நொய்டா: தியா (மணப் பெண்ணின் பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). கடந்த ஏப்ரல் 2019-ல் இருந்து தியாவுக்கும், அக்ஷத் குப்தாவுக்கும் (மாப்பிள்ளையின் உண்மையான பெயர்) திருமணம் நிச்சயிக்கப்பட்டு, திருமண செலவுகள் பற்றி பேச்சு எழுந்திருக்கிறது.
தியா டெல்லியில் ஒரு வங்கியில் வேலை பார்த்து வருகிறார். அக்ஷத் குப்தா ஒரு பிசினஸ் மேன். அக்ஷத் குமார் நொய்டாவில், கஸ்னா பகுதியில் இருக்கும் ஜேபி க்ரீன் சொசைட்டி என்கிற அடுக்குமாடிக் குடியிருப்பில் குடும்பத்தோடு வசித்து வருகிறார்கள்.
திருமணப் பேச்சிலேயே கல்யாணத்தை ஐந்து நடத்திர விடுதியில் ஆடம்பரமாக நடத்த வேண்டும், அனைத்து மருமகன்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கும் தங்கக் காசு கொடுக்க வேண்டும். அக்ஷத்துக்கும், அவர் தந்தை விஜய் குமாருக்கும் ஒரு தங்க செயின் போட வேண்டும், மாப்பிள்ளை வீட்டு ஊர்வளத்தில் வரும் அனைவருக்கும் பணம் கொடுக்க வேண்டும் என எக்கச்சக்க டிமாண்டுகள்.
தியா குடும்பத்தினரும் தங்களால் முடிந்த வரை, தங்கள் சேமிப்பில் இருக்கும் பணத்தை வைத்து சிறப்பாக செய்வதாகச் சொல்லி இருக்கிறார்கள். திட்டமிட்ட படி கல்யாண வேலைகள் எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது. திடீரென மாப்பிள்ளை தரப்பில் இருந்து ஒரு கோடி ரூபாய் வரதட்சணையாகக் கேட்டிருக்கிறார்கள். பதறி இருக்கிறது தியா குடும்பம். அப்படி கொடுக்கவில்லை என்றால், திருமணத்தை நிறுத்தி விடுவோம் எனவும் மிரட்டி இருக்கிறார்கள்.
செய்வதறியாமல் தவித்துக் கொண்டிருக்கும் போதே, கடந்த வியாழக்கிழமை (ஜூன் 27, 2019) கல்யாண வைபவமும் தொடங்கிவிட்டது. மாப்பிள்ளை வீட்டு ஊர்வளமும் வந்துவிட்டது. மாப்பிள்ளை ஊர்வளம் முன் வைத்து தியாவின் தந்தை சொன்ன படி பணம் கொடுக்காததைச் சொல்லி அவமானப்படுத்தி இருக்கிறார்கள். அதோடு மாப்பிள்ளை அக்ஷத் குப்தாவும் "நீங்கள் மோசமான விளைவுகளை சந்தீப்பீர்கள்" என மிரட்டி விட்டு வெளியேறி இருக்கிறார்.
இத்தனை பிரச்னைகள் நடந்த பின், மாப்பிள்ளை அக்ஷத் குமார், மாப்பிள்ளை தந்தை விஜய் குமார் குப்தா, மாப்பிள்ளையின் தாய் ரஜ்னி குப்தா, மாப்பிள்ளையின் ஆறு சகோதரிகள் உட்பட 11 பேர் மீது விவரமாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார் தியா. புகாரின் அடிப்படையில் பல்வேறு வரதட்சனை தடுப்புச் சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கையே தாக்கல் செய்துவிட்டார்களாம்.
தில்லாக புகார் கொடுத்த தியாவுக்கு நம் வாழ்த்துகள்.