சென்னை: கடும் தண்ணீர் பற்றாக்குறை நிலவிவரும் இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் டிசிஎஸ், விப்ரோ மற்றும் காக்னிசன்ட் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் அனைவரையும் தண்ணீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்துமாறு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களுக்கும் அத்தியாவசிய நீர் ஆதாரமாக விளங்கும் முக்கியமான நான்கு ஏரிகளும் வறண்டுவிட்டதால், சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்குவது பெரும் சவலாக இருப்பதால், மழைபெய்து ஏரிகளில் நீர் வரத்து அதிகரிக்கும் வரையிலும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன.
ஏரிகளின் மாவட்டம் என்றழைக்கப்படும் செங்கல்பட்டு உள்பட சென்னையைச் சுற்றியுள்ள முக்கிய ஏரிகள் அனைத்துக்குமே நீர் வரத்து என்பது சுத்தமாக நின்றுவிட்டது. ஏரிகளுக்கு நீரை கொண்டு வந்து சேர்க்கும் அனைத்து வழித்தடங்களை எல்லாம் பெருநகரமயமாக்கல் என்ற பெயரில் அழித்தொழித்துவிட்டு அதற்கு மேல் போட்டி போட்டு அனைத்து ரியல் எஸ்டேட் கம்பெனிகளும் கான்கிரீட் காடுகளை அமைத்துவிட்டன. அப்படி அமைக்கப்பட்ட வீடுகள் அனைத்துமே இன்றைக்கு விற்பதற்கு வழியில்லாமல் முடங்கிக் கிடக்கின்றன.
ஏரிகளுக்கு வரவேண்டிய நீர் ஆதாரங்களெல்லாம் மறிக்கப்பட்டு கட்டிடங்கள் எழுப்பட்டதால், சென்னையைச் சுற்றியுள்ள அனைத்து ஏரிகளும் நாளடைவில் வற்றிப்போய், சுருங்கி, வறண்டு போய்விட்டன. அதோடு பல ஆண்டுகளாக ஏரிகளை குடிமராமத்து செய்து தூர்வாரி ஆழப்படுத்தாமல் அன்றைய, இன்றைய ஆட்சியாளர்கள் மிகவும் அலட்சியமாக இருந்துவிட்டதால் ஏரிகளும் நாளடைவில் மெல்ல மெல்ல ஏரிகளின் ஆழமும் குறைய ஆரம்பித்து தற்போது நீர் இல்லாமல் போய்விட்டது.
தற்போது சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்கள் அனைத்தும் தண்ணீர் இல்லாமல் தவித்து வருகின்றன. 1000 அடி ஆழம் வரையிலும் போர்வெல் போட்டாலும் தண்ணீர் இல்லை என்று வெறும் மெசேஜ் மட்டுமே வருகிறது. அத்தியாவசியத் தேவைகளை முடிப்பதற்கும், சமைப்பதற்கும் கூட தண்ணீர் இல்லாமல் தவித்து வருகின்றன. சிறிய அளவிலான ரெஸ்டாரெண்டுகள் முதல் பெரிய அளவிலான ஹோட்டல்கள் வரையிலும் தண்ணீர் பற்றாக்குறையால் மதியச் சாப்பாட்டைக்கூட நிறுத்திவிட்டன. இன்னும் சில ஹோட்டல்கள் தண்ணீர் பிரச்சனை தீரும் வரையிலும் தற்காலிகமாக மூடப்பட்டுவிட்டன.
சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள தொழில் நிறுவனங்களும் கூட தண்ணீர் பற்றாக்குறையால் தவித்து வருகின்றன. சில நிறுவனங்கள் சென்னையில் தண்ணீர் பிரச்சனை தீரும் வரையிலும் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை பார்க்குமாறு அறிவுறுத்தியுள்ளன. ஒருவேளை அலுவலகத்திற்கு வந்து வேலை பார்க்க விருப்பப்பட்டால் அவர்களின் சம்பளத்தில் இருந்து தண்ணீருக்காக குறிப்பிட்ட தொகையை பிடித்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளன.
சமீபத்தில் நிதி ஆயோக் அமைப்பும் சென்னை, பெங்களூரு உள்பட 21 நகரங்களில் வரும் 2020ஆம் ஆண்டுக்குள் நீர் இன்றி வறண்டு போய்விடும் என்று எச்சரித்துள்ளது. தற்போது தென்மேற்கு பருவமழையும் போக்கு காட்டி வருவதால் ஒருவேளை நிதி ஆயோக் சொன்னது போல் ஆகிவிடுமோ என்று இப்போதே சென்னை மக்களுக்கு பயம் தொற்றிக்கொண்டுள்ளது.
சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்கள் தங்களின் நீர் தேவைக்கு வடகிழக்கு பருவமழையையே பெரிதும் நம்பியுள்ளது. சென்னையை மழைநீர் முத்தமிட்டு கிட்டத்தட்ட 190 நாட்கள் ஆகிவிட்டன. கடந்த 2018ஆம் ஆண்டு சராசரியாக பெய்யவேண்டிய மழை அளைவைக் காட்டிலும் 80 சதவிகிதம் குறைவாகவே பெய்துள்ளது. இதுவும் கூட தற்போது ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்சனைக்கு முக்கிய காரணமாகும்.
இந்நிலையில் இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்பத்துறை நிறுவனங்களான டிசிஎஸ், விப்ரோ, காக்னிசென்ட் ஆகியவை உள்ளிட்ட சில நிறுவனங்கள் தங்கள் சென்னை நிறுவன கிளைகளில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரையும் தண்ணீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்துமாறு சுற்றறிக்கை அனுப்பி எச்சரித்துள்ளது.
டிசிஎஸ், விப்ரோ, காக்னிசென்ட் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் சென்னை கிளைகளில் மட்டுமே சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்கிறார்கள். அதோடு இந்நிறுவனங்கள் அனைத்துமே தங்களின் பராமரிப்பு பணிகள் மற்றும் புல்வெளிகளுக்கு மறுசுழற்சி செய்யப்பட்ட தண்ணீரையே பயன்படுத்தி நிலைமையை சமாளித்து வருகின்றன.
டிசிஎஸ், விப்ரோ, காக்னிசென்ட் உள்ளிட்ட சென்னை கிளைகளில் உள்ள உணவகத்திலும் கழிப்பறைகளிலும் தண்ணீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளன.