நொய்டா, உத்திரப் பிரதேசம்: Paytm இந்தியாவின் முன்னணி இ-வேலட் நிறுவனங்களில் ஒன்று. யாரோ ஒரு சிலர், Paytm-ல் பணப் பரிவர்த்தனைகளுக்கு 4 - 5 சதவிகிதம் வரை கட்டணம் வசூலிக்கிறார்கள் என ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்கள். இந்த கட்டணம் மூலம் Paytm நிறுவனம் செய்யும் செலவுகளின் அளவு குறைந்து லாபத்தை அதிகரிக்கும் எனவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இந்த கட்டண விவகாரம் காட்டுத் தீ போல பரவத் தொடங்கியது.
இந்த பிரச்னையை கண்டு கொண்ட Paytm, தன் அதிகார பூர்வ ட்விட்டர் பக்கத்தில் "இதுவரை Paytm டெபிட் கார்ட், க்ரெடிட் கார்ட், யூபிஐ மற்றும் வேலட்களில் இருந்து செய்யும் எந்த பணப் பரிமாற்றத்துக்கும் கட்டணம் வசூலிக்கவில்லை. இனி வருங்காலத்திலும் வசூலிக்கப் போவதில்லை" என திட்டவட்டமாகச் சொல்லி தங்கள் மீது எழுந்த சந்தேகத்தை துடைத்தெறிந்திருக்கிறார்கள் Paytm நிறுவனத்தினர்.

கல்வி நிலையங்கள் மற்றும் சேவை வழங்கும் ஒரு சிலர் மக்களிடம் செய்யும் பணப் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கிறார்கள். அது போன்ற சமயங்களில் க்ரெடிட் கார்டில் பணப் பரிமாற்றங்களை மேற்கொள்வதற்கு பதில் டெபிட் கார்ட்களையோ அல்லது யூபிஐ முறையிலோ பணப் பரிவர்த்தனைகளை மேற் கொண்டு கட்டணங்களில் இருந்து தப்பிக்கலாம் என வழியும் சொல்லி இருக்கிறார்கள்.
இந்தியாவின் மிகப் பெரிய இ வேலட் என்றால் அது Paytm தான் என அடித்துச் சொல்லலாம். ஒரு மாதத்தில் சுமார் 400 மில்லியன் (40 கோடி) பணப் பரிவர்த்தனைகளை Paytm தனியாக கையாள்கிறதாம். Paytm-க்கு அடுத்து இந்தியாவில் இரண்டாவது பெரிய இ வேலட்டாக இருக்கும் நிறுவனமே சுமார் 8 கோடி பணப் பரிவர்த்தனைகளைத் தான் கையாள்கிறதாம். ஆக இந்தியாவின் நம்பர் ஒன் இ வேலட்டுக்கும், நம்பர் டூ இ வேலட்டுக்குமான இடைவெளி சுமார் 5 மடங்கு என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.
இந்தியாவில் ஐஆர்சிடிசி தொடங்கி உபர், சொமேட்டோ, ஓயோ, க்ரோஃபர்ஸ், பிக் பாஸ்கட், பி வி ஆர் சினிமா, க்ளப் ஃபேக்டரி, டோமினோஸ், ஜியோ என பல ஆன்லைன் வியாபாரிகள் Paytm வழியாக தங்களுக்கான பேமெண்டை வாங்கிக் கொள்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications