ஈரோடு : தலை நகர் சென்னையில் தான் தண்ணீர் பிரச்சனை என்றால், ஒரு அணைகளை கொண்டிருக்கும் ஈரோட்டிலும் சில இடங்களில் தண்ணீர் பிரச்சனை தான். ஒரு புறம் காவிரி படுகையே வறண்டு காடாய் போய்க் கொண்டிருக்கும் நிலையில் குடி தண்ணீருக்கே தட்டுப்பாடு நிலவி வருகிறது.
சென்னை போல தண்ணீர் பிரச்சனை இல்லாவிட்டாலும், ஈரோடு மாவட்டத்தின் சில பகுதிகள் எப்போதும் சற்று வறட்சியாகவே காணப்படும், இந்த நிலையில் தற்போது பருவமழையும் பொய்த்துப் போனதால் வறட்சியான இடங்கள் மிக வறட்சியாக காணப்படுகின்றன.
குறிப்பாக அம்மாபேட்டை, நம்பியூர், பெருந்துறை சென்னிமலை குருவரெட்டியூர், சென்னம்பட்டி, அந்தியூர் என சில பகுதிகளில் நிலத்தடி நீர் 1000 அடிக்கும் கீழே போய்விட்டதாக கருதப்படுகிறது.
கடந்தாண்டு கரை புரண்டு ஓடிய வெள்ளக்காட்டிலா?
என்னய்யா கொடுமை இது? காவிரி நதி பாய்தோடும் ஈரோட்டிலும் இந்த பிரச்சனையா ? என்கிறீர்களா? சென்னையிலாவது 2015ல் தான் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆனால் ஈரோடும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் கடந்த ஆகஸ்ட் 2018ல் தான் வெள்ளம் கரை புரண்டு ஓடியது குறிப்பிடத்தக்கது.
குடிதண்ணீருக்கே தண்ணீர் இல்லை?
தண்ணீர் கரை புரண்டு ஓடி ஒரு வருடம் இன்னும் ஆகவில்லை. ஆனால் இங்கு குடி தண்ணீருக்கு பஞ்சம் தற்போது. முன்னர் தினசரி காலை மாலை இரு வேளைகளிலும் 3 மணி நேரம் தண்ணீர் வந்து கோண்டிருந்த நிலையில், 1 நாள் விட்டு ஒரு நாள் என மாற்றப்பட்டது. தற்போது இது 3 நாளைக்கு ஒரு முறை என மாற்றப்பட்டுள்ளதாம். ஒரே மாவட்டத்தி ல் இரு பெரும் அணைகளை கொண்ட இந்த மாவட்டத்திற்கே இப்படியொரு நிலையில், சென்னையில் சொல்லவா வேண்டும்.
சாக்கடையாய் மாறி வரும் காவிரி
ஒரு புறம் தண்ணீர் இருந்தும் அது உபயோகமானதாக இல்லை என்கிறார்கள் ஈரோடு மக்கள். ஆமாங்க.. ஈரோடு காளிங்கராயன் வாய்க்காலில் களக்கப்படும் சாயப்பட்டறை கழிவுகளும், பள்ளிபாளையம் ஆற்றில் கலக்கப்படும் சாக்கடை நீராலும் தண்ணீர் மிக மாசடைந்து வருகிறது என்றும். இதனால் இந்த தண்ணீரை பார்க்கவே அருவருப்பாக இருக்கிறது. பின்னர் இதை எப்படி குடிப்பது என் கிறார்கள் இம்மக்கள்.
அபெக்ஸ் அசோசியேட்ஸ் உடன் கைகோர்த்துள்ள அரசு
மக்களுக்கு தூய்மையான நீரை கொடுக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. ஆனால் அரசோ தனியாரிடம் உதவி கோரியுள்ளது ஈரோடு மாநகராட்சி. இது குறித்து அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுவதாவது, ஈரோடு மாநகரப் பகுதியில் உள்ள சாய பட்டறை ஆலைகளால் நிலத்தடி நீர் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகிறது. அதோடு மாநகரப் பகுதிகளுக்கு சுத்தமான ஆர்.ஓ. மற்றும் யுவி டெக்னாலஜி முறையில் குறைந்த கட்டணத்தில் குடிநீர் விநியோகம் செய்வதற்காக அபெக்ஸ் அசோசியேட்ஸ் நிறுவனத்துடன் 10 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்கள்.
