OPEC தீர்மானத்தில் அமெரிக்க எதிர்ப்பு! ஏதாவது பண்ணுங்க மோடிஜி எல்லா கெரகமும் இந்தியாக்கு தானா!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வியன்னா, ஆஸ்திரியா: மார்ச் 2020 வரை கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்துக் கொள்ள OPEC நாடுகள் சம்மதித்திருக்கிறது. இது தான் தற்போது நம்மை (இந்தியாவை) அதிர வைக்கும் செய்தி.

OPEC நாடுகள் தங்களுக்குள் இருந்த வேறுபாடுகள், மதம் சார்ந்த பிரச்னைகளை எல்லாம் மறந்து, கச்சா எண்ணெய் வியாபாரத்தில் மீண்டும் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள்.

மோசமான உலக பொருளாதார சூழலில், உற்பத்தி செய்யும் கச்சா எண்ணெய் விலையை நிலையாக வைக்க தங்கள் உற்பத்தியைக் குறைத்துக் கொள்ள ஒரு மனதோடு சம்மதம் சொல்லி இருக்கிறார்கள் opec உறுப்பு நாடுகள். OPEC தீர்மானத்தால் என்ன பிரச்னை..?

என்ன பார்க்கப் போகிறோம்

என்ன பார்க்கப் போகிறோம்

மூன்று முக்கியப் பிரச்னைகள் இருக்கின்றன.

1. OPEC எண்ணெய் உற்பத்தியாளர்கள் என்ன நினைக்கிறார்கள். ஏன் இவ்வளவு சிரமப்பட்டு OPEC வழியாக உற்பத்தியைக் குறைக்கிறார்கள்..?
2. OPEC தன் உற்பத்தியை குறைத்துக் கொண்டால் அமெரிக்காவுக்கு ஏன் வலி எடுக்கிறது..?
3. OPEC உற்பத்தி குறைவால் இந்திய பொருளாதாரத்தில் என்ன மாதிரியான பிரச்னைகள் ஏற்படும்..? வாங்க ஒவ்வொரு கேஸா பாக்கலாம்.

1. OPEC நாடுகள் எண்ணம்

1. OPEC நாடுகள் எண்ணம்

ஒரு பொருளை உற்பத்தி செய்பவருக்கு, தன் பொருள் அதிக விலைக்கு விற்று நல்ல லாபம் வர வேண்டும் என்று தானே நினைப்பார்கள். அதைத் தான் OPEC நாடுகளும் நினைக்கிறது. 1980-கள் வரை எண்ணெய் என்றால் OPEC மட்டும் தான். அவர்கள் நினைத்த படிக்கு அவர்களால் தங்கள் எண்ணெய் உற்பத்திக்கு விலை நிர்ணயிக்க முடிந்தது. எந்த நாடும், எந்த அமைப்பும் கேள்வி கேட்க முடியவில்லை. OPEC மனது வைக்கவில்லை என்றால் அரசு காலி தான் என இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற பெரிய நாட்டு ஆட்சியாளர்களே நடுங்கினார்கள். ஆனால் இன்று நிலைமை தலைகீழ்.

1.1 திடீர் வீழ்ச்சி

1.1 திடீர் வீழ்ச்சி

2000 - 2008 வரை பெரும்பாலான உலக நாடுகள் பொருளாதார வளர்ச்சி வெறியில் இருந்தன. அதில் சீனா உலகின் உற்பத்திக் கிண்ணமாக உருவெடுத்துக் கொண்டிருந்தது. ஆகியால் எண்ணெய் தேவை, வானைத் தொட்டது. இந்த தேவையை காரணம் காட்டி OPEC வாழ்ந்து வந்தது. எல்லாம் நன்றாக போய்க் கொண்டிருந்த போது, 2008-ல் சர்வதேச அளவில் பங்குச் சந்தை சரிவு. பல ட்ரில்லியன் டாலர் மதிப்பிலான பணம் காணாமல் போனது. பல நாடுகள் கச்சா எண்ணெய் வாங்குவதை குறைத்துக் கொண்டார்கள். வாங்க நினைத்தாலும் அரசாங்கங்களிடம் காசு இல்லை. துடித்துப் போனது OPEC. அன்று தான் தங்களுக்கும் சங்கு ஊத உலகப் பொருளாதாரத்தால் முடியும் என பயப்படத் தொடங்கினார்கள்.

