பெங்களூரூ: தண்ணீர் பஞ்சம். இன்று இந்தியாவின் பொதுவான அடையாளங்களில் ஒன்றாகிவிட்டது. தமிழகத்தின் தலை நகரின் கழுத்தை நெறிக்கும் தண்ணீர் பஞ்சம் இப்போது கர்நாடகத்தையும் நெருக்கத் தொடங்கி இருக்கிறது.
கர்நாடகத்தில் ஏற்பட்டிருக்கும் தண்ணீர் பஞ்சம் மற்றும் குடிநீர் பற்றாக்குறை காரணமாக யாரும் எதிர்பாராத ஒரு அதிரடி முடிவை எடுக்க யோசித்துக் கொண்டிருக்கிறது கர்நாடக அரசு.
பெங்களூரில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளைக்கு தடை (Apartment Ban) விதிக்கலாமா..? என கர்நாடக அரசு ஆலோசித்து வருகிறதாம்.
பரமேஷ்வரா பேச்சு
கர்நாடக துணை முதல்வர் ஜி பரமேஷ்வரா பத்திரிகையாளர்களிடம் பேசிய போது "(Apartment Ban) அபார்மெண்ட் தடை குறித்து, ரியல் எஸ்டேட் கம்பெனிகள், பில்டர்கள் மற்றும் டெவலெப்பர்களிடம் பேசி ஒரு முடிவுக்கு வருவோம். பெங்களூரூ நகரத்தில் நிறைய அபார்ட்மெண்டுகளைக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி கட்டும் வீடுகளில் போதுமான குடிநீர் வசதிகளை உறுதிப்படுத்தாமலேயே மக்களுக்கு விற்று விடுகிறார்கள். எனவே அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எந்த புதிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் அனுமதி வழங்காமல், தடை விதிக்கலாமா என யோசித்து வருகிறோம்" என கள எதார்த்தைச் சொல்லி இருக்கிறார்.
பெங்களூரூ அமைச்சர்
கர்நாடக மாநிலத்தின் துணை முதல்வராக இருக்கும் பரமேஷ்வரா தான் பெங்களூரு நகர மேம்பாட்டு அமைச்சராகவும் இருக்கிறார் என்பதை இங்கு நினைவுபடுத்திக் கொள்ள வேண்டி இருக்கிறது. மேலும் "தற்போதைய நிலவரப்படி , பெங்களூரில் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருப்பவர்கள் பெரிய அளவில் குடிநீருக்கே டேங்கர் லாரிகளைத் தான் நம்பி இருக்கிறார்கள்" எனவும் உண்மையை பொது வெளியில் போட்டு உடைத்திருக்கிறார் பரமேஷ்வரா.
லிங்கணமக்கி (Linganamakki)
பெங்களூரில் இருக்கும் தண்ணீர் பற்றாக்குறையை சரி கட்ட, ஷரவதி (Sharavathi) ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் லிங்கணமக்கி அணையில் இருந்து நீர் கொண்டு வரும் திட்டத்தை முன்வைத்தார்கள். ஆனால் பலரும் கடுமையாக லிங்கணமக்கி திட்டத்தை எதிர்த்தார்கள். எனவே, லிங்கணமக்கி அணையில் மின்சார உற்பத்திக்குப் பிறகு கடலில் கலக்கும் ஷரவதி ஆற்றை, பெங்களூருக்கு கொண்டு வருவது பற்றி ஒரு விரிவான திட்ட அறிக்கையை கேட்டிருக்கிறார்கள். இனி திட்ட அறிக்கை வந்த பின் தான் அடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கர்நாடக அரசும் திட்ட வட்டமாகச் சொல்லி விட்டது.
மாற்று யோசனை
இருப்பினும் பெங்களூரூ குடிநீர் பிரச்னையை சமாளிக்கும் மற்ற முக்கிய யோசனைகளில் ஒன்றாகத் தான் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு தடை (Apartment Ban) விதிக்கலாம் என்கிற யோசனையை பரீசீலனை செய்து வருகிறார்களாம். அதோடு தற்போது பெங்களூரில் இருக்கும் மக்களுக்கு தேவையான தண்ணீரைக் கொடுக்க பல புதிய திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார்களாம். தற்போது காவிரி குடிநீர் திட்டத்தின் ஐந்தாம் பாகத் திட்டம் கூட செயல்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் பெங்களூர் நகரின் குடிநீர்த் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருப்பதால் அரசு உற்பத்தி செய்யும் குடிநீர் போதவில்லை எனவும் சொல்லி இருக்கிறார்.
சீரியஸ்
ஒருவேளை ஐந்து ஆண்டுகளில் நிலைமை கட்டுக்குள் வந்தால், அதன் பின் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அனுமதி கொடுத்துக் கொள்ளலாம் எனவும் வெளிப்படையாகச் சொல்லி இருக்கிறார் கர்நாடக துணை முதல்வர்.
ஆக கர்நாடக அரசு பெங்களூரில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு தடை விதிப்பதை கொஞ்சம் சீரியஸாக யோசித்துக் கொண்டிருப்பதாகவே தெரிகிறது. இந்த அறிவிப்பை கேட்ட ரியல் எஸ்டேட் டெவலெப்பர்கள் பலத்த அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கிறார்களாம்.
பெங்களூரில் இருந்து சுமார் 350 கிலோமீட்டர் தான் சென்னை. நம் எடப்பாடி சாமியோ, பன்னீர் சாமியோ இது போல என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள் எனத் தெரியவில்லை. தயவு செஞ்சி எதுனா பண்ணுங்க சார். எத்தனை நாளுக்குத் தான் குளிக்காமலேயே திரியறது...?