டெல்லி: நடப்பு 2019-20ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பு வேலைகள் முழுமையடைந்துள்ள வேளையில் நிதி ஆயோக் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பொருளாதார நிபுணர்களுடன் கலந்தாலோசித்துள்ளார்.
இக்கூட்டத்தில் பணவீக்கம், தற்போதைய பொருளாதார மந்தநிலை, வேலைவாயப்பு பிரச்சனை, நீல் மேலாண்மை, ஏற்றுமதி, கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றைப் பற்றி விவாதங்கள் நடைபெற்றதாக பிரதமல் அலுவலக செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.
இரண்டாவது முறையாக லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கடந்த மாத இறுதியில் பதவியேற்றுக்கொண்டது. மோடியே மீண்டும் பிரதமராக உட்கார்ந்துவிட்டார். மோடியின் இரண்டாவது இன்னிங்ஸில் நிதி அமைச்சர் பதவியை அருண் ஜெட்லி தனக்கு வேண்டாம் என்று ஒதுங்கிக் கொண்டதால், அப்பதவிக்கு பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமனுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நாட்டின் முதல் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிதியமைச்சர் என்ற பெருமையுடன், பதவியில் அமர்ந்த உடனேயே நடப்பு 2019-20ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட் தாக்கலுக்கான வேலையை முடுக்கிவிட்டார். அதற்கு முன்னோட்டமாக அனைத்து தரப்பினரிடம் இருந்தும் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளையும் பெற்றுக்கொண்டு தற்போது பட்ஜெட் தயாரிக்கும் பணிகள் தொடங்கிவிட்டன. அதற்கான அத்தாட்சியாக நிர்மலா சீதாராமன் தனது கையாலேயே அல்வா தயாரித்து நிதியமைச்சக ஊழியர்கள் மற்றும் பட்ஜெட் தயாரிக்கும் பணியில் இருக்கும் அனைவருக்கும் வழங்கினார்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று பிரதமர் மோடி, நிதி ஆயோக் ஏற்பாடு செய்திருந்த பட்ஜெட் கலந்தாலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார். இதில் நாட்டிலுள்ள பொருளாதார நிபுணர்களும் கலந்து கொண்டு 2019-20ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தொடர்பாக மோடியுடன் ஆலோசனை செய்துள்ளனர். ஏற்கனவே நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் சில தினங்களுக்கு முன்பு பொருளாதார நிபுணர்களுடன் பட்ஜெட் தொடர்பாக ஆலோசனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மோடி கலந்துகொண்ட இக்கூட்டத்தில் நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் ராஜீவ் குமார், வர்த்தகத்துறை அமைச்சராக பியூஷ் கோயல், புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை இணை அமைச்சரான (தனிப் பொறுப்பு) ராவ் இந்தர்ஜீத் சிங் மற்றும் நிதி ஆயோக் அமைப்பின் மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், ஐந்து கட்டங்களாக கலந்துரையாடல் நிகழ்த்தப்பட்டன. இதில் தற்போது மந்தகதியில் உள்ள நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான நாடு தழுவிய பொருளாதாரக் கொள்கை, கல்வி மற்றும் சுகாதாரம், வேலைவாய்ப்பு, விவசாயம் மற்றம் நீர் மேலாண்மை, ஏற்றுமதி ஆகிய முக்கிய பிரிவுகளில் விவாதங்கள் நடைபெற்றதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.
கூட்டத்தின் முடிவில் கலந்துகொண்ட அனைத்து பொருளாதார நிபுணர்களுக்கும் பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். அதோடு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பொருளாதார நிபுணர்களின் மேலான ஆலோசனைகளையும், கருத்துக்களையும் தொடர்ந்து வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
வரும் ஜூலை 5ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடப்பு 2019-20ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இந்நிலையில் மோடி பட்ஜெட் தொடர்பாக பொருளாதார நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.