1.2 அமெரிக்கா

1.2 அமெரிக்கா

அமெரிக்கா உலகின் மிகப் பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதியாளர். இவர்கள் கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து, கச்சா எண்ணெய் தயாரிப்பு வேலைகளில் மும்முரமாக இறங்கியது. ஷேல் கேஸ் (Shale Gas) என ஒரு புது ஐட்டத்தை இறக்கியது. எண்ணெய் அரசியலில் நேரடியாக குதித்து எண்ணெய் குட்டையை குழப்பிக் கொண்டிருக்கிறது அமெரிக்கா. அதுவரை உலகின் மிகப் பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தியாளர் என்றால் அது சவுதி அரேபியாவும், ரஷ்யாவும் தான். ஆனால் அமெரிக்க அடுத்த சில வருடங்களில் அசால்டாக முதல் இடத்தை பிடித்து உலகின் நம்பர் 1 கச்சா எண்ணெய் உற்பத்தியாளரானது. இத்தனைக்கும் OPEC அமைப்பில் அமெரிக்கா ஒரு உறுப்பு நாடு கிடையாது. இப்போது OPEC நாடுகளுக்கு சப்த நாடியும் அடங்கிவிட்டது. ஆக அதுவரை கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து கொண்டிருந்த அமெரிக்கா, இப்போது தானே உற்பத்தி செய்து கொண்டு ஏற்றுமதியும் செய்யத் தொடங்கியதால், எண்ணெய் உலகில் ஏகப்பட்ட உற்பத்தி. அதனால் விலை வீழ்ச்சியடைந்தது.

1.3 ஆதிக்கம்

1.3 ஆதிக்கம்

1980-களில் தான் வைத்தது தான் சட்டம் என எப்படி இருக்க முடிந்தது..? கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள், உலக நாடுகளுக்கு தேவையான உற்பத்தியைச் செய்யவில்லை. அதாவது 100 லிட்டர் கச்சா எண்ணெய் உலகுக்கு தேவை என்றால் 95 லிட்டர் தான் தயாரித்தார்கள். அதனால் "என்ன தம்பி எண்ணெய் வேணும்னா நாங்க சொல்றத கேளு, இல்லையா கெளம்புங்க" என அதிகாரம் செய்து இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற உலக நாடுகளையே லொட்டாங்கையால் அடித்து விரட்டி அதிர வைத்தது. இதற்கு யோம் கி பார் (Yom kippur War) யுத்தமும், யுத்தத்தைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை ஏற்றங்களுமே சாட்சி.

1.4 அதிக உற்பத்தி

1.4 அதிக உற்பத்தி

அப்படி கொடிகட்டிப் பறந்தவர்கள் இப்போது ஏன் தள்ளாடுகிறார்கள்..?  இப்போது உலகுக்கு 90 லிட்டர் தான் கச்சா எண்ணெய் தேவை இருக்கிறது. ஆனால் OPEC நாடுகள் + OPEC அல்லாத மற்ற எண்ணெய் உற்பத்தி நாடுகள் எல்லாம் சேர்ந்து 110 லிட்டர் கச்சா எண்ணெய் தயாரிக்கிறார்கள். அதனால் தான் விலை நிலையாக இல்லாமல் அதிக ஏற்ற இறக்கங்களுடன் இருக்கிறது. OPEC நாடுகளும் தங்கள் வியாபாரத்தை ஸ்திரப்படுத்த தடுமாறிக் கொண்டிருக்கிறது.

1.5 OPEC அல்லாத நாடுகள் உற்பத்தி

1.5 OPEC அல்லாத நாடுகள் உற்பத்தி

இன்னும் விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால், உலகத்துக்கு தேவையான கச்சா எண்ணெய்யில் 44 சதவிகிதத்தைத் தான் OPEC சப்ளை செய்கிறார்கள். மீதமுள்ள 56 சதவிகிதத்தை OPEC அல்லாத நாடுகளான ரஷ்யா, அமெரிக்கா என பல நாடுகள் உற்பத்தி செய்து கொள்கிறார்கள். அதனால் தான் விலையை நிலையாக வைத்துக் கொள்ள OPEC நாடுகள் தங்கள் உற்பத்தியை மேலும் மேலும் குறைத்தாலும், மற்ற நாடுகள் தங்கள் உற்பத்தியை அதிகப்படுத்தி விலையை ஏற்ற விடாமல் செய்து விடுகிறது.

