகள் மற்றும் வடிகால்களால் உருவாக்கப்பட்ட இத்திட்டமானது தெலங்கானா மாநிலத்தின் 75 சதவிகித குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்யும் என்றும் நம்பப்படுகிறது.
ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் தலைவரான சந்திர சேகர ராவின் நெடு நாள் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பிறகு கடந்த 2013ஆம் ஆண்டில் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ஆந்திரப் பிரதேசத்தை பிரித்து தெலங்கான மாநிலம் உருவாக ஒப்புதல் தரப்பட்டது. இதனையடுத்து கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் 2ஆம் தேதியன்று ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலுங்கு பேசும் மக்களைக் கொண்ட பெரும்பகுதிகள் தனியே பிரிக்கப்பட்டு தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டது.
சுமார் 114840 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட தெலங்கான மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 3.52 கோடியாகும். 31 மாவட்டங்களை உள்ளடக்கிய இம்மாநிலத்தின் முக்கிய வற்றாத ஜீவ நதிகளான கிருஷ்ணா மற்றும் கோதாவரி ஆகிய இரண்டு முக்கிய ஆறுகள் இந்தியாவின் கங்கா, சிந்து ஆகிய நதிகளுக்கு அடுத்து மிகப்பெரிய ஆறுகளாகும்.
தெலங்கானா மாநிலத்தின் முக்கிய நதியான சுமார் 1450 கி.மீ நீளமான கோதாவரி நதியின் குறுக்கே நிசாமாபாத் மாவட்டத்தில் ஸ்ரீராம்சாகர் என்ற அணை கட்டப்பட்டிருந்தாலும், அதிக அளவில் மழை பொழிவு ஏற்படும் காலங்களில் கூடுதல் நீரானது வெள்ளப்பெருக்கெடுத்து வீணாக கடலில் கலப்பது காலம்காலமா நடந்து வருகிறது.
வெள்ள நீர் வீணாக கடலில் கலப்பதை தடுத்து தெலங்கான மாநில விவசாயத்திற்கும் குடிநீர் தேவைக்கும் பயன்படும் வகையில் கடந்த 2016ஆம் ஆண்டில் ஜெய்சங்கர் பூபாலபள்ளி மாவட்டத்தில் சுமார் 80 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய நீர்ப்பாசன திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது இந்த திட்டம் முடிவடைந்துவிட்டது.
இதன் மூலம் தெலங்கானா மாநிலத்தின் 70 சதவிகித குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதோடு, சுமார் 45 லட்சம் ஏக்கர் பரப்பளவு கொண்ட ஆயக்கட்டு வசதி உள்ள விவசாய நிலங்களுக்கும் சுமார் 235 டிஎம்சி நீரைப் பயன்படுத்தி பாசன வசதி பெறும் வகையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், 1832 கிலே மீட்டர் நீர்வழிப்பாதையை உருவாக்கி, 203 கிலோ மீட்டர் சிறு, குறு மாற்றுப்பாதை வடிகால்கள் மூலமாக காலேஸ்வர் பாசனத் திட்டத்திற்காக பாதை நிறுவப்பட்டிருக்கிறது.
தெலங்கான மாநிலம் உதயமான பின்னர் உருவாக்கப்படும் மிகப்பெரிய திட்டம் என்பதால் இதற்காக மிகப்பெரிய தொழில்நுட்பங்களும் பொறியியல் அம்சங்களும் பயன்படுத்தப்பட்டன. மேலும் உலகின் மிகப்பெரிய மற்றும் நீளமான சுரங்க வழி நீரேற்று நிலையமும் இத்திட்டத்திற்காக அமைக்கப்பட்டது. அதோடு தற்போது பயன்பாட்டிலுள்ள ஏலாம்பள்ளி தடுப்பணைக்கும் புதிதாக கட்டப்படவிருக்கும் மல்லண்ணா சாகர் நீர்த்தேக்கத்திற்கும் இடையில் சுமார் 81 கி.மீ நீளமுள்ள சுரங்கப்பாதை அமைக்கும் பணி ஒரே சமயத்தில் நிறைவு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகின் மிக நீளமான மற்றும் மிகப்பெரிய நீர்ப்பாசன திட்டம் என்று சாதனை படைத்துள்ள இத்திட்டத்தில் 19 மோட்டார் அறைகளும், 88 மின் மோட்டார்களும் 20 தானியங்கிகளும் பயன்படுத்தப்படுகின்றன. சுமார் 1832 கி. மீ நீளமுள்ள பாசன நீர்வழிப்பாதையை உருவாக்கி 203 கிலோ மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதை வடிகால்கள் மூலமாக இதன் பாசனப் பாதை நிறுவப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 2 டிஎம்சி நீரை வெளியேற்றுவதற்கு சுமார் 4992 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.