டெல்லி: கடந்த 2016ஆம் ஆண்டு இறுதியில் கொண்டுவரப்பட்ட செல்லாத நோட்டு அறிவிப்புக்கு பின்னர் தான் நாட்டில் பணப்புழக்கம் 22 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளதாக, ராஜ்ய சபாவில் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
செல்லாத நோட்டு அறிவிப்புக்கு முன்னர், கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி வரையிலும் நாட்டின் பழப்புழக்கமானது சுமார் 17 லட்சத்து 74 ஆயிரத்து 187 கோடி ரூபாயாக இருந்தது. அதுவே தற்போது 22 சதவிகிதம் வரை அதிகரித்து சுமார் 21 லட்சத்து 71 ஆயிரத்து 385 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
கடந்த 2016-17ஆம் நிதியாண்டில் சுமார் 7 லட்சத்து 62 ஆயிரத்து 72 போலி நோட்டுக்களும், 2017-18ஆம் நிதியாண்டில் சுமார் 5 லட்சத்து 22 ஆயிரத்து 783 போலி நோட்டுக்களும், 2018-19ஆம் நிதியாண்டில் சுமார் 3 லட்சத்து 17 ஆயிரத்து 389 போலி நோட்டுக்களும் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கள்ளநோட்டு புழக்கம்
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் முட்டுக்கட்டையாக இருப்பது தங்கு தடையில்லாத கள்ள நோட்டு மற்றும் கருப்பு பணப்புழக்கமும், கறுப்புப் பொருளாதாரத்தின் வளர்ச்சியுமே காரணம் என்று நாட்டின் பெரும்பாலான பொருளாதார நிபுணர்களும் பிரதமர் மோடியிடம் வலியுறுத்தி இருந்தனர். அதோடு அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளில் சுமார் 20 சதவிகிதம் வரையில் கள்ள நோட்டுக்களே இருந்ததை ரிசர்வ் வங்கியும் ஒப்புக்கொண்டது.
சிக்கலில் ரகுராம் ராஜன்
இந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களே பணப்புழக்கம் அதிகரித்து காணப்படுவதற்கு முக்கிய காரணம் என்றும், அதிக அளவிலான கருப்புப்பண பதுக்கலுக்கு வழி வகுப்பதோடு, தீவிரவாதிகள் மற்றும் பயங்கரவாத இயக்கங்களுக்கு அதிக அளவில் கொண்டு செல்லப்படுகிறது என்றும், பணவீக்கம் அதிகரிப்பதற்கும் காரணம் என்றும் பொருளாதார நிபுணர்களும் மோடியிடம் எடுத்து சொல்லி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாததாக ஆக்கவேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனாலும் அப்போது ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த ரகுராம் ராஜன் இதற்கு ஒப்புக்கொள்ளாததால், ஆளுநர் பதவியிலிருந்து விலகும் நிலை ஏற்பட்டது.
நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி
ஆளுநர் பதவியிலிருந்து ரகுராம் ராஜன் விலகியதை அடுத்து உர்ஜித் பட்டேல் ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவிக்கு கொண்டுவரப்பட்டார். அவர் பதவியில் அமர்ந்த சூட்டோடு, கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி இரவில், பிரதமர் மோடி தொலைக்காட்சியில் தோன்றி, நாட்டு மக்களுக்கு ஒரு இனிப்பான் செய்தி என்று சொல்லிவிட்டு, உயர் மதிப்பிலான 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் இனிமேல் செல்லாது என்றும் பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
போர்க்கால நடவடிக்கை
செல்லாத 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களுக்கு பதிலாக புதிய வடிவத்தில் 500 ரூபாய் நோட்டும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக அதைவிட உயர் மதிப்புடைய 2000 ரூபாய் நோட்டுகளும் போர்க்கால அடிப்படையில் அச்சிடப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டன. அதோடு, பொதுமக்கள் அனைவரும் இனிமேல் ரொக்கப் பரிமாற்றத்தை குறைத்துக் கொண்டு அதற்கு பதிலாக மின்னணு பரிவர்த்தனை என்னும் டிஜிட்டல் பரிவர்ததனைக்கு தங்களை தயார் படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டார் மோடி.
ரொக்கப் பரிமாற்றத்தை குறைக்கணும்
உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகளால் தான் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படுகிறது என்று சொல்லிவிட்டு அதைவிட கூடுதல் மதிப்புடைய 2000 ரூபாய் நோட்டுக்களை அச்சிட்டு புழக்கத்தில் விடுவது எந்தவிதத்தில் சரியான பொருளாதார நடவடிக்கை என்று பொதுமக்களோடு பொருளாதார நிபுணர்களும் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பினர். இதற்கு மத்திய அரசு தரப்பில் ரொக்கப் பணப்பரிமாற்றத்தை குறைப்பதற்காகத்தான் இந்த நடவடிக்கை என்று சமாதானம் சொல்லப்பட்டது.