1.6 புதுப்பிக்கத் தக்க ஆற்றல்

1.6 புதுப்பிக்கத் தக்க ஆற்றல்

கச்சா எண்ண்ணெய் விலை ஏறாததற்கு அதிக உற்பத்தி மட்டும் தான் காரணமா..? இல்லை. 2000-ம் ஆண்டுக்குப் பிறகு, உலகம் முழுவதும் எரிசக்தி தேவைக்கு கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, நிலக்கரி போன்ற இயற்கை வளங்களுக்கு பதிலாக புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பற்றிய விழிப்புணர்வு அதிகமானது. விளைவு ஐஸ்லாந்து, பராகுவே, கொஸ்டாரிகா, நார்வே போன்ற தேசங்கள் இன்று 90 சதவிகிதத்துக்கு மேல் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை  பயன்படுத்துகிறார்கள். அவ்வளவு ஏன் பெரிய நிலபரப்புகளைக் கொண்ட பிரேசில் தன் மொத்த எரிசக்தி தேவையில் 75%-த்தை புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் இருந்து பெறுகிறது. சீனா தன் மொத்த எரிசக்தி தேவையில் சுமார் 25%-த்தை புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் இருந்து பெறுகிறது. இப்படி எரிசக்தியில் கொஞ்சம் கொஞ்சமா தன்னிறைவு பெறும் போது கச்சா எண்ணெய் தேவை குறையத் தானே செய்யும். OPEC நாடுகளுக்கான வியாபாரம் சரியத் தானே செய்யும். அது தான் லைவ்வாக நடந்து கொண்டிருக்கிறது.

1.7 தீர்வு

1.7 தீர்வு

மேலே சொன்ன எல்லா பிரச்னைகளையும் சமாளித்து தங்கள் கச்சா எண்ணெய் விலை ஏற்ற, OPEC நாடுகள் தன், வியாபாரத்தை காப்பாற்றிக் கொள்ள ரஷ்யா உடனும் பேசி இருக்கிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும், OPEC நாடுகளுக்கு உதவ முன் வந்திருக்கிறார். ரஷ்யா தன் கச்சா எண்ணெய் உற்பத்தியில் நாள் ஒன்றுக்கு 1.2 மில்லியன் பேரல்களைக் குறைத்துக் கொள்ள சம்மதித்திருக்கிறார். இந்த உற்பத்திக் குறைவை வரும் டிசம்பர் 2019 அல்லது மார்ச் 2020 வரை கடை பிடிக்கவும் சம்மதித்திருக்கிறார்கள். ஆக இனியாவது கச்சா எண்ணெய் விலை நிலை பெறும், எடுக்கும் எண்ணெய்க்கு நல்ல விலை கிடைக்கும் என கதறிக் காத்திருக்கிறார்கள் OPEC நாடுகள். யாரோ சொன்னது நினைவுக்கு வருகிறது "21-ம் நூற்றாண்டின் மிகப் பெரிய பிரச்னை தண்ணீர் தான், எரிசக்தி கிடையாது" எனச் சொல்லி இருந்தார்கள். அது சரி தான் போல. இருக்கும் எண்ணெய்யையாவது சண்டை சச்சரவு இல்லாமல் வியாபாரம் பார்க்க ஆசைப்படுகிறார்கள் opec நாடுகள். அதனால் தான் அமெரிக்காவையே எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றி, அனைவரும் ஒன்றுபட்டு செயல்படுகிறார்கள். சரி அவர்கள் கதறலை விடுங்கள், அடுத்த அமெரிக்க பிரச்னையைப் பார்ப்போம்.

