RBI சுதந்திரத்திலோ, ரிசர்வ் பணத்திலோ எவரும் தலையிட கூடாது! பாஜகவை தில்லாக எதிர்த்த Viral Acharya..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் பொருளாதாரத்தை தாங்கிப் பிடிக்கும் தூண் அமைப்புகளில் ஒன்றான ஆர்பிஐ-க்கு இது சனிப் பெயர்ச்சி போல. மற்றொரு பெரிய தலை ராஜினாமா செய்து மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்திருக்கிறது ஆர்பிஐ.

கடந்த டிசம்பர் 2018-ல் உர்ஜித் படேல் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து தற்போது டெபுடி கவர்னர் (துணை ஆளுநர்) பதவியில் இருந்து விரல் ஆச்சார்யா (viral Acharya) ராஜினாமா செய்திருக்கிறார்.

இவரின் துணை ஆளுநர் பதவி காலம் முடிய இன்னும் சுமார் ஆறு மாதங்கள் உள்ளனவாம். உர்ஜித் படேலைப் போலவே தன் பதவிக் காலம் முடியும் முன்பே தன் ராஜினாமா கடிதத்தை அரசுக்கு அனுப்பி பாஜகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார்.

உர்ஜித் போலவே

உர்ஜித் போலவே

உர்ஜித் படேல் எப்படி தன் ராஜினாமா கடிதத்தில், சொந்த காரணங்களால் பதவியை ராஜினாமா செய்கிறேன் எனச் சொல்லி இருந்தாரோ, அதே போல, இந்த முறை விரல் ஆச்சார்யாவும் சொல்லி இருக்கிறார். விரால் ஆச்சார்யாவின் ராஜினாமாவை ஆர்பிஐ உறுதி செய்திருக்கிறது. விரல் ஆச்சார்யாவுக்கு வரும் 2020 பிப்ரவரி மாதம் நியூயார்க்கில் உள்ள ஒரு பல்கலைக்கழக்கத்தில், பேராசிரியராக இணைய அழைப்பு வந்திருக்கிறதாம். அதற்காக ஆகஸ்ட் மாதமே கிளம்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறதாம்.

உர்ஜித் படேல் விவகாரம்

உர்ஜித் படேல் விவகாரம்


ஆர்பிஐ ஆளுநராக இருந்த போது உர்ஜித் படேலுக்கும், மத்திய அரசுக்கும் இடையிலான மோதல் பல நாட்களில் இந்தியாவின் தலைப்புச் செய்திகளானது.
பணமதிப்பிழப்பை முழுமையாக அதரிக்காதது,
Promp Corrective Action திட்டத்தை கைவிடச் சொன்னது,
வாராக் கடன்களை தீவிரமாக வசூலிக்க வேண்டாம் எனச் சொன்னது,
வட்டி விகிதங்களைக் குறைக்கச் சொன்னது,
ஆர்பிஐ-ன் ரிசர்வ் தொகையைக் கேட்டு நச்சரித்தது...
இதற்கு எல்லாம் முத்தாய்ப்பாக ஆர்பிஐ வரலாற்றில் பயன்படுத்தாத பிரிவு 7-ஐப் பயன்படுத்தி ஆர்பிஐயை மத்திய அரசுக்கு பணிய வைப்பேன் என மிரட்டியது எல்லாம் பாஜக செய்த கொடுமைகளில் மிகச் சிறப்பான கொடுமைகள்.

வட்டி சாட்சி

வட்டி சாட்சி

மேலே சொன்ன எல்லாம் அழுத்தங்களை விடவும், ஆர்பிஐ சட்டம் பிரிவு 7-ன் படி, ஆர்பிஐ இயக்குநர் குழுவில் மத்திய அரசுக்கு சாதகமாக இருக்கும் 12 இயக்குநர்களை வைத்து உர்ஜித் படேலையே ஆர்பிஐ அமைப்பில் பலம் இல்லாத ஆளாக மாற்ற முயன்ற போது, கொஞ்சம் வலித்திருக்கத் தான் செய்யும். அதான் கடந்த டிசம்பர் 2018-ல் தன் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் அப்போதும் "என் சொந்த காரணங்களுக்காக ராஜினாமா செய்கிறேன்" என சுருக்கமாக முடித்துக் கொண்டார். உர்ஜித் படேல் போல இந்திய அரசில் பணியாற்றாத மெத்தப் படித்த பொருளாதார மேதாவிகளை எல்லாம் விட்டு விட்டு, ஏற்கனவே மத்திய அரசுப் பணிகளில் இருந்த சக்திகாந்த தாஸை புதிய ஆர்.பி.ஐ ஆளுநராக நியமித்தது மத்திய அரசு. விளைவு அரசு சொல்வதை தட்டாமல் கேட்கும் அமைப்பாக மாறிவிட்டது ஆர்பிஐ. இதற்கு கடந்த 3 நிதிக் கொள்கை கூட்டங்களிலும் ரெப்போ வட்டி விகிதத்தை தொடர்ந்து குறைத்ததே சாட்சி.

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி

ரகுராம் ராஜனைத் தொடர்ந்து உர்ஜித் படேல் என அடுத்தடுத்து வெளியில் இருந்து ஆளுநர்கள் வருவதால் தான் இந்த பிரச்னை என சக்தி காந்த தாஸை ஆர்பிஐக்கு ஆளுநர் ஆக்கிய பின் பிரச்னைகள் இல்லை என நினைத்தது ஆளும் வர்க்கம். ஆனால் ஆளும் பாஜகவின் அதிகார பசியை வெளியுலகுக்குக் கொண்டு வரும் விதத்தில் திரி கொளுத்திப் போட்டிருக்கிறது விரல் ஆச்சார்யாவின் ராஜினாமா.