கோயமுத்தூர் பானியை கடை பிடிக்கும் ஈரோடு
இதற்கு முன்னதாக கோவை மாநகரில் சூயஸ் என்ற பிரான்சு நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனத்திற்கு தண்ணீர் விநியோக உரிமையை கோவை மாநகராட்சி நிர்வாகம் தாரை வார்த்ததது. இந்த நிலையில் தற்போது ஈரோடு மாநகராட்சி நிர்வாகமும் தண்ணீர் விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைத்துள்ளது. இதுவே பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கொடுத்தது. தற்போது இதைப் போன்றே மற்ற இடங்களிலும் மாறி வருவது மனவேதனையளிக்கிறது என்கிறார்கள் இப்பகுதி மக்கள்.
எங்க வேணா வாங்கிடலாம்!
இந்த தனியார் நிறுவனம் தற்போது குறிப்பிட்ட இடங்களில் மட்டும் இந்த சேவையை வழங்கி வருகிறது. குறிப்பாக பவானி, வீரப்பன்சத்திரம், கொல்லம்பாளையம், மூலப்பாளையம் உள்ளிட்ட சில பகுதிகளில் அதன் கிளைகளை நிறுவியுள்ளது. இங்கு ஒரு லிட்டர் மினரல் வாட்டர் ஒரு ரூபாய் எனவும், 20 லிட்டர் மினரல் வாட்டர் ஏழு ரூபாய் எனவும் கணக்கிட்டு விற்பனை செய்ய துவங்கியுள்ளது. இதையெல்லாம் தாண்டி ஒரு படி மேலே போய், அபெக்ஸ் நிறுவனம் சார்பில் வாட்டர் கார்டு என்ற பிரிபெய்ட் அட்டை வழங்கப்படுகிறதாம். இதன் மூலமாக 24 மணி நேரமும் இந்த சேவையை பெற்றுக் கொள்ள முடியுமாம்.
அரசு உதவியுடன் விற்பனை
பஞ்சாயத்துகளில் உள்ள குடிநீர் இணைப்புகளை நேரடியாக அபெக்ஸ் நிறுவனத்திற்கு கொடுத்துள்ளது ஈரோடு மாநகராட்சி நிர்வாகம். இதன் மூலமாக பஞ்சாயத்துகளில் உள்ள தண்ணீரை இலவசமாக எடுத்து மாநகராட்சி பகுதிகளில் உள்ள மக்களுக்கு ஆர்.ஓ. மற்றும் யுவி டெக்னாலஜி என்ற பெயரில் அபெக்ஸ் நிறுவனம் விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. ஒரு புறம் மக்களால் இது நல்ல திட்டம் என்று கூறப்பட்டு வந்தாலும் போக போகத் தான் தெரியும் இதன் உண்மை நிலை என்னவென்று.
தண்ணீர் வாங்கு கின்றனர்.
பெருந்துறை சிப்காட்டில் 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. அதிலும் பெரும்பாலான நிறுவனங்கள் சாய தொழிற்சாலைகள் மற்றும் தோல் தொழிற்சாலைகள்தான். இந்த நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் பெரும்பாலும் சுத்திகரிப்பு செய்யப்படாமல் வெளியேற்றப்பட்டு வந்தது. இதனால் சிப்காட்டை சுற்றியுள்ள கிட்டதட்ட 10 கிமீ தொலைவிற்குள் உள்ள அனைத்து கிராமங்களிலும் நிலத்தடி நீர் முற்றிலும் மாசுபட்டநிலையில் சாயக்கழிவின் நிறத்துடனேயே உள்ளது. தற்போது தான் ஜீரோ டிஸ்ஜார்ஜ் முறை அமுலுக்கு வந்த பின்னர் பெரும்பாலான நிறுவனங்கள் அதற்கு பின்னர் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து பயன்படுத்தி வருகின்றனர். அதோடு தண்ணீர் பற்றாக் குறையால் வாங்கவும் செய்கின்றனர்.