திருப்பூர்: தமிழக அரசு போக்குவரத்துக் கழகம், திருப்பூர் பணிமனை சரகம் , பயணிகள் கொடுக்கும் 10 ரூபாய் நாணயங்களைத் தவிர்க்கச் சொல்லி நடத்துநர்களுக்கு சில தினங்களுக்கு முன் ஒரு அதிரடி சுற்றறிக்கையை அனுப்பியது.
அதையும் மீறி 10 ரூபாய் காசுகளை வாங்கினால் அவைகளை மீண்டும் மக்களுக்கே சில்லறையாகக் கொடுத்து விடுமாறும் அந்த சுற்றறிக்கையில் அறிவுறுத்தப் பட்டிருந்தது.
ஒருவேளை பயணிகளிடம் இருந்து வாங்கிய 10 ரூபாய் காசை பயணிகளுக்கு கொடுத்து மாற்ற முடியவில்லை என்றால், இரவு கணக்கு சமர்பிக்கும் போது 10 ரூபாய் காசுகளுக்கு பதிலாக நடத்துநர்கள் கூடுமான வரை 10 ரூபாய் காசுகளைத் தராமல், தங்கள் கை காசைப் போட்டாவது கணக்கு சமர்பிக்குமாறும் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.
ஆர்பிஐ
மத்திய ரிசர்வ் வங்கி, 2011-ம் ஆண்டு புதிய 10 ரூபாய் நாணயங்களை வெளியிட்டது. இந்த புதிய 10 ரூபாய் காசுகள் வெளியான நாளில் இருந்து இன்று வரை அவ்வப்போது ‘ஐயா உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா..? இந்த 10 ரூபாய் நாணயங்கள் செல்லாதாம்' என அசல் அக்மார்க் புரளிகள் அனைத்து சமூக வலைதளங்களில் டிரெண்டாகும். அன்றாட கூலி வேலை பார்க்கும் மக்கள் அவதிப்படுவார்கள்.
கூலித் தொழிலாளிகள்
இதில் கொடுமை என்னவென்றால், அரசு அமைப்புகள், அரசு நிறுவனங்கள், அரசு பேருந்துகள், ரயில் நிலையங்களில் கூட இந்த 10 ரூபாயை பல நேரங்களில் வாங்கிக் கொள்ளமாட்டார்கள். நம் மக்களும் மீண்டும் 100 ரூபாய் நோட்டைக் கொடுத்து கெஞ்சிக் கூத்தாடி சில்லறை வாங்க வேண்டி இருக்கும். மோடியின் புது இந்தியா பிறப்பின் போது (பணமதிப்பிழப்பு 08 நவம்பர் 2016) 500, 1000 ரூபாய் நோட்டுகள் பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட சமயத்தில், ‘இனி...10 ரூபாய் நாணயங்களும் செல்லவே செல்லாது பாத்துக்குங்க' என வழக்கம் போல சமூகப் போராளிகள் அள்ளி விட்டு வேடிக்கை பார்த்தார்கள்.
ஆர்பிஐ மிரட்டல்
சாதாரண மக்கள் தொடங்கி வங்கிகள் வரை பலரும் 10 ரூபாய் காசை வாங்க மறுத்தார்கள். இந்த பிரச்னையை பல நாட்கள் கழித்து ஆற அமர யோசித்து "புழக்கத்தில் உள்ள அனைத்து 10 ரூபாய் நாணயங்களும் செல்லும், ஆர்பிஐ வெளியிட்டிருக்கும் நாணயங்களை வாங்க மறுப்பது குற்றம்" என அன்று உர்ஜித் படேல் தலைமையில் இயங்கி வந்த ரிசர்வ் வங்கி திட்டவட்டமாக அறிவித்தது.
நீதிமன்ற கேள்வி
ஆர்பிஐ ஒரு பக்கம் தன் 10 ரூபாய் காசுக்கு முட்டு கொடுக்க "10 ரூபாய் காசுகளை வாங்க மறுப்பவர்கள் மீது ஏன் வழக்கு பதிவு செய்யக் கூடாது" என உத்தரப்பிரதேச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. ஆர்பிஐ சுற்றறிக்கை விட்ட பின்பும், இந்தியாவில் ஒரு நீதிமன்றம் வழக்கு தொடுக்கவா எனக் கேட்ட பின்பும் அரசுப் போக்குவரத்துக் கழகம், திருப்பூர் பணிமனை 10 ரூபாய் நாணயம் வாங்காதே, வாங்கினாலும் என்னிடம் வந்து கொடுக்காதே எனச் சொல்லி இருக்கிறார்கள். இந்த சுற்றறிக்கை திருப்பூர் பணிமனை அறிவிப்புப் பலகையில் ஒட்டப்பட்டிருந்ததைப் பார்த்த, ஒருவர் புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளி விட கதி கலங்கி விட்டது அரசுப் போக்குவரத்து கழகம்.
கொந்தளிப்பு
ஆர்பிஐயை விட, அரசுப் போக்குவரத்துக் கழகத்தை விட திருப்பூர் பணிமனை பெரிய அமைப்பா என்கிற ரேஞ்சில் துளைத்து எடுத்துவிட்டார்கள் நெட்டிசன்கள். ஆர்பிஐ சுற்றறிக்கையில் தெளிவு படுத்திய பின்பும், ஒரு இந்திய நீதிமன்றம் 10 ரூபாய் காசுகளை (நாணயங்களை) வாங்காவிட்டால் வழக்கு தொடுக்கலாமா எனக் கேட்ட பின்பும் எப்படி திருப்பூர் பணிமனை இப்படிச் சொல்ல முடியும் என விடாமல் வறுத்துவிட்டார்கள் நெட்டிசன்கள்.
சுற்றறிக்கை வாபஸ்
இத்தனை எதிர்ப்பு மற்றும் களேபரங்களுக்குப் பிறகு, 10 ரூபாய் சுற்றறிக்கையை அரசுப் போக்குவரத்துக் கழகம், திருப்பூர் பணிமனை நிர்வாகம் திரும்பப் பெற்றுக்கொண்டது. சில்லறைக் காசுகளை எண்ணுவதில் இருக்கும் சிரமத்தால் தான் இப்படி ஒரு சுற்றறிக்கையைக் கொடுத்தோமே ஒழிய வேறு ஒன்றும் இல்லை என சப்பைகட்டு கட்டி இருக்கிறது திருப்பூர் பணிமனை நிர்வாகம்.
ஏங்க இருக்குற பிரச்னைல நீங்க வேற ஏன் புது குண்டு தூக்கிப் போட்றீங்கய்யா..?