டெல்லி: இன்று காலையில் வர்த்தகம் தொடங்கியபோது உயர்வுடனேயே இருந்த இந்திய பங்குச் சந்தைகள் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போது ஊசலாட்டத்துடனேயே இருந்துவருகிறது. சந்தைக்கு சாதகமான அம்சங்கள் இருந்தால் மேலே முன்னேறும் என்றம் இல்லாவிட்டால் சரியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய வர்த்தகத்தின் தொடக்கத்தில் தேசிய பங்குச்சந்தைக் குறியீடான நிஃப்டி 12 ஆயிரம் புள்ளிகளையும், மும்பை பங்குச் சந்தையானது 40 ஆயிரம் புள்ளிகளை தாண்டியும் வர்த்தகமான நிலையில் 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யும்போது தள்ளாட்டத்துடனேயே வர்த்தகமாகி வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே இந்திய பங்குச் சந்தைகள் பட்ஜெட் எதிர்பார்ப்பில் சற்று மேலேறி வர்த்தகமாகும். அதே சமயத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யும் தினத்தில் சற்று அதிகப்படியாக மேலேறி வர்த்தகமாகும். அல்லது அதிக அளவில் சரிவை சந்திக்கும்.
கடந்த பிப்ரவரி மாதத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தபோது நிலைமை வேறுவிதமாக இருந்தது. காரணம் முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் 5ஆம் ஆண்டின் இறுதியில் இருந்ததால் கடந்த ஜனவரி மாதத் தொடக்கத்தில் இருந்தே இந்திய பங்குச் சந்தைகள் சற்று தள்ளளாட்டத்திலேயே வர்த்தகமாகி வந்தன.
கடந்த ஜனவரியின் தொடக்கத்தில் தேசிய பங்குச்சந்தைக் குறியீடான நிஃப்டி 10868 புள்ளிகளிலும் மும்பை பங்குச் சந்தைக் குறியீடான பிஎஸ்இ 36198 புள்ளிகளிலும் இருந்தன. அதுவே இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்த பிப்ரவரி 1ஆம் தேதியன்று நிஃப்டி குறியீடு 10851 புள்ளிகளிலும் பிஎஸ்இ குறியீடானது 36311 புள்ளிகளிலும் இருந்தது.
இதற்கு முக்கிய காரணம் இடைக்கால பட்ஜெட்டுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளில் பெரும்பாலானவை பாஜக கூட்டணி எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாது என்ற காரணத்தினால் தான். இதனால் தான் சந்தைகள் எந்தப்பக்கமும் பாயாமல் அமைதியாகவே இருந்து வந்தது.
இதன் பின்னர், லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் மார்ச் மாதத்தில் இந்தியப் பங்குச்சந்தைகள் குதிரைப் பாய்ச்சலில் பாயத் தொடங்கியது. இதற்கு முக்கியமாக லோக்சபா கருத்துக் கணிப்புகள் எல்லாமே பாஜக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று அடித்துச் சொன்னது தான்.
கடந்த மார்ச் மாதத் தொடக்கத்தில் நிஃப்டி குறியீடு 10842 புள்ளிகளிலும், பிஎஸ்இ குறியீடானது 36018 புள்ளிகளிலும் இருந்த நிலையில் கருத்துக் கணிப்புகளின் துணையுடன் சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டன. முதல் கட்ட தேர்தல் நடப்பதற்கு முன்பாக ஏப்ரல் 16ஆம் தேதி வரையிலும் சுமார் 8 சதவிகிதம் வரையிலும் அதிகரித்து வர்த்தகமானது.
பின்னர் தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை முடிந்த உடனே சிறிது அதிகரித்து நிஃப்டி குறியீடானது 12000 என்ற புதிய உச்சத்தையும் பிஸ்இ குறியீடானது 40000 என்ற உச்சத்தையும் தொட்டு திரும்பியது. அதன்பின்னர் வழக்கம்போலவே தினந்தோறம் ஊசலாட்டத்துடனேயே வர்த்தகமாகி வந்தது.
இதற்கு முக்கியமாக பட்ஜெட்டில் சந்தைக்கு சாதகமான விஷயங்கள் எதுவும் இருக்காது என்றும், பட்ஜெட்டில் தொழில்துறையினருக்கும் அந்நியா நேரடி முதலீகளுக்கும் அளிக்கும் முக்கியத்துவத்தை வைத்து தொடர்ந்து மேலே செல்லலாமா அல்லது யூடர்ன் அடித்து கரடியின் பிடியில் சிக்கலாமா என்று யோசித்ததே.
அதற்கு ஏற்றார்போலவே, இன்று காலையில் சற்று ஏற்றத்துடன் வர்த்தகமாகி வந்த இந்திய பங்குச் சந்தைகள் பட்ஜெட் அறிவிப்புகள் வெளிவர ஆரம்பித்த உடனேயே சரிய ஆரம்பித்தன. வர்த்தகத்தின் தொடக்கத்தில் நிஃப்டி குறியீடு 11965 புள்ளிகளுடனும், பிஎஸ்இ குறியீடு 39977 புள்ளிகளுடனும் வர்த்தகத்தை தொடர்ந்த நிலையில் தற்போது அதிக ஊசலாட்டத்துடன் வர்த்தகமாகி வருகின்றன.
இன்றைக்கு பட்ஜெட் அறிவிப்புகள் முழுமையாக வெளிவந்த பிறகுதான், இந்தியப் பங்குச் சந்தைகள் எந்தப் பக்கம் செல்வது என்று முடிவெடுக்கும் என்பது நிச்சயம். அது வரையிலும் திருவிழாவில் காணாமல் போன குழந்தை போல் திக்குத் தெரியாமல் அள்ளாடிக்கொண்டிருக்கும்