2. அமெரிக்க கோபம்

2. அமெரிக்க கோபம்

OPEC நாடுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து தங்கள் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்கப் போகும் விஷயத்தை கேள்விப் பட்டால் டரம்புக்கு கோபம் உச்சத்தை தொடும். காரணம் இதே ட்ரம்ப் தான் OPEC நாடுகளின் தலைவர் பதவியில் இருக்கும் சவுதி அரேபியாவிடம் பேசி நிறைய எண்ணெய்யை உற்பத்தி செய்யச் சொன்னார். அதோடு ஈரானுக்கு எதிராக சவுதிக்கு அமெரிக்க ராணுவ உதவிகள் வேண்டுமென்றால் நிறைய கச்சா எண்ணெய் உற்பத்தி செய்ய வேண்டும் என வெளிப்படையாக மிரட்டினார். ஏன் அமெரிக்கா இவ்வளவு கடுமையாக உற்பத்தியை பெருக்கச் சொல்கிறார்கள்..?

2.1 ஏன் உற்பத்தி பெருக்கம்

2.1 ஏன் உற்பத்தி பெருக்கம்

தற்போது சந்தையில் 100 லிட்டர் கச்சா எண்ணெய் தேவை. ஈரான் மற்றும் வெனிசுலா நாடுகள் இந்த 100 லிட்டரில் 6 லிட்டர் எண்ணெய் தயாரிக்கிறது என வைத்துக் கொள்வோம். இப்போது அமெரிக்காவின் பொருளாதாரத் தடையின் படி இந்த இரண்டு நாடுகளிடமும் கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என்றால் என்ன ஆகும்..? 100 லிட்டர் தேவை இருக்கும் போதும் அனைவரும் இந்த 94 லிட்டர் எண்ணெய்க்கு அடித்துக் கொள்ள வேண்டும். இதனால் மற்ற எண்ணெய் வள நாடுகள் தயாரிக்கும் கச்சா எண்ணெய் விலை ஏறும். சரியா..? ஆனால் நடக்கவில்லையே.. ஏன்..? இங்கு தான் அமெரிக்கா தலையிட்டு சவுதி அரேபியாவை அதிகம் எண்ணெய் ய்ற்பத்தி செய்யச் சொல்லி மிரட்டுகிறார்கள். அதனால் தான் இது நாள் வரை கச்சா எண்ணெய் பெரிய விலை மாற்றம் காணாமல் இருக்கிறது.

2.2 விலை ஏறினால் அமெரிக்காவுக்கு என்ன

2.2 விலை ஏறினால் அமெரிக்காவுக்கு என்ன

ஈரான் மற்றும் வெனிசுலா நாடுகள் மீது பொருளாதாரத் தடை விதித்து கச்சா எண்ணெய் வாங்க விடாமல் செய்தது யார்..? அமெரிக்கா. இந்த பொருளாதாரத் தடையை ஏறக்குறைய எல்லா உலக நாடுகளும் ஏற்றுக் கொண்டது. ஆனால் சில நாடுகளுக்கு இன்னமும் ஈரானின் கச்சா எண்ணெய் அதி அவசியமாக இருக்கிறது. உதாரணம் இந்தியா மற்றும் சீனா. இந்த நேரம் பார்த்து OPEC நாடுகள் தன் உற்பத்தியை குறைத்தால் மேலே சொன்னது போல விலை ஏறும், விலை ஏறினால் "என்னங்க உங்கள நம்பி உங்க பொருளாதார தடைக்கு ஓகே சொன்னா இப்ப எங்களுக்கு தேவையான கச்சா எண்ணெய் விலை கொடூரமா ஏறுதே" என ட்ரம்பிடம் தான் முறையிடுவார்கள்.

2.3 பொருளாதார தடை பிசுபிசுத்துவிடும்

2.3 பொருளாதார தடை பிசுபிசுத்துவிடும்

ஓரளவுக்கு மேல் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தால், எப்படியாவது கச்சா எண்ணெய் வந்தால் போதும் என்று ஈரானின் பழைய வாடிக்கையாளர்கள் நினைப்பார்கள். ஆக ஈரானிடமிருந்து சீனா, இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகள் கச்சா எண்ணெய் வாங்குகிற நிலை ஏற்பட்டால் மீண்டும் வர்த்தகப் போர் வெர்சன் 2.0 நடத்த வேண்டி இருக்கும். ஏற்கனவே அமெரிக்க சீன வர்த்தகப் போர் நடந்து கொண்டிருக்கும் போதே, அமெரிக்க பொருளாதார தடையை மீறி, மே 2019-ல் 585 மில்லியன் டாலர் மதிப்புக்கு ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி இருக்கிறது சீனா. ஆக "நீ என்ன அடிச்சா நானும் உன்ன அடிப்பேன்" என்கிற பாங்கை அமெரிக்கா போன்ற பெரிய தாதா மேல் கை வைத்தே உலகுக்கு உரக்கச் சொல்லிக் கொண்டிருக்கிறது சீனா. சந்தர்ப்ப சூழ்நிலையால் அமெரிக்காவும் தலையிட முடியாமல் சீனாவிடம் அடி வாங்கிக் கொண்டிருக்கிறது.

