டெல்லி: இந்தியாவில் தொழில் நடத்தி கொள்ளை லாபத்தை பெருக்கி மத்திய அரசுக்கு முறையாக கணக்கு காட்டாமல் அவற்றை ஹவாலா பரிவர்த்தனைகளின் மூலமாக கடந்த 30 ஆண்டுகளாக பல்வேறு வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருந்த இந்தியர்களின் மொத்த சொத்துக்களின் மதிப்பு சுமார் 15 லட்சம் கோடியிலிருந்து 34 லட்சம் கோடி ரூபாய் வரையில் இருக்கும் என்று பல்வேறு ஆய்வறிக்கைகள் தெரிவித்துள்ளன.
கடந்த 1980ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரையிலும் முறைகேடாக சேர்த்த சொத்துக்கள் எல்லாம் இந்தியாவில் கட்டுமானத்துறை, சுரங்கத் துறை, மருந்துப்பொருட்கள் விற்பனை, புகையிலை, குட்கா மற்றும் பான் மசாலா தயாரித்து விற்பனை, தங்க நகை விற்பனை மற்றும் கல்வி நிறுவனங்களை நடத்தி அதன்மூலம் முறைகேடாக பணம் சம்பாதித்து வெளிநாடுகளுக்கு கொண்டு சென்று பதுக்கியுள்ளதாக அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
மேற்கண்ட மூன்று நிறுவனங்களும் நடத்திய ஆய்வுகளின் மூலமாக பல்வேறு நாடுகளில் இருக்கும் கணக்கில் காட்டப்படாத சொத்துக்களின் மதிப்பானது ஒவ்வொன்றும் வேறுபடுகிறது. எனவே இம்மூன்று ஆய்வுகளையும் அடிப்படையாகக்கொண்டு ஒரு சராசரியான மதிப்பீட்டுக்கு வர இயலவில்லை என்று தலைமை பொருளாதார ஆலோசகர் கருத்து தெரிவித்துள்ளார்.
கூடுதல் சுதந்திரம்
திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது, அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்குது, திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. என்ன ஒரு அருமையான தத்துவம். ஜனநாயக நாடு என்ற பெயரில் கூடுதல் சுதந்திரம் கொடுத்துள்ளதால் மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் தான் அளவுக்கு அதிகமாக முறைகேடாக பணத்தை சேர்த்து பிற வெளிநாடுகளில் கொண்டுபோய் பத்திரப்படுத்தி வைக்கும் திருட்டுத்தனம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கடுமையான சட்டதிட்டம்
மற்ற வளர்ந்த நாடுகளைப்போல் நம் நாட்டிலும் சட்டவிதிகள் கடுமையாக்கப்பட்டால் தான் இந்தியாவிலும் முறைகேடுகள் நடப்பது குறையும் என்பது பொருளாதார நிபுணர்களின் கணிப்பாகும். மத்திய அரசும் வெளிநாடுகளில் இந்தியர்கள் முறைகேடாக சேர்த்து வைத்துள்ள பணத்தை இந்தியாவிற்கு கொண்டுவரும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதற்காக பிற நாடுகளுடன் ஒப்பந்தம் போட்டு பணத்தை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஒப்பந்தம் போட்டாச்சு
கடந்த 2014ஆம் ஆண்டு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டனி ஆட்சிக்கு வந்த உடனேயே வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கை வேகம் எடுக்க ஆரம்பித்தன. இதற்காக சுவிட்சர்லாந்து நாட்டுடன் இந்திய அரசு ஒப்பந்தமும் போட்டு, சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் பதுக்கிவைத்துள்ள பணத்தை இந்தியாவுக்கு கொண்டுவரும் நடவடிக்கையை துரிதப்படுத்தியது.
25 பேருக்கு நோட்டீஸ்
மத்திய அரசு எடுத்த தொடர் சீரிய முயற்சியின் காரணமாக சுவிஸ் அரசும் அந்த நாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள இந்தியர்களின் பட்டியலை வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. இதனையடுத்த கடந்த மார்ச் மாதத்தில் இருந்து இதுவரையில் 25 பேருக்கு இந்தியர்களுக்கு சுவிஸ் அரசு நோட்டீஸ் அனுப்பிய கையோடு அவர்களைப் பற்றிய விவரங்களையும் மத்திய அரசுக்கு அளித்துள்ளது.
ரூ.34 லட்சம் கோடி
இந்நிலையில் இந்தியாவில் முறைகேடாக தொழில் நடத்தி அதன் மூலம் அதிக அளவில் கொள்ளை லாபம் பார்த்து மத்திய அரசுக்கு முறையாக கணக்கு வழக்குளை காட்டாமல் ஹவாலா பரிவர்த்தனைகளின் வாயிலாக பிற வெளிநாடுகளில் இந்தியார்கள் சேர்த்து வைத்திருந்த மொத்த சொத்துக்களின் மதிப்பு சுமார் 15 லட்சம் கோடியில் இருந்து 34 லட்சம் கோடி ரூபாய் வரையில் இருந்திருக்கலாம் என்று மூன்று ஆய்வறிக்கைகள் தெரிவித்துள்ளன.
பதுக்கல் சொத்துக்கள் எவ்வளவு
கடந்த 2011ஆம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, கணக்கில் காட்டப்படாத வருமானம் மற்றும் வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள இந்தியர்களின் சொத்துக்களைப் பற்றி விரிவாக ஆய்வு நடத்தி அறிக்கை தருமாறு தேசிய பொதுக் கொள்கை மற்றும் நிதி நிறுவனம் (National Institute of Public Policy and Finance-NIPPF), தேசிய பொருளாதார பயன்பாட்டு ஆராய்ச்சி கவுன்சில் (National Council of Applied Economic Research-NCAER), மற்றும் தேசிய நிதி மேலாண்மை நிறுவனம் (National Institute of Financial Management-NIFM) ஆகியவற்றை நிதியமைச்சகம் கேட்டுக்கொண்டது.