சர்ஜிகல் ஸ்ட்ரைக்கா இல்லை கார்பெட் குண்டா
மத்திய அரசின் இந்த எதிர்பாராத செல்லாத நோட்டு அறிவிப்பு என்பது கடந்த எழுபது ஆண்டுகால சுதந்திர இந்தியாவின் பொருளாதார வரலாற்றில் மிகப்பெரிய அரசியல் மற்றும் பொருளாதார நடவடிக்கை என்று பல்வேறு தரப்பினரும் விமர்சித்தனர். இந்த நடவடிக்கையானது அரசியல், சமூக மற்றும் பொருளாதார களங்களில் கடுமையான பாதிப்பினை ஏற்படுத்தியது. தொடக்கத்தில் இது ஒரு கருப்புப் பணத்திற்கு எதிரான துல்லிய தாக்குதல் (Surgical strike) என சொல்லப்பட்டாலும், இதனால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை அடுத்து இது ஒரு தரைவிரிப்பு குண்டுவீச்சு (carpet bombing) என்று வர்ணிக்கப்பட்டது.
தோல்வியில் முடிந்தது
இதன் பின்பு நிலைமை படிப்படியாக சீரடையத் தொடங்கியது.. ரிசர்வ் வங்கியும் 99 சதவிகித செல்லாத நோட்டுக்கள் ரிசர்வ் வங்கிக்கு திரும்பி விட்டதாக கணக்கு காட்டியது. இருந்தாலும் இதற்காக ஆன செலவு என்பது சற்று அதிகப்படியானது என்பதால், செல்லாத நோட்டு அறிவிப்பு என்பது தோல்வியிலேயே முடிந்தது என்று கவர்னர் உர்ஜித் பட்டேல் கருத்து தெரிவித்தார். இதனால் இவரையும் மாற்றிவிட்டு அதற்கு பதிலாக சக்தி காந்ததாஸை ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக உட்கார வைத்தனர்.
பணப்புழக்கம் அதிகம்தான்
தற்போது லோக்சபா தேர்தல் முடிந்து மீண்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியே வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. மோடியே மீண்டும் பிரதமராக உட்கார்ந்துவிட்டார். நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் நியமிக்கப்பட்டுள்ளார். அவரும் வரும் ஜூலை 5ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் தயாரிப்பு பணியில் தீவிரமாக இறங்கிவிட்டார். இந்நிலையில் ராஜ்யசபாவில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் செல்லாத நோட்டு அறிவிப்புக்கு முன்பு இருந்ததை விட தற்போது அதிகரித்துள்ளதாக கூறினார்.
அவர் அப்படி இவர் இப்படி
செல்லா நோட்டு அறிவிப்புக்கு முன்பு 2016ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி வரை, சுமார் 17 லட்சத்து 74 ஆயிரத்து 187 கோடி ரூபாய் பொதுமக்களிடம் புழக்கத்தில் இருந்தது. ஆனால் கடந்த மே மாத இறுதியில் தற்போது அதைவிட கூடுதலாக 22 சதவிகிதம் அதிகரித்து சுமார் 21 லட்சத்து 71 ஆயிரத்து 385 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என்று பதிலளித்துள்ளார். பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தவே செல்லாத நோட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது என்று மோடியே ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் தற்போது நிர்மலா சீதாராமன் இப்படி மாற்றி பதிலளித்திருப்பது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வளவு நோட்டுக்களா
மேலும் பணமதிப்பு நீக்க நடவடிக்கையானது கள்ள நோட்டுக்களை தடுப்பதில் பெரிதும் உதவியாக இருந்தது என்று நிர்மலா சீதாராமன் பதிலளித்துள்ளார். கடந்த 2016-17ஆம் நிதியாண்டில் சுமார் 7 லட்சத்து 62 ஆயிரத்து 72 போலி நோட்டுக்களும், 2017-18ஆம் நிதியாண்டில் சுமார் 5 லட்சத்து 22 ஆயிரத்து 783 போலி நோட்டுக்களும், 2018-19ஆம் நிதியாண்டில் சுமார் 3 லட்சத்து 17 ஆயிரத்து 389 போலி நோட்டுக்களும் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரிசர்வ் வங்கி கவனிப்பு
மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறது. தற்போதைய சூழலில் ரூபாய் மதிப்பின் ஏற்ற இறக்கத்தையும், பணப்புழக்க சதவிகிதத்தின் அடிப்படையிலும் பொருளாதார விளைவுகளையும் விதிமுறைகளையும் அளவீடு செய்கின்றன என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.