டெல்லி: நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டுவருவதே தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் முக்கிய குறிக்கோளாகும். பொருளாதார வளர்ச்சிக்கான அனைத்து சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து அதற்கான அனைத்து அம்சங்களையும் கொண்டதாகவே ஜூலை 5ஆம் தேதி தாக்கல் செய்யும் பட்ஜெட்டும் இருக்கும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ராஜ்யசபாவில் தெரிவித்துள்ளார்.
பொருளாதார வளர்ச்சி கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவில் 2018ஆம் ஆண்டில் 6.8 சதவிகிதமாக சரியக் காரணமே மழை அளவு குறைந்ததால் தான். இதனால் விவசாய உற்பத்தியும் சரிந்து, வர்த்தகமும் பாதிப்புக்குள்ளானது, போக்குவரத்து, தகவல் தொடர்புத்துறையோடு சேவைத் துறையும் கடும் பாதிப்புக்குள்ளானதே என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் முட்டுக்கட்டையாக இருப்பதே இந்த கருப்புப்பணமும், மிதமிஞ்சிய கள்ளநோட்டுக்களின் புழக்கமும், அதனோடு தொடர்புடைய கள்ளப்பொருளாதாரமுமே என்றும், உண்மையான பொருளாதார வளர்ச்சியின் அனைத்து ஆதார வளங்களையும் இவை எடுத்துக்கொள்வதால் தான், ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியும் சவலைப் பிள்ளையாக உட்கார்ந்திருப்பதாக சில அறிவு ஜீவிகள் மத்திய அரசுக்கு அறிவுறை சொல்லி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை ஒழிக்க ஐடியா கொடுத்தார்கள்.
மோடியும் அறிவு ஜீவிகள் சொன்னதை நம்பி, கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி இரவில், 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்து, அதற்கு பதிலாக புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்களை பெற்றுக்கொள்ளலாம் என்று அதிரடியாக உத்தரவிட்டார். அதோடு பொதுமக்கள் அனைவரும் கூடுமானவரையில் ரொக்கப் பரிமாற்றத்தை குறைத்து அதிக அளவில் மின்னணு பரிவர்த்தனை என்னும் டிஜிட்டல் பரிவர்த்தனைக்களை மேற்கொள்ளவேண்டும் என்றும் அறிவுரை கூறினார். பொதுமக்களும் மோடியின் அறிவுரையை கேட்டு ரொக்கப் பரிவர்த்தனையை குறைத்து டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு தங்களை மாற்றிக்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், வாட் வரி முறையை ஒழித்துவிட்டு, மற்ற நாடுகளைப்போல், ஒரே வரி முறையைக் கொண்டுவந்தால், நாடு சுபிட்ஷம் ஆகும் என்று சொல்லி, கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலையில் சரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜிஎஸ்டி வரி முறையும் அமல்படுத்தப்பட்டது. இதனால் பொருளாதாரம் மேலும் வளர்ச்சி காணும் என்றும் விலைவாசி குறையும், பணவீக்கம் கட்டுக்குள் இருக்கும் என்றும் அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்தனர்.
ஆனால் பொதுமக்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக ஜிஎஸ்டி வரிமுறை அமல்படுத்தப்பட்டதால், நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டன. இதற்கு முக்கியமாக ஜிஎஸ்டி வரிமுறையால் மூலப்பொருட்களின் விலை ஏற்றத்தால் உற்பத்தி பாதிக்கப்படுகிறது என்பதால் வேறு வழியில்லாமல் நிறுவனங்களை மூடிவிட்டதாக தொழில் துறையினர் சோக கீதம் பாடினர்.
செல்லாத நோட்டு அறிவிப்பு மற்றும் ஜிஎஸ்டி வரிமுறை அமல்படுத்தப்பட்ட ஆண்டுகளான 2016-17 மற்றும் 2017-18 ஆம் ஆண்டுகளில் ஜிடிபி (GDP) 7.1 மற்றும் 6.7 சதவிகிதமாகவே இருந்தது. ஆனால் செல்லாத நோட்டு அறிவிப்புக்கு முந்தையா ஆண்டுகளான 2014-15 மற்றும் 2015-16ஆம் ஆண்டுகளில் ஜிடிபி (GDP) முறையே 7.2 மற்றும் 7.3 சதவிகிதமாகவும் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் 2018-19ஆம் ஆண்டில் ஜிடிபி விகிதம் 6.8 சதவிகிதமாக குப்புறடித்து கவிழ்ந்துவிட்டது. இது செல்லாத நோட்டு அறிவிப்பு மற்றும் ஜிஎஸ்டி வரி முறை ஆகியவற்றின் தோல்வியையே காட்டுகிறது. மத்திய அரசும் இதை நன்கு உணர்ந்தே தற்போது ஜிடிபி (GDP)யை ஊக்குவிக்கும் விதமாக ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தற்போது, மோடியின் இரண்டாவது இன்னிங்சில் நிதியமைச்சராக பொறப்பேற்றுள்ள நிர்மலா சீதாராமன் வரும் ஜூலை 5ஆம் தேதியன்று நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யவிருக்கிறார், இந்நிலையில் ,ராஜ்ய சபாவில் கேள்விகளுக்கு பதிலளிக்கையில், தேசிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் முக்கிய நோக்கமே பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதே. அதற்கான அனைத்து ஆக்கப்பூர்வ திட்டங்களை உள்ளடக்கிய பட்ஜெட் இருக்கும் என்று பதிலளித்தார்
இதன் முதற்கட்டமாக, கடந்த பிப்ரவரி மாதத்தில் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் குறைந்த பட்ச ஊதியத்தை உறுதி செய்யும் வகையில் அவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.6000 வழங்கும் பிஎம்-கிஷான் (PM-KISSAN) திட்டத்தை கொண்டு வந்தது. தற்போது இத்திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் உள்ள சுமார் 14 கோடி விவசாயிகள் பயனடைவதோடு, விவசாய உற்பத்திக்கும் வழி வகுக்கும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
அடுத்ததாக பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும், முதலீடுகளை குவிக்கவும் மோடி தலைமையில் 5 நபர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, நாட்டிலுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் முந்தைய வளர்ச்சி மற்றும் அதை மேலும் அதிகரிப்பதற்காகவே ஜிஎஸ்டி வரிமுறை அமல்படுத்தப்பட்டது. அதோடு அந்நிய முதலீடுகளை அதிக அளவில் கொண்டுவருவதற்காகவே முதலீட்டுக் கொள்கையும் தளர்த்தப்பட்டது என்று நிர்மலா சீதாராமன் ராஜ்யசபாவில் தெரிவித்தார்.