வீரப்ப மொய்லி குழு
மேற்கண்ட மூன்று ஆய்வு நிறுவனங்களும் கடந்த 1980ஆம் ஆண்டு முதல் கடந்த 2010ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் இந்தியா மற்றும் பிற வெளிநாடுகளில் இந்தியர்கள் முறைகேடாக சேர்த்து வைத்திருந்த சொத்துக்களைப் பற்றி விரிவாக ஆய்வு செய்துள்ளது. அந்த ஆய்வறிக்கை லோக்சபா காங்கிரஸ் தலைவர் எம்.வீரப்ப மொய்லி தலைமையிலான நாடாளுமன்றக் குழு நேற்று (திங்கள் கிழமை) லோக்சபாவில் தாக்கல் செய்தது.
கணக்கு பண்றது கஷ்டமப்பா
வீரப்ப மொய்லி தாக்கல் செய்த ஆய்வறிக்கையில், கடந்த 1980ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் கணக்கில் காட்டப்படாத பிற வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் சொத்து மதிப்பானது சுமார் 15 லட்சம் கோடி முதல் 34 லட்சம் கோடி ரூபாய் வரையில் இருந்திருக்கும் என்றும், இந்தியாவிற்கு வெளியில் இருக்கும் கணக்கில் காட்டப்படாத வருமானம் மற்றும் சொத்துக்களை கணக்கிடுவது கடினமான விசயம் என்று தெரிவித்துள்ளது.
கட்டுமானம் முதல் கல்வி வரை
கடந்த 1980 முதல் 2010ஆம் ஆண்டு வரையிலும் உள்ள காலகட்டத்தில், இந்தியா மற்றும் பிற வெளிநாடுகளில் இந்தியர்கள் முறைகேடாக சேர்த்த வருமானம் மற்றும் சொத்துக்கள் அனைத்துமே கட்டுமானத்துறை, சுரங்கத்துறை, மருத்துவமனை மற்றும் மருந்துகள் விற்பனை, போதைப் பொருட்களான பான் மசாலா, குட்கா மற்றும் புகையிலை விற்பனை, பல்பொருட்கள் வியாபாரம், திரைத்துறை மற்றும் கல்வி நிறுவனங்கள் நடத்தி அதன் மூலமாக அதிக அளவில் முறைகேடாக சொத்து சேர்த்துள்ளதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
என்சிஏஇஆர் ஆய்வு முடிவு
குறிப்பாக கடந்த 1980ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சுமார் 26.60 லட்சம் கோடி முதல் 34 லட்சம் கோடி ரூபாய் வரையிலும் இந்தியர்கள் பிற வெளிநாடுகளில் முறைகேடாக சொத்து சேர்த்து வைத்திருந்ததாக தேசிய பொருளாதார பயன்பாட்டு ஆராய்ச்சி கவுன்சில் (NCAER) நடத்திய ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.
என்ஐஃஎப்எம் ஆய்வு முடிவு
தேசிய நிதி மேலாண்மை நிறுவனம் (NIFM) நடத்திய ஆய்வில், கடந்த 1990ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இந்தியர்கள் வெளிநாடுகளில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த சொத்துக்களின் மதிப்பு சுமார் 9 லட்சத்து 41 ஆயிரத்து 837 கோடி ரூபாய் வரையில் இருந்திருக்கும் என்று தெரிவித்துள்ளது. அதோடு இந்தியாவில் கணக்கில் காட்டப்படாத மொத்தத் தொகையில் இருந்து சராசரியாக சுமார் 10 சதவிகிதம் வரை இந்தியாவிற்கு வெளியே சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்டுள்ளதாக மதிப்பீடு செய்துள்ளது.
என்ஐபிபிஃஎப் ஆய்வு முடிவு
தேசிய பொதுக் கொள்கை மற்றும் நிதி நிறுவனம்(NIPPF) நடத்திய ஆய்வில், கடந்த 1997ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட சொத்துக்களின் மதிப்பானது, மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) யில் சுமார் 0.20 சதவிகிதத்தில் இருந்து சுமார் 7.40 சதவிகிதமாக இருக்கக்கூடும் என்று மதிப்பிட்டுள்ளது.
மூன்றும் மூன்று விதம்
மேற்கண்ட மூன்று நிறுவனங்களும் நடத்திய ஆய்வுகளின் மூலமாக பல்வேறு நாடுகளில் இருக்கும் கணக்கில் காட்டப்படாத சொத்துக்களின் மதிப்பானது ஒவ்வொன்றும் வேறுபடுகிறது. எனவே இம்மூன்று ஆய்வுகளையும் அடிப்படையாகக்கொண்டு ஒரு சராசரியான மதிப்பீட்டுக்கு வர இயலவில்லை என்று தலைமை பொருளாதார ஆலோசகர் கருத்து தெரிவித்துள்ளார்.
இதெல்லாம் இந்தியாவில் முடியாது
ஆகவேதான், பிற வெளிநாடுகளில் இருக்கும் கணக்கில் வராத சொத்துக்களின் மதிப்பை துல்லியமாக கணக்கிடுவது என்பது இந்தியா போன்ற நாட்டில் சற்று கடினமான வேலை என்று நாடாளுமன்றக் குழு தெரிவித்துள்ளது.