2.4 இந்திய தரப்பு

2.4 இந்திய தரப்பு

வளர்ந்து வரும் சந்தையான சீனா மற்றும் இந்தியாவை, அத்தனை பகிரங்கமாக, ஒரே நேரத்தில் பகைத்துக் கொள்ள முடியாது. ஏற்கனவே சீனா மீது அமெரிக்கா விதித்த இறக்குமதி வரிக்கு, பதிலடி கொடுக்கும் விதத்தில், சீனாவும் அமெரிக்க பொருட்கள் மீது வரி விதித்து, உலகத்துக்கு அமெரிக்கா மீதிருந்த பயத்தை குறைத்துவிட்டது. அதோடு ஏகப்பட்ட அமெரிக்க நிறுவனங்களுக்கு வியாபாரம் நஷ்டம். ஏற்கனவே இந்தியா தரப்பு ஈரானிடம் எண்ணெய் வாங்க, அமெரிக்காவிடம் நச்சரித்துக் கொண்டிருக்கிறது. "அமெரிக்க உள் துறை அமைச்சர் இந்தியாவின் எண்ணெய் தேவையை புரிந்து கொண்டிருக்கிறார" என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சில தினங்களுக்கு முன் பேட்டி கொடுத்திருந்தார். ஆக இந்தியாவின் தேவையை புரிந்து கொண்டு வழி விட வேண்டும் அல்லது கச்சா எண்ணெய் விலையை கட்டுப்படுத்தி, இந்தியாவின் வாயை மூட வேண்டும். இல்லை என்றால், இந்தியாவும் சீன போல ஈரானிடம் எண்ணெய்க்கு ஆர்டர் கொடுக்கும். அது அமெரிக்காவின் பெயரைக் கெடுக்கும். அதனால் தான் ஈரான் மீதான பொருளாதாரத் தடையை வெற்றி பெற வைக்க, கச்சா எண்ணெய் விலை அதிகரிக்க விடாமல் உசுரைக் கொடுத்து தடுக்கிறது அமெரிக்கா.

2.5 கெத்து போயிரும்

2.5 கெத்து போயிரும்

அது போக, அமெரிக்காவின் பெரியண்ணன் இமேஜ் காலியாகிவிடும். நாளை ஏதாவது தடை, உலக ஒப்பந்தம் எனச் சொன்னால் கூட “ஈரான் மீதான பொருளாதாரத் தடைய கூட ஒழுங்க செயல்படுத்த முடியல அப்புறம் என்ன புதுசா” என அமெரிக்காவை அலட்சியப்படுத்தி விட்டு கடப்பதற்கும் பெரிய வாய்ப்பு உண்டு. அதனால் தான் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கக் கூடாது என துடிக்கிறது அமெரிக்கா.  “பாத்தியா நான் தான் ஈரான், வெனிசுலா தடை போட்டேன். ஆனா சகாய விலைக்கு கச்சா எண்ணெய்க்கு வழி பண்ணிட்டேன் பாத்தியா” என சொல்ல விரும்புகிறது அமெரிக்கா. என் ஒருவனையே நம்பு நான் உன்ன காப்பாற்றுகிறேன் "மாம் ஏகம் சரணம் வ்ரஜ" என தைரியமாக சொல்லி ஒரு சர்வதேச சம்பவத்தை கூட நடத்த விரும்புகிறது அமெரிக்கா. இப்படி பல்வேறு இமேஜ் பிரச்னை, கெத்து பிரச்னை, எண்ணெய் அரசியலில் வலுவான பிடி நழுவல், இந்தியா சீனா உடனான உறவு நிலைக்க வைப்பது போன்ற ட்கட்டாயத் தேவைகள் இருப்பதால் தான் கச்சா எண்ணெய் விலை உயரக் கூடாது என்பதில் மிகத் தெ...ளி...வாக இருக்கிறது அமெரிக்கா.

