சென்னை: சென்னை வாசியான சங்கர் 2014-ம் ஆண்டு சென்னை டீ நகரில் உள்ள ஒரு Dominos அவுட் லெட்டில் பீட்ஸா ஆர்டர் செய்திருக்கிறார். வந்த பீட்ஸா மீது சீசனிங் எல்லாம் செய்து, கெட்ச் அப் ஊற்றி திருப்தியாக சாப்பிடத் தொடங்கி இருக்கிறார். திடீரென பல்லில் பயங்கர வலி என்னவென்று பார்த்தால் பீட்ஸாவில் ஒரு இரும்பு நட்டு இருந்திருக்கிறது.
பீட்ஸாவை சாப்பிடுவது போலவே இரும்பு நட்டையும் வேகமாக கடித்ததால் பல் உடைந்து கையில் வந்து விட்டது. ரத்தம் சொட்டச் சொட்ட பீட்ஸாவை பார்சல் செய்து வீட்டுக்கு எடுத்துச் சென்று விட்டார். அப்படியே மருத்துவரைப் பார்த்து பல் போன இடத்தில் தேவையான சிகிச்சைகளை எல்லாம் செய்து கொண்டார். அதன் பின் இந்தியாவில் Dominos பீட்ஸாவின் ஃபிரான்சைஸியாக இருக்கும் ஜுபிலண்ட் ஃபுட் வொர்க்ஸ் நிறுவனத்திடம் நடந்ததைச் சொல்லி நஷ்ட ஈடு கேட்டிருக்கிறார்.
அதன்பின் டீ நகர் பகுதியில் உள்ள Dominos பீட்ஸா கடையிலும் நடந்த விஷயத்தைச் சொல்லி நஷ்ட ஈடு கேட்டிருக்கிறார். வழக்கம் போல கார்ப்பரெட் தனமாக இதற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கழட்டி விட்டிருக்கிறார்கள். அதன் பின் தகுந்த ஆதாரங்களோடு Dominos நிறுவனம் மற்றும் ஃபிரான்சைஸிகளுக்கு சட்ட ரீதியாக நோட்டீஸ் விட்டிருக்கிறார்.
அப்படியே சென்னை மாவட்ட நுகர்வோர் குறை தீர் ஆணையத்திலும் வழக்கு தொடுத்து 5 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கேட்டிருக்கிறார். Dominos பீட்ஸாவின் இந்திய ஃபிரான்சைஸியான ஜுபிலண்ட் ஃபுட் வொர்க்ஸ் நிறுவனத்தினர் "சங்கர் வேண்டும் என்றே Dominos பிராண்டின் பெயரைக் கெடுப்பதற்காகவே புகார் கொடுத்திருக்கிறார்" என வாதாடினார்கள்.
இரு தரப்பு வாதங்களையும் சுமார் 5 வருடம் கேட்ட பின் சங்கர் விலை கொடுத்து வாங்கிய பீட்ஸாவுக்கான பணம் 622 ரூபாய் உடன் 25,000 ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது நுகர்வோர் குறை தீர் ஆணையம். இத்தோடு சங்கர் நிற்காமல், Dominos பீட்ஸா மீது காவல் துறையிலும் புகார் கொடுத்திருக்கிறார். இன்னும் ஒரு படி மேலே போய் தமிழக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடமும் விவரத்தைச் சொல்லி புகார் கொடுத்திருக்கிறாராம். இதுவரை நடவடிக்கைகள் தான் எதுவும் எடுக்கப்படாமல் அப்படியே இருக்கிறார்களாம். சங்கருக்கு இன்னும் நஷ்ட ஈடு கிடைத்ததா இல்லையா என்று கூட தெரியவில்லை.