Gupta வீட்டுக் கல்யாணம், கடந்த சில வாரங்களாக முதல் பக்க செய்தியாகிக் கொண்டே இருக்கிறது. கடந்த ஜூன் 18 முதல் 22 தேதி வரை, உத்தரகாண்ட் மாநிலத்தில், இமய மலை அடிவாரத்தில் ஆலி பகுதியில் திறந்த வெளியில் சினிமா செட் போல ஏகப்பட்ட வேலைகளைச் செய்து, Gupta என்கிற பெரிய பணக்காரர்கள் தங்கள் இரண்டு வாரிசுகளுக்கு திருமணம் நடத்தினார்கள்.
இந்த குப்தாக்கள் பெரிய பணக்காரர்கள். தென்னாப்பிரிக்காவின் அரசியலையே ஆளும் அளவுக்கு செல்வாக்கு படைத்த பணக்காரர்கள். தென்னாப்பிரிக்க விமானப் படையின் ரன்வேக்களை எல்லாம் தங்கள் வீட்டு விசேஷத்துக்கு பயன்படுத்தும் அளவுக்கு செல்வாக்குள்ளவர்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த இரண்டு வாரிசுகளுக்கு திருமணம் செய்ய மட்டும் சுமார் 200 கோடி ரூபாய் செலவழித்து இருக்கிறார்களாம்.
உத்தரகாண்ட் மாநிலத்தில், ஜோசிமட் நகராட்சி எல்லைக்குள் வரும் ஆலி பகுதி, இமய மலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் ஒரு திறந்த வெளி இடம். இங்கு தான் கோடி கணக்கில் செலவழித்து சினிமா போல பிரம்மாண்டமாக செட் போட்டு திருமணத்தை நடத்தி இருக்கிறார்கள் இந்த Gupta-க்கள்.
32,100 கிலோ குப்பை
கடந்த ஜூன் 22-ம் தேதி நடந்து முடிந்த Gupta வீட்டுக் கல்யாணம் நடந்த இடத்தில், உருவான குப்பைகளை எல்லாம் இப்போது தான் முழுமையாக சுத்தம் செய்திருக்கிறார்களாம். சுமார் 32,100 கிலோ குப்பைகளை கை வலிக்க வலிக்க நகராட்சி ஊழியர்கள் சுத்தம் செய்திருக்கிறார்களாம். இந்த இடத்தை சுத்தம் செய்த செலவாக 8.14 லட்சம் ரூபாய்க்கு கணக்கு போட்டு பில் எழுதி இருக்கிறார்களாம். இந்த ரசீதை எழுதுவதற்கு முன்பே குப்தா குடும்பத்தினர் 5.54 லட்சம் ரூபாயை முன் கூட்டியே நகராட்சி நிர்வாகத்திடம் டெபாசிட் செய்திருந்தார்களாம்.
அபராதம்
இந்த 5.54 லட்சம் ரூபாய் போகத் தான் இந்த 8.14 லட்சம் ரூபாய் பில் எழுதி இருக்கிறார்களா..? எனத் தெரியவில்லை. குப்பைகளை தன் ஊழியர்களை வைத்து சுத்தம் செய்த ஜோஷிமட் நகராட்சி, திறந்த வெளியில் மலம் கழித்தலுக்கு ஒரு லட்சம் ரூபாயும், குப்பைகளை இப்படி பொறுப்பில்லாமல் இறைத்துவிட்டுச் சென்றதற்கு 1.5 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்திருக்கிறார்களாம். இந்த அபராத ரசீதை, Gupta வீட்டுக் கல்யாணத்தை ஏற்பாடு செய்து கொடுத்த ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்துக்கு, நகராட்சி நிர்வாகம் அனுப்பி இருக்கிறார்களாம்.
உயர் நீதிமன்றம்
Gupta வீட்டுக் கல்யாணம் நடப்பதற்கு முன்பே, ஒரு பாதுகாப்பு டெபாசிட்டாக சமோலி மாவட்ட நிர்வாகம் 3 கோடி ரூபாயை Gupta-க்களிடம் இருந்து வசூலித்திருக்கிறார்களாம். இந்த டெபாசிட்டை மீண்டும் குப்தா குடும்பத்துக்கு வழங்க வேண்டுமா..? என வரும் ஜூலை 08, 2019 அன்று, உத்தராகண்ட் உயர் நீதிமன்றத்தில் நடக்க இருக்கும் வழக்கு விசாரணைக்குப் பின் தெரிய வரும் எனச் சொல்கிறது மாவட்ட நிர்வாகம். உத்தராகண்ட் உயர் நீதிமன்ற உத்தரவு படி, Gupta-க்கள் வீட்டு திருமணத்தை, 13 பல்வேறு துறை சார்ந்த அரசு அதிகாரிகள் மேற்பார்வை செய்திருக்கிறார்களாம். வீடியோ பதிவுகளை எல்லாம் எடுத்திருக்கிறார்களாம்.
முதல்வர்
இப்படி நீதி ஒரு பக்கம் தன் வேலையை மும்முரமாக செய்து கொண்டிருக்க, உத்தரகாண்ட் முதல்வர் த்ரிவேந்திர சிங் ராவத்தோ Gupta-க்களுக்கு ஆதரவாக இருப்பது போல பேசி இருக்கிறார். Gupta-க்கள் திருமணத்தால் சூழலியல் பாதிக்கப்பட்டது என்பது ஆதாரமற்றது. ஆலியை ஒரு நல்ல சுற்றுலா ஸ்தலமாக மேம்படுத்தலாம் எனப் பேசி இருக்கிறார். இந்த பெரிய பணக்காரர்கள் வீட்டுக் கல்யாணத்துக்கு முதல்வர் தொடங்கி பாபா ராம்தேவ், கரீனா கபூர் வரை பலரும் பங்கெடுத்தது குறிப்பிடத்தக்கது.