பாரதிய ஜனதா கட்சியின் 2.0 அரசில் பல முக்கிய நபர்களுக்கு தொடர்ந்து பதவி நீட்டிப்புகள் மற்றும் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதற்கு சிறந்த உதாரணம் அஜித் தோவல்.
கடந்த ஆட்சிக் காலத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்தவருக்கு இந்த முறையும் (அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு) தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பதவி நீட்டிப்பு செய்திருக்கிறார்கள்.
அதே போல இப்போது மோடி தலைமையிலான நிதி ஆயோக் (Niti Aayog) அமைப்பின் முதன்மைச் செயல் அதிகாரி பதவியில் இருக்கும் அமிதாப் காந்த்க்கும் இன்னும் இரண்டு வருடங்களுக்கு பதவி நீட்டிப்பு கொடுத்திருக்கிறார்கள்.
அமிதாப் காந்துக்கு வரும் ஜூன் 30, 2019 உடன் நிதி ஆயோக்கில் பணி நிறைவாகிறது. இப்போது அமிதாப் காந்த்க்கு இரண்டு வருடம் நீட்டிப்பு கொடுத்து அடுத்த ஜூன் 30, 2021 வரை பதவி கொடுத்திருக்கிறார்கள். பணி நியமனங்களுக்கான கேபினெட் கமிட்டியும், அமிதாப் காந்தின் பணி நீட்டிப்புக்கு ஒப்புதல் அளித்திருக்கிறதாம்.
அமிதாப் காந்த் கேரள கேடரைச் சேர்ந்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரி. கடந்த பிப்ரவரி 17, 2016 அன்று நிதி ஆயோக்கின் (Niti Aayog), முதல் முழு நேர முதன்மைச் செயல் அதிகாரியாக பதவிக்கு வந்தார். அதற்கு முன் தொழிற்துறை மற்றும் உள் வர்த்தக மேம்பாட்டுத் துறையின் செயலராக (Department for Promotion of Industry and Internal Trade) இருந்தார். அந்த பதவியில் இருந்து அடுத்த பதவி உயர்வாகத் தான் நிதி ஆயோக் அமைப்புக்கு முதன்மைச் செயல் அதிகாரியாக பதவிக்கு வந்திருக்கிறார்.
மோடி தலைமையிலான அரசின் பல்வேறு பொருளாதாரம் சார்ந்த பிரச்னைகள் குறிப்பாக ஜிடிபி தரவுகள் தொடர்பான பிரச்னை, வேலையில்லாத் திண்டாட்டம் தொடர்பான பிரச்னைகளில், அரசுக்கு பெரிய அளவில் பக்க பலமாக இருந்தவர் என்பது நினைவுபடுத்திக் கொள்ள வேண்டி இருக்கிறது.
63 வயதாகும் அமிதாப் காந்த், டெல்லி செயிண்ட் ஸ்டீஃபன் கல்லூரியில் இளங்கலை பொருளாதாரமும், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முதுகலை பொருளாதாரமும் படித்தவர். மத்திய அரசின் "Make in India", Startup India, "Incredible India" திட்டங்களில் எல்லாம் நம் அமிதாப் காந்துக்கும் பெரிய பங்கு உண்டு.