ராஜன் டூ விரல்

ராஜன் டூ விரல்

காங்கிரஸ் ஆட்சியின் கடைசி காலத்தில் ரகுராம் ராஜன் பதவி ஏற்றதில் இருந்து ஆர்பிஐ மற்றும் மத்திய அரசுக்கான இழுவைச் சண்டைகள் மக்கள் கவனத்துக்கு வரத் தொடங்கியது. ரகுராம் ராஜன் கடைசி வரை பாஜகவின் எந்த ஒரு வேண்டுதலுக்கும் சரி, கட்டளைகளுக்கும் சரி அடி பணியவில்லை. ஒரு ஆர்பிஐ ஆளுநராக தன்னால் முடிந்த வரை சிறப்பான செயல்பாடுகளைச் செய்து வலுவான அடித்தளம் அமைத்துவிட்டுச் சென்றார். அதே போலத் தான் உர்ஜித்தும். ரகுராம் ராஜனை பாஜகவால் நெருக்கவே முடியவில்லை என்றால், உர்ஜித்தை படாத பாடு படுத்தினார்கள். ஆனாலும் கூடுமான வரை ஆர்பிஐ-ன் அதிகாரத்தை விட்டுக் கொடுக்காமல் ஆர்பிஐயின் பணியை சிறப்பாக மேற்கொண்டார். ரகுராம் விட்டுச் சென்ற இடத்தை அழகாகப் பூர்த்தி செய்து வாராக் கடனைக் குறைத்தார்.

இன்று வரை

இன்று வரை

ராஜினாமா செய்வதற்கு முன்பு கூட ரிசர்வ் வங்கியின் அதிகாரத்திலும், முடிவெடுக்கும் விஷயங்களிலும் ரிசர்வ் வங்கிக்கு முழு சுதந்திரம் கொடுக்கப் பட வேண்டும். எக்காரணத்தை முன்னிட்டும் ரிசர்வ் வங்கியின் ரிசர்வ் பணத்தை வெளியே கொடுக்கக் கூடாது. அது இந்தியப் பொருளாதாரத்தின் நிதி நிலையை நிலையாக வைத்துக் கொள்ள மட்டுமே பயன்படுத்த வேண்டும் என ஆணித்தரமாகச் சொன்னவர் நம் விரல் ஆச்சார்யா.

பெரிய அழுத்தம்

பெரிய அழுத்தம்

உர்ஜித் பதவிக்கு வந்த அடுத்த சில மாதங்களில் தான் விரல் ஆச்சார்யா துணை ஆளுநராக நியமிக்கப்படுகிறார். அதன் பின் உர்ஜித் மற்றும் விரல் ஆச்சார்யாவின் பொருளாதாரக் கொள்கைகள், மத்திய அரசின் தவறான போக்கு என பல விஷயங்களில் ஒத்துப் போக இருவரும் சேர்ந்தே மத்திய அரசின் தவறான அபோக்குகளை கண்டிக்கத் தொடங்கினார்களாம். அரசு ஆர்பிஐ-யை தன் பிடிக்குள் கொண்டு வர, மத்திய அரசு இருவரையும் பெரிய அழுத்தத்துக்கு உள்ளாக்கினார்களாம்.

நானும் போறேன்

நானும் போறேன்

யாரும் எதிர்பாராமல் டிசம்பர் 2018-ல் உர்ஜித் படேல் ராஜினாமா செய்த போதே விரல் ஆச்சார்யாவும் ராஜினாமா செய்யவிருப்பதாகச் செய்திகள் கசிந்தன. ஆனால் அதை அப்போது மறுத்துவிட்டார். இப்போது, உர்ஜித் பதவி விலகி ஆறு மாதங்கள் கழித்து தன் ராஜினாமாவை அரசுக்கு கொடுத்து அதிர்ச்சியைக் குறைத்திருக்கிறார். ஒருவேளை இருவரும் ஒரே நேரத்தில் பதவி விலகி இருந்தால் பாஜகவின் அடக்குமுறை மற்றும் அதிகாரப் பசி கிட்டதட்ட சர்வதேச செய்தியாக பரவி இருக்கும். இப்போது கூட ஆர்பிஐ போன்ற மிகப் பெரிய பொருளாதாரம் சார்ந்த துறைகளில் இருந்து இரு பெரும் பதவியில் இருக்கும் ஆளுநர்கள் மற்றும் துணை ஆளுநர்கள் ராஜினாமா செய்வது அவமானகரமானது என சர்வதேச நிதி சார் பத்திரிகைகளில் சலசலத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆச்சார்யா

ஆச்சார்யா

`அமெரிக்காவில் வேலை, அதான் புறப்படுகிறேன் எனச் சொல்வதெல்லாம் வெறும் சாக்கு போக்கு தான். இப்படி தங்கள் பதவி காலத்துக்குள்ளேயே ராஜினாமா செய்யும் அரசு ஊழியர்கள் பலரும் இப்படி சாக்கு போக்கு சொல்வது சாதாரணம் தான். இப்படி தங்கள் பதவிகளில் இருந்து வெளியேறும் பலரும் நடந்ததை வெளியில் சொல்வதே இல்லை. மிகச் சிலர் மட்டுமே, வேறு நல்ல பணிக்குச் சென்ற பின் தங்கள் துறையில் நடந்த பிரச்னைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வருவார்கள். இதற்கு முன்னாள் முதன்மை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியம் ஒரு உதாரணம். அப்படி விரல் ஆச்சார்யா ஆர்பிஐயில் நடந்த பிரச்னைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வருவாரா..?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

viral acharya says that rbi should function independently reserves used for financial monetary stability

viral acharya says that rbi should function independently rbi reserves to be used for its financial and monetary stability
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X