3. இந்தியாவுக்கு என்ன பிரச்னை

3. இந்தியாவுக்கு என்ன பிரச்னை

OPEC உறுப்பு நாடுகளில் இருந்து தான் இந்தியாவுக்கு தேவையான பெரும்பகுதி கச்சா எண்ணெய் வருகிறது. ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை கடந்த ஜனவரி 2019-ல் 45 டாலராக இருந்தது. இப்போது அதே ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை சுமார் 59 டாலராக வர்த்தகமாகி வருகிறது. ஆக கடந்த ஆறு மாதங்களில் கச்சா எண்ணெய் விலை சுமார் 30 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. கடந்த நவம்பர் 2018-ல் தான் ஈரான் மீதும், ஜனவரி 2019-ல் வெனிசுலா மீதும் பொருளாதார தடை விதித்தது அமெரிக்கா. ஆக ஈரான் மற்றும் வெனிசுலா நாட்டின் மீது, பொருளாதார தடை விதித்த பின் தான் இந்தியா கூடுதல் விலை கொடுத்து தன் கச்சா எண்ணெய்யை வாங்க வேண்டி இருக்கிறது.

3.1 நிதிப் பற்றாக்குறை

3.1 நிதிப் பற்றாக்குறை

கடந்த ஜனவரி 2019-ல் ஒரு பேரல் கச்சா எண்ணெய்க்கு (45 * 70)= 3,150 ரூபாய் கொடுத்தது. ஆனால் இப்போது அதே ஒரு பேரல் கச்சா எண்ணெய்க்கு (59 * 70) = 4,130 ரூபாய் கொடுக்க வேண்டி இருக்கிறது. அதோடு இந்தியாவின் நடப்புக் கணக்கு பற்றாக்குறையும் அதிகரிக்கும். அரசு கூடுதல் விலை கொடுத்து வாங்கும் கச்சா எண்ணெய்க்கான காசையும் மக்களிடமிருந்து தான் வசூலிப்பார்கள். பெட்ரோல், டீசல் விலை உயரும். தேர்தல் தான் முடிந்துவிட்டதே...! அரசும் தன்னால் கச்சா எண்ணெய் விலை சுமையை தாங்க முடியாமல் மக்கள் பக்கம் மடை மாற்றிவிடும். விலை வாசி விண்ணைத் தொடும்.

3.2 இவர்கள் தான் கதி

3.2 இவர்கள் தான் கதி

இந்தியாவுக்கு அருகில் இருக்கும் OPEC நாடுகள் என்றால் ஈரான், ஈராக், குவைத், ஐக்கிய அரபு நாடுகள், சவுதி அரேபியா போன்ற எண்ணெய் வள நாடுகள் தான். இப்போது இந்த OPEC உறுப்பு நாடுகள் அனைவருமே தங்கள் தீர்மானப்படி உற்பத்தியைப் பெருக்கவில்லை என்றால், போட்டி போட்டுக் கொண்டு விலை ஏறும். இந்தியாவுக்கு நில அமைப்புப் படி மத்திய கிழக்காசிய நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தான் போக்குவரத்து செலவுகளைக் குறைக்கும். ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து வாங்க வேண்டும் என்றால் போக்குவரத்துச் செலவுகளால் விலை இன்னும் அதிகரிக்கும்.

பெட்ரோல் விலை

பெட்ரோல் விலை

ஆக OPEC-ன் தீர்மானம் நேரடியாக இந்தியா எதிர் கொள்ள வேண்டிய மிகப் பெரிய சவால். ஏற்கனவே இந்தியாவில் வர்த்தகப் பற்றாக்குறை மற்றும் நிதிப் பற்றாக்குறை தலை விரித்தாடிக் கொண்டிருக்கும் போது, இப்படி OPEC நாடுகளும் சேர்ந்து விலை ஏற்ற முயற்சித்தால் முதல் பலி ஆடு இந்தியா தான். மோடிஜி என்னத்தையாவது பண்ணி நம்ம எண்ணெய்க்கு பங்கம் வராம பாத்துக்குங்க. திரும்ப பெட்ரோல் விலை 80 ரூபாய தொட்டுட போவுது..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

opec production cut against usa will hit india badly

opec production cut against usa will hit india badly. India has to pay more to get their crude oil from other countries
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X