டெல்லி :, ஒரு புறம் அமெரிக்கா ஈரான் பிரச்சனையால், உலக அளவில் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்றே கூறலாம். அதிலும் குறிப்பாக இந்தியா அதிகளவில் பாதிக்கப்படுகிறது எனலாம். எப்படி என்று கேட்கிறீர்களா?
அதற்கு முழுக்க முழுக்க காரணம் கச்சா எண்ணெய் தான். ஒரு புறம் கச்சா எண்ணெய் இறக்குமதியை, ஈரானிடம் நிறுத்தி விட்டு மற்ற நாடுகளிடம் கையேந்தி நிற்பதும் ஒரு காரணமே.
என்னதான் மற்ற நாடுகள் இந்தியாவுக்கு இறக்குமதி செய்து வந்தாலும், ஈரான் இந்திய ரூபாயின் மதிப்பிலேயே இறக்குமதி செய்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதிகரித்துள்ள மொத்த விலை குறியீடு விகிதம்?
இதனாலேயே மொத்த விலை குறியீடு விகிதம் அதிகரித்துள்ளதாக "Economic survey"யில் பொருளாதார நிபுனர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் கூறியுள்ளார். எரிபொருள் மற்றும் பவர் துறையை அடிப்படையாக கொண்டு கணிக்கப்பட்ட, மத்திய எரிசக்தி துறையையும் அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்பட்ட மொத்த விலைக் குறியீடு கடந்த 2018 - 2019ம் நிதியாண்டில் அதிகரித்துள்ளதுதாகவும், குறிப்பாக 11.5 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார். இது முன்னர் கடந்த 2017 - 2018ம் நிதியாண்டில் இது 8.1 சதவிகிதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
விலை அதிகரிப்பால் அதிகரிக்கும் பணவீக்கம்?
ஒரு நாட்டின் மொத்த விலைக் குறியீடு அதிகரிக்கும் போது மொத்த பணவீக்கமும் அதிகரிக்கும் என்றும் கூறுவார்கள். அதாவது கச்சா எண்ணெய் வாங்கும் போது அதிக விலை கொடுத்து வாங்கும் போதும் சரி, இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை, உள்நாட்டில் விற்பனை விலையும் அதிகரிக்கும் பட்சத்தில் சொல்லவே வேண்டாம். இன்னும் பணவீக்கம் அதிகரிக்க தானே செய்யும்.
இறக்குமதி அதிகரிக்கும்?
இதனால் பணவீக்கம் என்பது அதிகரிக்கும். உலக அளவில் கச்சா எண்ணெய் அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்த நிலையில் இந்தியா நடப்பு 2019 - 2020ம் நிதியாண்டில் நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவினம் 11,270 கோடி டாலராக அதிகரிக்கும் என மத்திய பெட்ரோலிய அமைச்சகம் மதிப்பீடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தேவையும் அதிகரித்து வருகிறது?
இந்தியாவில் நாளுக்கு நாள் கச்சா எண்ணெய் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வரும் இந்த நிலையில், தொடர்ந்து அதற்கான தேவையும் மிக அதிகமாகவே அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் மொத்த கச்சா எண்ணெய் தேவையில் 80 சதவிகிதம் இறக்குமதி வாயிலாகவே பூர்த்தி செய்யப்படுகிறது. இது இன்னும் இறக்குமதி அதிகரிக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
மத்திய அரசு இறக்குமதியை குறைக்க திட்டம்?
இந்த நிலையில், 2022-ஆம் ஆண்டிற்குள் நாட்டின் மொத்த எண்ணெய் தேவையில் இறக்குமதியின் பங்கை 67 சதவிகிதமாக குறைக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது. எனினும் அதே சமயம் இந்த இறக்குமதி குறைப்பு என்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்றும், அடுத்த 3 ஆண்டுகளில் இறக்குமதியை 67 சதவிகிதமாக குறைப்பது பெரும் சவாலாக இருக்கும் நிபுனர்கள் கூறுகின்றனர்.
எண்ணெய் இறக்குமதி தொடர் அதிகரிப்பு?
ஏனெனில் இந்தியாவில் கடந்த 2018 - 2019ம் நிதியாண்டில் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான தேவை 83.7 சதவிகிதமாக உயர்ந்து காணப்பட்டது. இது கடந்த 2014 - 2015-ம் நிதியாண்டில் நமது மொத்த எண்ணெய் தேவைப்பாட்டில் இறக்குமதியின் பங்கு 78.3 சதவிகி அளவிற்கே இருந்தது குறிப்பிடத்தக்கது. இது கடந்த 2015 - 2016ம் நிதியாண்டில் 80.6 சதவிகிதமாக உயர்ந்தது. இதுவே கடந்த 2016 -2017ம் நிதியாண்டில் 81.7 சதவிகிதமாகவும், 2017 - 2018ம் நிதியாண்டில் 82.9 சதவிகிதமாகவும், இதுவே கடந்த நிதியாண்டில் கிட்டதட்ட 84 சதவிகிதமாகவும் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டிலும் உற்பத்தி குறைந்தது?
உள் நாட்டிலும் கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த ஆண்டில், உள்நாட்டில் எண்ணெய் உற்பத்தி 3.42 கோடி டன்னாக இருந்தது. இது முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடும்போது இது 4 சதவிகிதம் குறைவு தான். இதற்கு காரணம் ஓ.என்.ஜி.சி. மற்றும் ஆயில் இந்தியா போன்ற நிறுவனங்களின் எண்ணெய் உற்பத்தி குறைந்ததே என்றும் கூறப்படுகிறது.
மாற்று வழியை கையாள வேண்டும்?
இந்த நிலையில் இறக்குமதி அதிகரிக்கும் போதும், அதிலும் சர்வதேச அளவில் விலை அதிகரிக்கும் போது,அது இந்தியாவையும் பாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஒன்று எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து, இறக்குமதியை குறைக்க வேண்டும், அல்லது எண்ணெய்க்கு மாற்றாக எலக்ட்ரிக் வாகனங்களை அதிகரிக்க வேண்டும். இது தான் இதற்கு சிறந்த வழியாக இருக்கும் என்றும் பொருளாதார நிபுனர்கள் தங்களது கருத்துகளை முன் வைக்கின்றனர்.