டெல்லி: இன்று தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டில் அதிக அளவில் வருமான வரிச்சலுகை அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், பெரும்பாலான மாதச்சம்பளதாரர்கள் அடிப்படை வரிவிலக்கு உச்சவரம்பை உயர்த்தவேண்டும் என்றும் நிறுவனங்கள் நிறுவனவரி குறைக்கப்படாது என்றும் கருத்து தெரிவித்திருப்பதாக ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.
பட்ஜெட்டுக்கு முன்பான சர்வே ஒன்றை கேபிஎம்ஜி நிறுவனம் நடத்தியுள்ளது. வருமான வரி செலுத்துவோரில் 53 சதவிகிதம் பேரிடம் ஆய்வு நடத்தியதில், பெரும்பாலானவர்கள் இன்று தாக்கல் செய்யவிருக்கும் பட்ஜெட்டில் பெரிய அளவில் மாற்றம் எதுவும் இருக்காது என்று தெரிவித்துள்ளனர். பெரிதும் எதிர்பார்க்கப்படும் மேட் வரி, பங்காதாயம் எனப்படும் ஈவுத்தொகை விநியோக வரி, கூடுதல் கட்டணம் மற்றும் செஸ் கட்டணம் போன்றவற்றிலும் பெரிய மாற்றம் எதுவும் இருக்காது என்றே பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் மாதச் சம்பளதாரர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பாக தனிநபர் வருமானவரி விலக்கு உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தியும், விவசாயிகளுக்கு ரூ.6000 நிதியுதவித் திட்டம் என பல கலர் கலரான ஜனரஞ்சகமான கவர்ச்சிகரமான வரிச்சலுகை திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த பியூஷ் கோயல், பட்ஜெட் பற்றி குறிப்பிடுகையில், இது வெறும் ட்ரெய்லர்தான், மெய்ன் பிக்ஸர் முழு பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று மாதச்சம்பளதாரர்களுக்கு ஐஸ் வைத்தார். அவருடைய வார்த்தைக்கு வலு சேர்ப்பது போல், மோடியும் பிரச்சார கூட்டத்தில் பேசும்போது இதே கூற்றை தெரிவித்தார். தற்போது ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியே வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்துவிட்டது.
கடந்த ஒரு மாதமாக சாதாரண பொதுஜனம் முதல் கார்பரேட் நிறுவனங்கள் வரை பெரும் ஆவலுடன் இதோ அதோ என்று எதிர்பார்க்கப்படுகிற நடப்பு 2019-20ஆம் ஆண்டுக்கான முழு முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவிருக்கிறது. பட்ஜெட்டுக்கான ஆலோசனைகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு தரப்பினருடன் கடந்த ஒரு மாதமாக ஆலோசனை நடத்தி முடித்து விட்டார்.
பட்ஜெட் ஆலோசனையில் வர்த்தகர்கள், தொழில் துறையினர், வரி ஆலோசகர்கள், பொருளாதார நிபுணர்கள், வங்கி மற்றும் நிதித்துறை வல்லுநர்கள் என பலதரப்பினரும் தங்கள் துறை சார்ந்த திட்டங்களுக்கு முக்கியத்துவம் வேண்டும் என்றும், அதிக வரிச் சலுகை வேண்டும் என்றும் நிதியமைச்சருடன் மல்லுக்கட்டி வந்தனர்.
அதில் அதிகம் எதிர்பார்ப்புடன் இருப்பவர்கள் தொழில் துறையினரும், தனிநபர் பிரிவினர் மற்றும் மாதச் சம்பளதாரர்கள் தான். இவர்களால் தான் மத்திய அரசுக்கு கிட்டத்தட்ட 70 சதவிகித வருமான வரி கிடைக்கிறது. எனவே தங்களுக்குத்தான் அதிக முன்னுரிமை வேண்டும் என்று மாதச்சம்பளதாரர்கள் எதிர்பார்ப்பதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகின.
இறுதியில் அனைத்து தரப்பினருடனும், ஆலோசனைகளை முடித்து ஒரு நல்ல நாள் பார்த்து அல்வாவும் கிண்டி சாப்பிட்டு முடித்த கையோடு பட்ஜெட் அச்சடிக்கும் பணியும் நடந்து முடிந்துவிட்டது. இந்நிலையில் பெரு நிறுவனங்களும் மாதச் சம்பளதாரர்களில் பெரும்பாலானவர்களும் அதிக வரிச்சலுகை வேண்டாம் என்று தெரிவித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
பட்ஜெட்டுக்கு முன்பான சர்வே ஒன்றை கேபிஎம்ஜி (KPMG) நிறுவனம் நடத்தியுள்ளது. அதில் வருமான வரி செலுத்துவோரில் 53 சதவிகிதம் பேரிடம் ஆய்வு நடத்தியதில், பெரும்பாலானவர்கள் இன்று தாக்கல் செய்யவிருக்கும் பட்ஜெட்டில் பெரிய அளவில் மாற்றம் எதுவும் இருக்காது என்று தெரிவித்துள்ளனர்.
அதேபோல், சுமார் 27 சதவிகிதம் பேர் அதிக அளவில் வரிச் சலுகை இருக்கக்கூடும் என்றும், 20 சதவிகிதம் பேர் உறுதியாக எதுவும் கூறமுடியாது என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் நடப்பு பட்ஜெட்டில் பெரிய அளவில் வரிச் சீர்திருத்தக் கொள்கையோ அல்லது நேரடி வரிகளுக்கான திருத்தங்களோ இருக்காது என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.
பெரிதும் எதிர்பார்க்கப்படும் மேட் வரி, பங்காதாயம் எனப்படும் ஈவுத்தொகை விநியோக வரி, கூடுதல் கட்டணம் மற்றும் செஸ் கட்டணம் போன்றவற்றிலும் பெரிய மாற்றம் எதுவும் இருக்காது என்றே பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
மாதச்சம்பளதாரர்களில் பெரும்பாலானவர்கள் வருமான வரிவிலக்குக்கான அடிப்படை உச்சவரம்பான ரூ.2.5 லட்சத்தை அதிகரிக்கவேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். அதே போல், ரூ.250 கோடிக்கு மேற்பட்ட விற்றுமுதல் கொண்ட நிறுவனங்களில் 46 சதவிகிதம் பேர் நிறுவன வரி குறைப்பு இருக்காது என்றும் 39 சதவிகிதம் பேர் வரி குறைக்கப்படும் என்றம் கருத்து தெரிவித்துள்ளனர்.
எது எப்படி இருந்தாலும், இன்னும் சில மணி நேரங்களில் பூனைக்குட்டி வெளியே வந்துதானே தீரும். அப்போது தெரிந்துவிடும்.